Sunday, July 17, 2016

தமிழின் மரணப்பயணத்திற்கும், தமிழர்களின் சீரழிவிற்கும்


'சுயநினைவற்ற'  பங்களிப்பு வழங்கிய குற்றவாளிகளா?

தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும்


அமெரிக்காவில் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பாகிய  'பெட்னா' (FeTNA)  மற்றும் நியுஜெர்சி தமிழ்ச் சங்கம் இணைந்து, அண்மையில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவை நடத்திய செய்திகளை, இணைய வழியில் அறிந்தேன். (http://fetnaconvention.org/)


2016இல் நடந்த‌, அந்த நிகழ்ச்சி தொடர்பான ஆய்வுரைகளிலும், விவாதங்களிலும், தீர்மானங்களிலும்;

2014இல் வெளிவந்த‌,  கீழ்வருபவை  இடம் பெற்றதா? என்பது தெரியவில்லை.

தனித் தமிழ் இயக்கங்கள் எல்லாம்,  'அறிவுபூர்வ' பார்வையின்றி, உணர்ச்சிபூர்வமாக பயணித்து, பெரும்பாலான தமிழர்களிடமிருந்து அந்நியமாகி விட்டார்களா? என்ற கேள்வியை கீழ்வரும் 2014 செப்டம்பர் பதிவில் எழுப்பியிருந்தேன்.‘ தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3);     சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்’ : https://tamilsdirection.blogspot.com/2014_09_01_archive.html

அதில் உள்ள முக்கிய பகுதிகள் வருமாறு:

“ஒரு மொழியில் உள்ள மொத்த விதிகளின் கூட்டே அம்மொழியின் இலக்கணமாகும்.( The sum of the total rules found in any one language is known as a grammar)  இலக்கணம் என்பதற்கு இரண்டு வகையான பொருள் உண்டு. அம்மொழி பேசும் மக்கள் இயல்பாக பயன்படுத்தும் விதிகள் தொடர்பான இலக்கணம் ஒரு வகையாகும்.இரண்டாவது வகை என்பது மொழியியலாளர் அந்த விதிகளை விதி அமைப்பிற்கு உட்படுத்துவதாகும். (grammar, a term which is often used interchangeably by linguists to mean two different things: first the rules applied subconsciously by the speakers of a language; secondly a linguist’s conscious attempt to codify these rules.) இலக்கணங்களில் மாற்றங்கள் நுற்றாண்டுகளிலும் நடக்கலாம்; ஒரு நபரின் வாழ்நாள் காலத்திற்குள்ளேயும் நடக்கலாம், (Grammars fluctuate and change over the centuries, and even within the lifetime of individuals).  (Page 16, - Language change : progress or decay?  Third edition – JEAN AITCHISON, Professor of Language and Communication, University of Oxford- Cambridge University Press - 2001);
தமிழைப் பொறுத்த மட்டில், சாதாரண மக்கள் மட்டுமின்றி, பிரபல எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தமிழ் இலக்கண நூல்களில் உள்ள‌ இலக்கண விதிகளைப் பின்பற்றுவதில்லை என்பதை உரிய சான்றுகளுடன் முனைவர் இரா.திருமுருகன் தனது 'மொழிப் பார்வைகள்' என்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

தொல்காப்பியம் தொடங்கி நன்னூல் வரை இலக்கண விதிகளில் நடந்துள்ள மாற்றங்களின் சமூக வரலாற்றுப் பின்னணி என்ன? அந்த விடையின் வெளிச்சத்தில், தமிழ்ச் சமூகத்தில் நடந்து வரும் மாற்றங்களை - குரலொலியிலும் vocal sounding, செவி உணர்விலும் aural perception, காட்சி உணர்விலும் visual perception, எழுத்து முறையிலும் writing methods ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் - கணக்கில் கொண்டு இலக்கண விதிகளிலும் மாற்றங்கள் செய்ய, உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? அத்தகைய முயற்சிகளுக்கே வழியில்லாதவாறு, 'திராவிட' அரசியலில், அடிவருடி போக்கில், தமிழ் சிறைபட்டுள்ளதா?

மனிதரின் கால் மாற்றத்திற்குட்பட்டு, வளர்ச்சியில் பெரிதாகலாம்; அல்லது வீக்கத்தில் பெரிதாகலாம். எப்படியிருந்தாலும், காலுக்கு ஏற்றவாறு செருப்பைத் தானே பெரிது படுத்த வேண்டும். வீக்கத்தில் பெரிதாகியிருந்தால், விக்கம் வடிந்து, கால் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், செருப்பையும் பழைய நிலைக்கே திருத்தி அமைக்கலாம். வளர்ச்சியில் பெருகியிருந்தால், அதற்கேற்றார்ப்போல் செருப்பை செம்மையாகப் பெரிதுபடுத்துவது தானே புத்திசாலித்தனம். 

