Saturday, September 27, 2014

  தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3)   


சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்



ஒரு மொழி மரணத்தை எதிர்நோக்கியுள்ள அபாயம் விளைவதற்குக் காரணமான அக விசைகளாக(Internal forces) , அம்மொழி மீது அம்மொழிபேசும் மக்களுக்குள்ள எதிர்மனப்பாங்கு (community’s negative attitude towards  its own language  ) இருப்பது பற்றிய ஆபத்தை முந்தையப் பதிவில் பார்த்தோம். தமிழ் மொழியின் இலக்கணத்தில் வெளிப்பட்டு வரும் வீழ்ச்சியும் தமிழின் வீழ்ச்சியோடும் தமிழரின் வீழ்ச்சியோடும் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

ஒரு மொழியில் உள்ள மொத்த விதிகளின் கூட்டே அம்மொழியின் இலக்கணமாகும்.( The sum of the total rules found in any one language is known as a grammar)  இலக்கணம் என்பதற்கு இரண்டு வகையான பொருள் உண்டு. அம்மொழி பேசும் மக்கள் இயல்பாக பயன்படுத்தும் விதிகள் தொடர்பான இலக்கணம் ஒரு வகையாகும்.இரண்டாவது வகை என்பது மொழியியலாளர் அந்த விதிகளை விதி அமைப்பிற்கு உட்படுத்துவதாகும். (grammar, a term which is often used interchangeably by linguists to mean two different things: first the rules applied subconsciously by the speakers of a language; secondly a linguist’s conscious attempt to codify these rules.) இலக்கணங்களில் மாற்றங்கள் நுற்றாண்டுகளிலும் நடக்கலாம்; ஒரு நபரின் வாழ்நாள் காலத்திற்குள்ளேயும் நடக்கலாம், (Grammars fluctuate and change over the centuries, and even within the lifetime of individuals).  (Page 16, - Language change : progress or decay?  Third edition – JEAN AITCHISON, Professor of Language and Communication, University of Oxford- Cambridge University Press - 2001)

தமிழைப் பொறுத்த மட்டில், சாதாரண மக்கள் மட்டுமின்றி, பிரபல எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தமிழ் இலக்கண நூல்களில் உள்ள‌ இலக்கண விதிகளைப் பின்பற்றுவதில்லை என்பதை உரிய சான்றுகளுடன் முனைவர் இரா.திருமுருகன் தனது 'மொழிப் பார்வைகள்' என்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு இலக்கணத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு சமூக அர்த்தத்தைப் பிரதிபலிக்கிறது என்பதைவிட உருவாக்குகிறது. எனவே சமூக மாற்றத்தில் அது ஒரு விசையாக (Force) இருக்கிறது. (  variation does not simply reflect,but constructs, social meaning, hence is a force in social change’ - 'Language variation, contact and change in grammar and sociolinguistics' by Tor A. Afrali & Brit Maihlum, Norwegian University of Science & Technology) எனவே தமிழ் மொழியின் இலக்கண விதிகள், தமிழர்களின் தகவல் பரிமாற்றத்தில் பலகீனமாகி வருவது என்பது தமிழர் சமூக வீழ்ச்சியின் விசையாக இருக்கிறது. இந்த பின்னணியில்  ஏற்கனவே பார்த்த, கீழ்வரும் தகவல் முக்கியத்துவம் பெறுகிறது. 

"A letter has both the acoustic dimension matching the vocal characteristics of the people related to the language and the visual dimension matching the writing skills of the people. In accordance with the changes in the mode of writing (& now typing) the shape of the letters would undergo changes unlike the acoustic dimension in which changes will be slow since the vocal characteristics would not change as much as in the mode of writing. Over a period of time depending on the changes in the life style, the vocal characteristics of the people might change. (Failure to the timely accommodation of the changes into the grammar rules might be one of the reasons for the widening gap between the modern Tamil and the language grammar)." ( http://musictholkappiam.blogspot.sg/2013/03/normal-0-false-false-false_29.html )

‘மக்களின் மொழியும் அவர்களின் அடையாளமும் நெருக்கமான தொடர்புள்ள‌வையாகும். தமது மொழி பயனற்றது என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு (social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide) , போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use)  போன்றவை அதிகரிக்கும். ‘ (http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm) 1970களில் தொடங்கிய ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சி காரணமாக விளைந்த, தாய்மொழி அடிப்படையிலான அடையாளச் சிதைவே, சாதி அடையாளமானது, வரம்பு மீறிய சாதி வெறியாக, ஒரு வகை போதையாக, பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே,  வளர்ந்ததற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

ஒரு மனிதரின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு மற்றும் நிகழ்கால சமூக தேவைகள் ஆகியவற்றின் அடிப்படைகளிலான அடையாளகூறுகளுக்கு டையிலான சமநிலையானது (equilibrium), சீர்குலைவிற்குள்ளாகும்போது, வலுவிழந்த (தாய்மொழி) அடையாளக் கூறுகளின் 'ஈடுபாடுகள்' (interests), இயல்பாக வாய்ப்புள்ள அடையாள கூறு (சாதி,சாகசம்,etc) நோக்கி, இடப்பெயர்ச்சிக்குள்ளாகி, அந்த அடையாளக்கூறானது, 'அளவுக்கு மிஞ்சிய நஞ்சாக' மாறும் விளைவினை ஏற்படுத்துமா? என்ற ஆய்விற்குதவும் நாடாக, தமிழ்நாடு உள்ளது.

ஒரு மொழியின் இலக்கணம் என்பதும் அம்மொழி பேசும் மக்கள் சமூகத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள், மொழியிலும், குறிப்பாக இலக்கணத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்துவது பற்றி நிறைய ஆய்வுகள் நடந்துள்ளன. அம்மாற்றங்கள் வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பது அச்சமூகம் பெற்ற மாற்றங்கள் வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பதைப் பொறுத்ததாகும்.

ஒரு சமூகத்தில் உள்ள மக்கள் தமது தகவல் பரிமாற்றத்திற்கு தமது தாய் மொழியை எந்த அளவுக்கு பயன்படுக்கிறார்கள்? எந்த அளவுக்கு இலக்கண விதிகளைப் பின்பற்றுகிறார்கள்? போன்ற கேள்விகளும்; எந்த அளவுக்கு தமது பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளிலான‌ சமூக நெறிமுறைகளை தமது வாழ்வில் பின்பற்றுகிறார்கள் என்ற கேள்வியுடன் தொடர்பு கொண்டுள்ளவையாகும். 

ஒரு சமூகத்தின் பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில் செயலில் உள்ள சமூக நெறிமுறைகளின் வலிமையும், அல்லது குறைபாடுகளும்,  அச்சமூகத்தின் தர அடையாள (benchmark) வலிமையாகவோ அல்லது குறைபாடாகவோ வெளிப்படும். ஒரு சரியான தர அடையாளமுள்ள சமூகத்தில், தொழில், வியாபாரம் உள்ளிட்ட துறைகளில் 'உரிய' தகுதியும் திறமையும் உள்ளவர்களே செல்வம் சம்பாதிக்க முடியும்.கல்வியில் தகுதியும் திறமையும் உள்ளவர்களே அச்சமூகத்தில் 'அறிவு' சம்பந்தப்பட்ட துறைகளிலும், அமைப்புகளிலும் மேல் நோக்கி முன்னேற முடியும். அந்த போக்கில் அவர்கள் தமது தகவல் பரிமாற்றத்திற்கு தமது தாய் மொழியை நல்ல‌ அளவுக்கு பயன்படுத்துவார்கள்; நல்ல‌ அளவுக்கு  இலக்கண விதிகளைப் பின்பற்றுவார்கள்

அதற்கு மாறாக, மேலேக்குறிப்பிட்ட எந்த வகை தகுதி, திறமைகளும் இல்லாமல், மனசாட்சியையும், ஒழுக்க நெறிமுறைகளையும் ஒதுக்கி வைத்து, எல்லா வகையான 'தரகு'(Broker) பணிகளிலும் எந்த அளவுக்கு தகுதி, திறமைகள் உள்ளதோ, அந்த அளவுக்கு செல்வம், செல்வாக்கு சம்பாதிப்பதும், 'அறிவு' சம்பந்தப்பட்ட துறைகளிலும், அமைப்புகளிலும் கூட, மேல் நோக்கி முன்னேறவதும் ஆன போக்கில் தமிழ்நாடு இருந்தால், என்ன விளைவுகள் ஏற்படும்?  அத்தகையோர் தமது தகவல் பரிமாற்றத்திற்கு தமது தாய் மொழியை சிதைத்துப் பயன்படுத்துவதும்,  இலக்கண விதிகளைப் பற்றிய கவலையின்றி விருப்பப்போக்கில் சிதைப்பதுமே அவ்விளைவுகளாகும்.

தமிழ்நாட்டில் அந்த பாதகப் போக்கு எப்போது தோன்றி, எப்படி வளர்ந்தது, இன்று என்ன நிலையில் உள்ளது என்பது ஆராய்ச்சிக்கு உரியதாகும்.

அந்த ஆராய்ச்சியுடன் நெருக்கமாகக் கீழ்வரும் ஆராய்ச்சியையும் மேற்கொண்டால் தான், தமிழ் மொழியின் மரணப்பயணத்தைத் தடுத்து நிறுத்தி, சரியான திசையை நோக்கி திசை திருப்ப முடியும்.