அதை பற்றிய புரிதலின்றி, இலக்கண விதிகளை 'பீடத்தில்' வைத்து, மாற்றங்களைக் கணக்கில் கொள்ளாமல்,  தமிழ் உயர் பீட  (Ivory Tower) புலமையாளர்கள்,  சாதாரண தமிழர்களை அந்த விதிகளில் சிக்க வைத்த முயற்சிகளும், அவர்களை இலக்கண விதிகளிலிருந்து தப்பி ஓடத் தூண்டியதா? அந்த 'உயர் பீட' புலமையாளர்களில் பலர்,  தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து, வெளியில் தமிழ்வழி ஆதரவாளர்களாக 'காட்சி' கொடுத்தால், அவர்களை யார் மதிப்பார்கள்? “

இதில் கொடுமை என்னவென்றால், அறிவியல் தொழில்நுட்ப சொற்களையெல்லாம், (ஜ‌ப்பான் மொழியில் செய்வது போல), ஓசை ஒற்றுமையில் (Phonetic) தமிழில் இறக்குமதி செய்யாமல். பொருள் மொழி பெயர்ப்பு  (Semantic) செய்து, தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில், தமிழ்வழியில் +2 பயின்ற மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணகர்த்தாக்களாக, தனித்தமிழ் கட்சிகள் இருக்கின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.  

தமது குடும்பப் பிள்ளைகளுக்கு 'ஆங்கில வழிக் கல்வி', ஊரான் வீட்டுப் பிள்ளைகளுக்கு 'தமிழ்வழிக் கல்வி'  ‘ என்று பயணித்து;

தமிழ் இலக்கணத்தை,  உலக அளவிலான ஆய்வுமுடிவுகளின் அடிப்படையில் வளர்த்தெடுக்காமல், தமிழின் மரணப்பயணத்திற்கும், தமிழர்களின் சீரழிவிற்கும், 'சுயநினைவற்ற'  பங்களிப்பு வழங்கிய குற்றவாளிகளா, தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும்?

என்ற கேள்வியை  எழுப்புவதற்கான காரணம் வருமாறு.

“இலக்கணத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு சமூக அர்த்தத்தைப் பிரதிபலிக்கிறது என்பதைவிட உருவாக்குகிறது. எனவே சமூக மாற்றத்தில் அது ஒரு விசையாக (Force) இருக்கிறது. (“  variation does not simply reflect,but constructs, social meaning, hence is a force in social change’ - 'Language variation, contact and change in grammar and sociolinguistics' by Tor A. Afrali & Brit Maihlum, Norwegian University of Science & Technology) எனவே தமிழ் மொழியின் இலக்கண விதிகள், தமிழர்களின் தகவல் பரிமாற்றத்தில் பலகீனமாகி வருவது என்பது தமிழர் சமூக வீழ்ச்சியின் விசையாக இருக்கிறது. இந்த பின்னணியில்  ஏற்கனவே பார்த்த, கீழ்வரும் தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.

மக்களின் மொழியும் அவர்களின் அடையாளமும் நெருக்கமான தொடர்புள்ள‌வையாகும். தமது மொழி பயனற்றது என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு (social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide) , போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use)  போன்றவை அதிகரிக்கும். ‘ (http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm) 1970களில் தொடங்கிய ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சி காரணமாக விளைந்த, தாய்மொழி அடிப்படையிலான அடையாளச் சிதைவே, சாதி அடையாளமானது, வரம்பு மீறிய சாதி வெறியாக, ஒரு வகை போதையாக, பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே,  வளர்ந்ததற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

ஒரு மனிதரின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு மற்றும் நிகழ்கால சமூக தேவைகள் ஆகியவற்றின் அடிப்படைகளிலான அடையாளகூறுகளுக்கு இடையிலான சமநிலையானது (equilibrium), சீர்குலைவிற்குள்ளாகும்போது, வலுவிழந்த (தாய்மொழி) அடையாளக் கூறுகளின் 'ஈடுபாடுகள்' (interests), இயல்பாக வாய்ப்புள்ள அடையாள கூறு (சாதி,சாகசம்,etc) நோக்கி, இடப்பெயர்ச்சிக்குள்ளாகி, அந்த அடையாளக்கூறானது, 'அளவுக்கு மிஞ்சிய நஞ்சாக' மாறும் விளைவினை ஏற்படுத்துமா? என்ற ஆய்விற்குதவும் நாடாக, தமிழ்நாடு உள்ளது.” (http://tamilsdirection.blogspot.in/2014_09_01_archive.html  )

தமிழ்நாட்டில் சமூக சமநிலை (equilibrium) சீர்குலைவானது, 1944இல் முளைவிட்டு, 1967 இல் ஆட்சி அதிகாரப் போக்கில் ஊழல் சீரழிவைத் துவக்கி, 1970களில் வீரியம் பெற்று, இன்று சாதி/மத வெறி மோதல்களும், மாணவர்கள் மத்தியில் கொலை, தற்கொலை, திருட்டு போன்றவைகளும், குடும்பங்களில் சீர்குலைவும் உச்சத்தில் உள்ளனவா? 