தொல்காப்பியம் தொடங்கி நன்னூல் வரை இலக்கண விதிகளில் நடந்துள்ள மாற்றங்களின் சமூக வரலாற்றுப் பின்னணி என்ன? அந்த விடையின் வெளிச்சத்தில், தமிழ்ச் சமூகத்தில் நடந்து வரும் மாற்றங்களை - குரலொலியிலும் vocal sounding, செவி உணர்விலும் aural perception, காட்சி உணர்விலும் visual perception, எழுத்து முறையிலும் writing methods ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் - கணக்கில் கொண்டு இலக்கண விதிகளிலும் மாற்றங்கள் செய்ய, உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? அத்தகைய முயற்சிகளுக்கே வழியில்லாதவாறு, 'திராவிட' அரசியலில், அடிவருடி போக்கில், தமிழ் சிறைபட்டுள்ளதா?
(http://tamilsdirection.blogspot.co.uk/2016/07/fetna.html )

மனிதரின் கால் மாற்றத்திற்குட்பட்டு, வளர்ச்சியில் பெரிதாகலாம்; அல்லது வீக்கத்தில் பெரிதாகலாம். எப்படியிருந்தாலும், காலுக்கு ஏற்றவாறு செருப்பைத் தானே பெரிது படுத்த வேண்டும். வீக்கத்தில் பெரிதாகியிருந்தால், விக்கம் வடிந்து, கால் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், செருப்பையும் பழைய நிலைக்கே திருத்தி அமைக்கலாம். வளர்ச்சியில் பெருகியிருந்தால், அதற்கேற்றார்ப்போல் செருப்பை செம்மையாகப் பெரிதுபடுத்துவது தானே புத்திசாலித்தனம். அதை பற்றிய புரிதலின்றி, இலக்கண விதிகளை 'பீடத்தில்' வைத்து, மாற்றங்களைக் கணக்கில் கொள்ளாமல்,  தமிழ் உயர் பீட  (Ivory Tower) புலமையாளர்கள்,  சாதாரண தமிழர்களை அந்த விதிகளில் சிக்க வைத்த முயற்சிகளும், அவர்களை இலக்கண விதிகளிலிருந்து தப்பி ஓடத் தூண்டியதா? அந்த 'உயர் பீட' புலமையாளர்களில் பலர்,  தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து, வெளியில் தமிழ்வழி ஆதரவாளர்களாக 'காட்சி' கொடுத்தால், அவர்களை யார் மதிப்பார்கள்? எவ்வளவு உயர்ந்த செருப்பாயிருந்தாலும், காலுக்குப் பொருந்தவில்லையென்றால், காலை விட்டு விலகத்தானே நேரிடும். இந்த புரிதலின்றி, தனித் தமிழ் இயக்கங்கள் பயணித்து, பெரும்பாலான தமிழர்களிடமிருந்து அந்நியமாகி விட்டார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அந்த பெரும்பாலானவர்கள் 'நோயாளிகள்' என்றாலும், நோயாளிகளின் மேல் கோபப்படுவதா? அல்லது நோயை எவ்வாறு குணமாக்குவது என்று முயற்சிப்பதா? 

திறந்த மனதுடனும் அறிவு நேர்மையுடனும் மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகளைப் பெறுவதற்குக் கீழ்வரும்  முயற்சி துணை புரியலாம். 

 தமிழ்நாட்டில் வெளிவந்த இதழ்கள், புத்தகங்கள் 1944 வரை, 1944 முதல் 1949 வரை, 1949இலிருந்து 1967 வரை, 1967 இலிருந்து இன்று வரை என்ற காலக்கட்டங்களில், தமிழில் இலக்கண விதிகள் அந்த எழுத்துக்களில் எந்த அளவுக்குப் பின்பற்றப்பட்டன? என்ற ஆராய்ச்சி அவ்விடைகளைத் தரலாம். அந்த விடைகள் தமிழின் மரணப்பயணத்தைத் தடுத்து நிறுத்தி, வளர்ச்சியை நோக்கி திசை திருப்பும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க உதவலாம்.

குறிப்பு:
தாய் மொழிப்பற்றை 'தாய்ப்பால் பைத்தியம்' என்று கேலி செய்து. 'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என அறிவித்து, 'தமிழ்ப் பாரம்பரியமும் பண்பாடும் தமிழர்க்குக் கேடானவை' என்று, தமக்குக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு, பெரியார் ஈ.வெ.ரா அவர்கள்,   தமது அறிவு அனுபவ அடிப்படையில், பிரச்சாரம் செய்தார். தமது நிலைப்பாட்டிற்கு எதிரான சான்றுகள் வெளிப்பட்டு, தமக்கும் அது சரியெனப்பட்டால், தமது நிலைப்பாடு தவறு என்று பகிரங்மாக அறிவித்து, தனது நிலைப்பாட்டை, அவர் மாற்றிக் கொண்டதற்கு பல சான்றுகள் உண்டு. உலகிலேயே வெட்கப்படாமல் அது போன்று தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்து மாற்றிக் கொண்டவர் பெரியார் ஈ.வெ.ரா  மட்டுமே, எனக்கு தெரிந்த வரையில்.ஒரு மொழியானது அம்மொழி பேசும் மக்களின் அடையாளத்துடனும், அச்சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களினுடனும், எவ்வளவு நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளது, என்பது பற்றி உலக அளவில் வெளிப்பட்டுள்ள‌ சான்றுகளின் அடிப்படையிலும், பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி வெளிவந்துள்ள எனது ஆய்வுகளின் அடிப்படையிலும், பெரியார் ஈ.வெ.ரா இன்று உயிரோடு இருந்தால், தமிழைப் பற்றிய மேற்குறிப்பிட்ட  தனது நிலைப்பாடுகள் தவறு என்று அறிவித்து, தனது நிலைப்பாட்டைத் திருத்திக் கொண்டிருப்பார், என்பதை எவராலும் மறுக்க முடியுமா?

Friday, September 26, 2014



           தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (2)

உலகில் உள்ள மொழிகளில் மரணத்தை எதிர்நோக்கியுள்ள (Endangered)  மொழிகளை அடையாளம் கண்டு, மீட்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பயன்படும் ஒரு அரிய ஆவணத்தை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. 
 http://unesdoc.unesco.org/images/0018/001836/183699E.pdf

ஒரு மொழி மரணத்தை எதிர்நோக்கியுள்ள அபாயம் விளைவதற்குக் காரணமான அக விசைகளாக(Internal forces) , அம்மொழி மீது அம்மொழிபேசும் மக்களுக்குள்ள எதிர்மனப்பாங்கு (community’s negative attitude towards  its own language  ) இருக்கலாம். (Language endangerment may be caused by Internal forces, such as a community’s negative attitude towards its own language. ) 

தமது மொழி மீது மக்கள் கொண்டுள்ள மனப்பாங்கை(Community Members’ Attitudes towards Language )  கணக்கிட  கீழ்வரும் அட்டவணை உருவாக்கப்பட்டுளது.

Grade
Community Members’ Attitudes towards Language
 5
All members value their language and wish to see it promoted. - தமது மொழியை மதித்து,  அம்மொழி முன்னேற வேண்டும் என்று அனைவரும் விரும்புவது
 4
Most  members support language maintenance. மொழி தற்போதுள்ள நிலையில் தொடர்வதை பெரும்பான்மை மக்கள் ஆதரிப்பது
 3
Many members support language maintenance; others are  indifferent or may even support language loss. மொழி தற்போதுள்ள நிலையில் தொடர்வதை பலர் ஆதரிப்பது; மற்றவர்கள் அதைப்பற்றி கவலைப்படாதது அல்லது மொழியின் இழப்பை ஆதரிப்பது
2
Some members support language maintenance; others are  indifferent or may even support language loss. மொழி தற்போதுள்ள நிலையில் தொடர்வதை சிலர் ஆதரிப்பது; மற்றவர்கள் அதைப்பற்றி கவலைப்படாதது அல்லது மொழியின் இழப்பை ஆதரிப்பது
 1
Only a few members support language maintenance; others are  indifferent or may even support language loss. மொழி தற்போதுள்ள நிலையில் தொடர்வதை வெகு சிலர் மட்டும் ஆதரிப்பது; மற்றவர்கள் அதைப்பற்றி கவலைப்படாதது அல்லது மொழியின் இழப்பை ஆதரிப்பது
 0
No one cares if the language is lost; all prefer to use a dominant  language. மொழி இழந்து போவதைப் பற்றி எவரும் கவலைப் படாதது;எல்லோரும் செல்வாக்கான மொழியையேப் பயன்படுத்த விரும்புவது

மேற்குறிப்பிட்ட அட்டவணையில் இடம் பெறாத ஒரு பிரிவினர்  தமிழ்நாட்டில் உள்ளனர். அப்படிப்பட்ட பிரிவினர் உலகில் வேறு எந்த மொழியினரிலும் இல்லை என்பது அப்பிரிவு அட்டவணையில் இடம் பெறாததற்குக் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