இத்தகைய சமூக சூழலே, தமிழைச் சரியாக உச்சரிக்க தெரியாத நடிகர்கள் திரைத்துறையில், அதிக செல்வாக்குடன் வலம் வருவதற்கும், அபத்தமான எழுத்துப் பிழைகளுடன் கட்சிகளின்/திரை ரசிகர்களின், 'ஃப்ளக்ஸ் பேனர்கள்' பொது இடங்களில் இடம் பெறுவதற்கும் காரணமா? கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர்களை, 'கடவுள்களாக' கருதி, 'கடவுளுக்கான வழிபாட்டு முறைகள்' எல்லாம் இடம் பெயர காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

ஆக சமூகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களோடு இயைந்து, அறிவுபூர்வமாக வளர்ச்சி நோக்கிய திசையில் இலக்கணத்தில் மாற்றங்கள் ஏற்பட வழியின்றி, உயர்பீட (Ivory Tower) சிறையில், தனித்தமிழ் அமைப்புகளும் பற்றாளர்களும் காவல் காக்க, தமிழ் இலக்கணமானது சிறையுண்டிருக்கிறதா? அதன் விளைவாக;

தமிழும் ஆங்கிலமும் கலந்து,
நமக்கே புரியாத புதிய இலக்கண விதிகளையும், புதிய சொற்களையும் தாமாகவே உருவாக்கி, இன்று மாணவர்களும், இளைஞர்களும், தமிங்கிலீசர்களாக பயணிக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்


'வந்தது வளர்த்து வருவது ஒற்றி'(சிலப்பதிகாரம்:அரங்;65) இசைக்கு மட்டுமின்றி, இலக்கணத்திற்கும் பொருந்துவதாகும். தமிழில் தொல்காப்பியம் தொடங்கி, இன்றுவரை வெளிவந்துள்ள இலக்கண நூல்களை கணக்கில் கொண்டு, உலகில் இலக்கணம் தொடர்பான ஆய்வுகளையும் கருத்தில் கொண்டு, நிகழ்கால சமூக மாற்றங்களுக்கேற்ற வகையில் இலக்கணத்தை ‘வளர்த்து’, வரவிருக்கும் மாற்றங்களோடு ‘ஒற்றி’ பயணிப்பதே சரியான வளர்ச்சி ஆகும். அதில் தவறினால், அந்த 'தொடர்பு' முறிந்து, மேலே குறிப்பிட்ட 'திரிந்த' திசையில், புதிய இலக்கண விதிகளையும், புதிய சொற்களையும் தாமாகவே உருவாக்கி, ‘இளைய’ தமிழர்கள் தமிங்கிலீசர்களாக‌ பயணிப்பதை குறை சொல்ல முடியாது; அவர்கள் மீது கோபப்படுவதிலும் அர்த்தமில்லை. 

தனித்தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்பினால், அவ்வாறு புதிய 'தமிங்கிலீஸ்' மூலம், தமிழ் எவ்வாறு மரணத்தைத் தழுவி வருகிறது? என்பது தொடர்பான விளக்கத்திற்கு: 

https://aeon.co/essays/why-language-might-be-the-optimal-self-regulating-system?utm_source=Aeon+Newsletter&utm_medium=email&utm_campaign=GENTLE_READER_2018_12_07

எல்லை மீறி போவதற்குள், மீட்பு முயற்சிகளை மேற்கொள்ளாவிடில், தமிங்கிலீசின் செல்வாக்கில், தமிழ் இன்னொரு பாலி மொழியாகிவிடும் ஆபத்தும் இருக்கிறது; 1944-இல் தி.க தோன்றி, அதன் தொடர் விளைவாக 1967 முதல் 'திராவிட' கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சிக்கியதற்கு 'விலையாக'(?).
 

தமிழ்நாட்டில் தமது குடும்பப் பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைக்காத, அல்லது அதற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்காத, தமிழ்வழிக் கல்வி மரணமடைந்து வரும், தமிழ்நாட்டில் வாழும் தனித்தமிழ் பற்றாளர்கள், பொதுவாழ்விலிருந்து ஒதுங்குவதே, தமிழின் மரணப்பயணத்தை தடுத்து நிறுத்த உதவும்.

உணர்ச்சிபூர்வ போதைகளிலிருந்து விடுபட்டு, திறந்த மனதுடன் அறிவுபூர்வமாக உலக ஆய்வுகளை கணக்கில் கொண்டு, உரிய மாற்றங்களுடன்; (https://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

தனித்தமிழ் அமைப்புகள்/பற்றாளர்கள் எல்லாம், தமிழ் மக்களிடமிருந்து அந்நியமாகி வரும் போக்கை தடுத்து நிறுத்தி, நேசமாகி;

தமிழுடனும், தமிழ் இலக்கணத்துடனும், சரியான தொடர்புடன்,  குறைந்த பட்சம் தமிழ் எழுத்தாளர்களும்,  பேச்சாளர்களும், பயணிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.

No comments:

Post a Comment