தமது குடும்பத்திற்கு ஒரு நீதி (ஆங்கிலவழிக் கல்வி), பிற தமிழர்களுக்கு வேறு நீதி ( தமிழ்வழிக் கல்வி) என்ற இரட்டை வேடப்போக்கு அந்த வித்தியாசமான பிரிவினரின் தனித்துவமான (Unique) பண்பாகும். தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்துக் கொண்டு, தமிழ்வழியை ஆதரித்து பிரச்சாரங்கள், போராட்டங்கள் நடத்தும் வித்தியாசமான பிரிவினராக அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். இது போன்ற வித்தியாசமான பிரிவினர் அண்டையிலுள்ள கேரளா, கர்நாடகா, உள்ளிட்டு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலோ, அல்லது உலகில் வேறு எந்த மொழி பெசும் மக்களிடையேயோ இருப்பதாகத் தெரியவில்லை. இருந்திருந்தால் மேற்குறிப்பிட்ட யுனெஸ்கோ வெளியீடு அட்டவணையில் அந்த பிரிவினரும் இடம் பெற்றிருப்பார்கள். சுழிக்குக் (zero) கீழே எதிர்க்குறியிட்டு(Negative)  கடைசி வரிசையாகச் சேர்த்திருப்பார்கள். ஏனெனில், அந்த மொழியை மீட்க அவர்களை மீறி எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்க முடியாத அளவுக்கு எதிர்த்திசையில் அவர்களின் பங்களிப்பு இருக்கும்.


இதில் வினோதம் என்னவென்றால், தமிழ்நாட்டில் உள்ள 'தமிழ், தமிழ் இன உணர்வு' தொடர்பான அமைப்புகளில் எல்லாம் அந்த வித்தியாசமானப் பிரிவின‌ர் செல்வாக்காக உள்ளனர். தமது குடும்பப் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைத்து முன்னோடிகளாக இருப்பவர்கள் வசம் இப்படிப்பட்ட 'தமிழ், தமிழ் இன உணர்வு' தொடர்பான அமைப்புகள் இருந்தால் தான், மரணத்தை நோக்கிய தமிழின் பயணத்தைத் தடுத்து நிறுத்தி, மீட்சி நோக்கி திசை திருப்ப முடியும். அனுமதிப்பார்களா, அந்த வித்தியாசமான பிரிவினர்?

அவர்களை மீறி என்ன செய்யமுடியும் என்பதற்கு  ‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி’ ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ (http://en.wikipedia.org/wiki/D%27Arcy_Wentworth_Thompson  ) என்ற புத்தகத்தைப் படித்து, சமூகவியல் நோக்கில் தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு,  நான் மேற்கொண்டுவரும் ஆய்வுகள் துணைபுரிய வாய்ப்புண்டு.(“சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்  (Social Fibers & Social Bonds); http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

நமது குடும்பப் பிள்ளைகளைத் தமிழ் வழியில் படிக்க வைப்பதும், நம்மை மீறி நமது குடும்பத்தில் முடிவெடுக்கும் அளவுக்கு நமது நிலை பலகீனமாயிருந்தால், அதை வெட்கமின்றி பகிரங்கமாக ஒப்புக் கொண்டு, செயல்படுவதுமே தமிழின் மரண பயணத்தைத் தடுக்க உள்ள குறைந்தபட்சத் தகுதியாகும். அந்த அளவுக்கு நமக்கும் குடும்பத்துக்கும் உள்ள சமூக இழையையும்,  நாம்,  கீழ் குறிப்பிட்ட வழியில் பலகீனமாவதையும் ஏற்றுக் கொள்ளும் மனத் துணிச்சல் வேண்டும்.

“மனிதர்களின் மனங்களில் உள்ள 'தேவைகள்' (needs) , அத்தேவைகளின் அடிப்படைகளில் மனங்களில் தோன்றும் ‘ஈடுபாடுகள்'(interests)  ஆகியவை, அம்மனிதர்களின் ( மூளை உழைப்பு + உடலுழைப்பு + அவர் வசம் உள்ள பொருள் மூலம்) செயல்பாடுகளுக்கான  ஆற்றலை (Energy)  உருவாக்குகின்றன,” என்ற புரிதலுடன் தமிழின் மரணப்பயணத்தைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்ற தேவையை நமது மனதில் உணர்ந்து, அதற்கான ஈடுபாட்டை வளர்க்க வேண்டும். அதன் விளைவாக அப்பணிக்கான ஆற்றல் நம்மிடமிருந்து வெளிப்பட்டு, அப்பணி தொடர்பான வேலைக்கான விசைகளும் (Forces)  நம்மிடமிருந்து வெளிப்படும்.
நமக்கும் நமது குடும்பம், நட்பு, இயக்கம் உள்ளிட்ட சமுக வட்டத்தில் உள்ள‌ ஒவ்வொரு மனிதருக்கும் இடையிலான உறவை அடிப்படை யாகக் கொண்ட சமூக இழை எந்த பண்பின் அடிப்படையில் செயல்படுகிறது என்று நாம் கண்காணிக்க வேண்டும். அந்த கண்காணிப்பில்,  'தமிழ் உணர்வு, பகுத்தறிவு, பொதுவுடமை, ஆன்மிகம்' போன்ற பல வேடங்களில் , கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு இழிவானவர்களுடன், நாம் பழகியிருப்பது வெளிப்பட்டால், அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை.

சமூக இழைகள் என்பவை லாப நட்டம் பார்த்துப் பழகும் 'கள்வர்' பண்பு மாற்றத்திற்குள்ளாகும் போது, அந்த இழைகள் தொடர்புள்ள மனிதர்களின் மனங்களில் உள்ள 'தேவைகளும்', ஈடுபாடுகளும்' கள்வர் பண்புமாற்றத்திற்குள்ளாவதைத் தடுக்க முடியாது. மேற்குறிப்பிட்ட கண்காணிப்பின்றி அதைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. அத்தகைய 'கள்வர்' பண்பு மாற்றத்திற்குள்ளனவர்களே மேற்குறிப்பிட்ட இரட்டை வேடப்போக்குள்ள‌ வித்தியாசமான பிரிவினராவர். 

அதை அவர்களுக்குச் சுட்டிக்கட்டி, திருந்த அவகாசம் தர வேண்டும். திருந்த மறுப்பவர்களை விட்டு, இயன்றவரை அவர்களைப் புண்படுத்தாமலேயே விலகுவது சாத்தியமே. நாம் விலகத் தவறினால், நம்மையறியாமலேயே, அவர்கள் மூலமாக தமிழின் மரணப் பயணத்திற்கு நாம் பங்களிப்பு வழங்குவதைத் தவிர்க்க முடியாது. நாமோ, நமது தொடர்புகளாகிய சமூக இழைகளோ 'கள்வர்' நோயில் சிக்கியுள்ளதா? இல்லையா? என்பது பற்றி கவலைப் படாமல், தமிழ் மொழியின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது.

தமிழ்நாட்டில் தமிழர்களிடையே  தாய்மொழிப் பற்றுடன்,நல்ல சமுக பண்புகளுடன் குடும்பம்,நட்பு உள்ளிட்டு 'அன்பின்' அடிப்படையில் இருந்த மனித உறவுகளெல்லாம்‍ சமூக இழைகளெல்லாம்‍ , 'எந்த வழியிலும்' பிழைப்பதே புத்திசாலித்தனம் என்ற பண்பு மாற்றத்திற்குள்ளானதே தமிழின் மரணப் பயணத்தின் முக்கிய காரணமாகும்.
தமிழின் மரணத்திற்கு பங்களிப்பு  வழங்கி,  குற்ற உணர்வுடன் வாழ்வதைத் தவிர்ப்பதற்கு, மேலேக் குறிப்பிட்ட முறையில் தனிமனித ராணுவம் போல நாம் செயல்படுவது சாத்தியமே.

நம்மைப் போன்று லாப நட்ட நோக்கற்ற உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ்பவர்களை அடையாளம் கண்டு பிணைப்புகள்(Bonds)  ஏற்படுத்தவும் நமது ஆற்றல்களைச் செலவழிக்கலாம்.திரிந்த பண்புகளுடன்  உள்ள சமுக இழைகள் மற்றும் சமூக பிணைப்புகளிடமிருந்து புத்திசாலித்தனமாக ஒதுங்கி, தமிழின் மரணப் பயணத்திற்கு எதிராக, நமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழலாம். அவ்வாறு வாழ்வதில்  உள்ள அமைதியும்,  சாகசமாக நாம் அனுபவிக்கக் கூடிய சிரமங்களும்,மகிழ்ச்சியும் எவ்வளவு சிறப்பானது என்று வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும். தமிழ் மொழியின் மரணப்பயணத்திற்கு எதிராக,நமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழும்போது அனுபவிக்க வாய்ப்புள்ள இன்பங்களை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (“இன்பத்தைத் திருடும் ஒப்பீடு"; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html ) நீண்ட நெடி ய பாரம்பரியமும், அறிவுச் செல்வங்களும் உள்ள‌  தமிழின் பலம் இந்த முயற்சிகள் வெற்றி பெற துணை புரியும்.

 
 

Wednesday, September 24, 2014


பாடல் எழுத்தொலியின் சுருதி சுத்தம் (pitch accuracy of the letter’s sound in a song) வைர‌முத்துக்குத் தெரியாதா?




'சுதேசி செய்தி' (மே, 2014) இதழில், 'திறவுகோல்' என்ற தலைப்பில், திரு. என்.சொக்கன் எழுதியுள்ள 'வண்ண வண்ண பூக்கள்' என்ற புத்தகம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் கீழ்வரும் பகுதி எனது கவனத்தை ஈர்த்தது.

" 'ஈரமான ரோஜாவே' பாட்டில் ஒரு வரி. 'தண்ணிரில் மூழ்காது காற்றுள்ள பந்து' என்று வரும்.யேசுதாஸ் ' தண்ணிரில் மூள்காது" என்று பாடினாராம்.
உடனே வைரமுத்து திருத்தியிருக்கிறார்." மூள்காது இல்லை, மூழ்காது"
யேசுதாஸ் பக்கா Professional. கவிஞர் சொன்னபடி திருத்திப் பாடினார்.

ஆனால் இப்போதும் "மூழ்காது" வரவில்லை.'மூள்காது"வுக்கும், மூழ்காது'வுக்கும் இடையே ஏதோ ஒரு சத்தம் தான் வருகிறது.

வைரமுத்து சும்மா இருந்திருக்கலாம். 'சீனியர் பாடகர், தேன் போலக் குரல், அதில் பிழைகள் தெரியாது, போகட்டும்' என்று விட்டிருக்கலாம். ஆனால் அவரோ விடாமல் திருத்துகிறார். 'மூழ்காது'ன்னு அழுத்திப் பாடுங்க'.

யேசுதாஸ் ஒருமுறை, இரண்டு முறை, மூன்று முறை திருத்திப் பாடி பார்த்தார்.முடியவில்லை.கடைசியில் அவருக்குக் கோபம், 'நான் சாகும் வரை திருத்துவீங்கள்களா?' என்று வைரமுத்து மேல் எரிந்து விழுந்தாராம்.
அதற்கு வைரமுத்து சொன்ன பதில், ' தமிழ் சாகாத வரைத் திருத்துவேன்' “
-'சுதேசி செய்தி' (பக்கம் 26: மே, 2014)

மேலேக் குறிப்பிட்ட பகுதி இன்றைய திரைப்பாடல்களில் உள்ள குறையை விளங்கிக் கொள்ள துணை புரியும். அதை அடுத்து பார்ப்போம்.

ஒரு பாடலில் வரும் எழுத்தின் ஒலி சுருதி சுத்தமாக (accurate pitch) பாடலுக்கான இசையுடன் பொருந்த வேண்டும். அதாவது எழுத்தின் ஒலியும் சுருதியும் ஒன்றுடன் ஒன்று முழுமையாகப் பொருந்த வேண்டும். அதை தொல்காப்பியம் ( எழுத்து: 1;33)

 'இசையொடு சிவணிய நரம்பின் மறைய‌
 என்மனார் புலவர்' என்று தொல்காப்பியத்திற்கு முன்னர் வழக்கில் இருந்த சூத்திரம் மூலம் விளக்கியுள்ளது.

'சிவணிய' என்றால் 'பொருந்துதல்' (Tamil Lexicon) என்று பொருள். ‘'இசையொடு சிவணிய நரம்பின்’ என்பது சரியாக சுருதி சேர்க்கப்பட்டு பொருந்திய நரம்பு என்று பொருளாகும். பாடலில் வரும் எழுத்தின் ஒலி அந்த 'சுத்தமான சுருதியில்'  (tuned accurate pitch) மறைந்து  -ஒன்றி -ஒலிக்க வேண்டும்.

அவ்வாறு பாடலின் எழுத்தின் ஒலி சரியாக சுருதி சேர்க்கப்பட்ட யாழின் நரம்போடு ஒன்றி ஒலிக்க வேண்டும் என்பதைக் கீழ்வரும் சான்று வலியுறுத்துகிறது.

' யாழெழுத்திற் பாவாற் புணர்க்க' பஞ்ச மரபு 89

திருக்குறள் (573) 'பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல்' என்ற குறள் மூலம் அதை விளக்கியுள்ளது.
(கூடுதல் சான்றுகளுடன் கூடிய விளக்கத்திற்கு; http://musicresearchlibrary.net/omeka/items/show/2445 )

குரலொலியில் 'ழ' உச்சரிப்பின் போது,  வாயினுள் நடைபெறும் செயல்நுணுக்கத்தை, தொல்காப்பியம் ( எழுத்து: 3;13) கீழ்வருமாறு விளக்குகிறது.

' நுனி நா அணரி அண்ணம் வருட,
  ர கார, ழ காரம், ஆயிரண்டும் பிறக்கும்.'

ஆக பாடலில் வரும் எழுத்தின் ஒலியானது கீழ்வரும் இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் தான், பாடகரால் சுருதி சுத்தமாக பாட முடியும்.

 1. பாடலில் வரும் எழுத்தின் ஒலி பாடலில் அந்த எழுத்துக்கான சுரத்தில் சுருதி சுத்தமாகப் (accurate pitch) பொருந்த வேண்டும்.

 2. பாடலில் அந்த எழுத்து ஒலிக்கும் நேரம் (பாடலுக்கான இசைக் குறியீட்டில் உள்ள அட்சர காலம் – beat duration of the musical note ) பாடகரின் வாயினுள் அந்த எழுத்தை ஒலிக்கத் தேவைப்படும் செயல்நுட்பத்திற்கு ஏற்றதாகவும்,  இருக்க வேண்டும்.

யேசுதாஸ் சிரமப்பட்ட "மூழ்காது" என்ற சொல்லில் 'மூ' வுக்கான சுரம்,'ழ்'க்கான சுரம், அடுத்துவரும் 'கா'வுக்கான சுரம், மேலேக்குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவையா என்பதை அந்த பாடலுக்கான சுரக்குறியிட்டில் கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு ஒரு பாடலில் உள்ள சுரங்களை இணைக்கப் பயன்பட்ட 'இழை' பற்றிய சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் நிறைய உள்ளன. இது தொடர்பான எனது ஆய்வுக்கட்டுரை  Sangeet Natak’ (Vol XLII, Number 3,2008) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.
('izai இழை'; http://tamilsdirection.blogspot.com/2015/08/normal-0-false-false-false-en-us-x-none.html )

மேலே குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு சுருதி சுத்தமுள்ள எழுத்துக்கள் கொண்ட சொற்கள் உள்ள பாடல்களையே 'இழைத்துப்' பாட முடியும். அதனையே திருக்குறள் (573);

'பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல்' என்று சுட்டிக்காட்டியுள்ளது.

யேசுதாஸ் பாடிய பாடலின் ஒலிப்பதிவில் கணினி துணையுடன், அந்த சொல்லுக்கு அவர் பயன்படுத்தியுள்ள சுரங்களைக் கண்டுபிடிக்க முடியும். மேற்குறிப்பிட்ட இரண்டு நிபந்தனைகளுமே பூர்த்தியாகாத வகையில் "மூழ்காது" என்ற சொல் இருப்பது,  அந்த ஆய்வில் வெளிப்பட்டால் வியப்பில்லை.” 'மூழ்காது' என்ற சொல்லில்,  'ழ்'-ஐ ஏன் வைரமுத்து விரும்பிய‌து போல் 'அழுத்திப் பாட' முடியாது என்பதற்கான காரணமும் அந்த ஆய்வில் வெளிப்படலாம். .  யேசுதாஸ் பாடலில், “ 'மூள்காது"வுக்கும், மூழ்காது'வுக்கும் இடையே ஏதோ ஒரு சத்தம் தான் வருகிறது.” என்பதற்கான காரணம் அதுவே என்று ஆய்வில் வெளிப்பட்டாலும் வியப்பில்லை.

பழைய திரைப்படப் பாடல்களில் உள்ள சொற்கள் தெளிவாக கேட்பது போல், இன்றுள்ள பாடல்களில் கேட்க முடியாமல், சிரமப்பட்டே அச்சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். அவ்வாறுள்ள சொற்கள் இடம் பெற்ற பாடல்களை மேற்குறிப்பிட்ட முறையில் ஆராய்ந்தால், அச்சொற்கள் அந்த இரண்டு நிபந்தனைக்ளையும் பூர்த்தி செய்யாமல் இசைப்பது தெளிவாகும்.

இளையராஜா வருகைக்கு முந்தைய திரைப்பாடல்களில் அந்த இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தியாகாத பாடல்கள் அரிது. இளையராஜாவிற்கும் வைரமுத்துக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு,  அந்த இரண்டு நிபந்தனைகள் பூர்த்தியாகாத பாடல்களை வைரமுத்து எழுதி, சுருதி சுத்தமுள்ள எழுத்துக்கள் கொண்ட சொற்களாக‌ திருத்த மறுத்தாரா என்பதும் ஆய்விற்குரியது.

இது தொடர்பாக யாரேனும் முனைவர் பட்டம் உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபட விரும்பினால், அவர்களுக்கு ஆய்வு ஆலோசனை நான் வழங்க இயலும். ( http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html ) இது தொடர்பான கட்டுரையானது, சுமார் 15 வருடங்களுக்கு முன், சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த‌ ‘சிங்கைச் சுடர்’ மாத இதழில் வெளிவந்தும், இன்று வரை அது ஏன் அறிவுபூர்வ விவாதத்திற்குள்ளாகாமல் இருளில் நீடிக்கிறது? என்பதும் முனைவர் பட்ட ஆய்விற்கு உகந்த கேள்வியாகும்.


குறிப்பு: 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' தொடர்பாக, நான் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் அடிப்படையில், ஒரு பாடலின் ஒலிப்பதிவில் இருந்து, சுருதி சுத்தமற்ற எழுத்துக்கள் கொண்ட சொற்களை அடையாளம்  காண முடியும். (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_16.htmlஉள்ளீடாக(input) கொடுக்கப்படும் இசைக்கு ஏற்ற பாடல் எழுதும் கவிஞர்களுக்கு துணை புரிய, சுருதி சுத்தமுள்ள எழுத்துக்கள் அடங்கிய சொற்கள் நூலகத்தினையும்(Library) கணினி உருவாக்கித் தரும். (https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_17.html  )