Sunday, April 19, 2015


பா.ஜ.க  எச்.ராஜா பேசியது சரி என்றால்;             

 என்னை போன்றவர்கள் தமிழ்நாட்டில் இருக்க அருகதையில்லை



" முதலில் ஈ.வே.ரா ஒரு தேச துரோகி என்பதை நாம் மனதில் பதியவைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் 1944-ல் ஈ.வே.ரா தலைமையில் சேலத்தில் நடைபெற்ற திராவிடக்கட்சியின் துவக்க மாநாட்டில் C.N.அண்ணாதுரை ஒரு தீர்மானம் கொண்டுவருகிறார். தீர்மானம் என்ன சொல்கிறது என்றால் “வெள்ளையன் இந்த நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினாலும் லண்டனில் இருந்து கொண்டு சென்னை ராஜதானியையாவது ஆளவேண்டும்”. இப்படி ஒரு மானங்கெட்ட தீர்மானத்தை போட்ட தேச துரோகிகள் தானேடா ஈ.வே.ரா, அண்ணாதுரை, வீரமணி, கருணாநிதி & கம்பெனி. 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் கிடைத்ததை கருப்பு தினம் என்று ஈ.வே.ரா அறிவித்து எல்லா வீட்டிலும் கறுப்பு கொடி ஏற்ற சொன்னாரா இல்லையா??. எனவே வெள்ளைக்காரன் நாட்டைவிட்டு வெளியெறிய போதே இந்த இரண்டு பேரையும் சேர்த்து அடித்து துரத்தியிருக்க வேண்டும்." சென்னை 'வள்ளுவர்கோட்டத்தில் 18 ஏப்ரல் 2015 அன்று நடைபெற்ற கறுப்பு சட்டை எரிப்பு போராட்டத்தில் ஈ.வெ.ரா வையும், வீரமணியையும், கம்யூனிசத்தையும் சேர்த்து எரித்து தள்ளிய திரு H.ராஜா அவர்களின் காரசாரமான பேச்சு' என்று முகப்புத்தகத்தில் வெளிவந்துள்ளது.பெரியாரைப் பற்றியும், அண்ணாவைப் பற்றியும், இவ்வளவு இழிவான கருத்துள்ள எச்.ராஜா, கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, மதுரையில் அழகிரியின் வீட்டிற்கு சென்று, தனக்கு ஆதரவு தருமாறு கெஞ்சியது சரியா? என்ற கேள்வியை, மனசாட்சியும், அறிவுநேர்மையும் உள்ள எச்.ராஜா ஆதரவாளர்களுக்கு விட்டு விடலாம்.

பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் 'தனி திராவிட நாடு' கோரிக்கையை ராஜாஜி பகிரங்கமாக ஆதரித்தது எச்.ராஜாவுக்கு தெரியாது போலும். தெரிந்திருந்தால், ஈ.வெ.ரா, அண்ணதுரையுடன் ராஜாஜியையும் அடித்து துரத்தியிருக்க வேண்டும் என்று பேசியிருப்பார்.

"We going to soon get the cooperation of my friend and comrade, Acharya (Rajagopalachari), for the separation of Dravida Nadu. Not only him, but all Brahmins ... are going to support our demand for separation"- Periyar EVR ;http://en.wikipedia.org/wiki/C._R._formula

அது மட்டுமல்ல,எச்.ராஜா இந்து மகா சபை தலைவர்களையும் 'அடித்து துரத்தியிருக்க வேண்டும்' என்று பேசியிருப்பார். ஏனென்றால், இரண்டாம் உலகப் போரின் போது, காங்கிரஸ் வெள்ளையரை எதிர்த்த போது, திராவிடர் கழகத்தைப் போலவே, இந்து மகா சபாவும் ஆங்கிலேயர் ஆட்சியை ஆதரித்தனர்.

“The Congress condemned Britain’s declaration of India as a “belligerent country” without its consent, and resented London’s refusal to promise India’s independence after the war. The Muslim League and the Hindu Mahasabha, however, supported the British war effort, seeking furtherance of their sectarian interests.” http://www.thehindu.com/books/freedom-movement-a-holistic-feat/article61951.ece


ஆங்கிலேயருக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டங்களை ஆதரிக்காததில், தி. கவிற்கும், இந்து மகாசபைக்கும் அதிக வேறுபாடு கிடையாது.


“the Hindu Mahasabha did not actively support agitations against British rule in India. Under the leadership of Mohandas Gandhi, the Congress led several nationwide campaigns of non-violent civil disobedience. The Mahasabha refused to endorse any of the movements and participated in the legislative councils established by the British, which were otherwise boycotted by the Congress and most of the population..”
http://en.wikipedia.org/wiki/Akhil_Bharatiya_Hindu_Mahasabha
 
1925இல் காங்கிரசை விட்டு வெளியேறி, பெரியார் ஈ.வெ.ரா சுயமரியாதை இயக்க்ம் தொடங்கினார். 1925 முதல் 1947 இல் இந்தியா விடுதலை அடையும் வரை, அவர் அனுபவித்த அளவுக்கு சிறைத் தண்டனைகளும், அவர் நடத்திய பத்திரிக்கைகள் அனுபவித்த அளவுக்கு காலனிய அரசின் ஒடுக்குமுறைகளையும், தமிழ்நாட்டில் எந்த காங்கிரஸ், இந்துத்வா தலைவர்கள், அவர்கள் நடத்திய பத்திரிக்கைகள், அனுபவித்திருக்கிறார்களா? என்ற கேள்வியை எச்.ராஜாவும், அவரின் பேச்சை பாராட்டுபவர்களும் மனசாட்சியுடனும், அறிவுநேர்மையுடனும் பரிசீலிப்பார்களா?

இந்தியா விடுதலையான பின் நடந்த 1952 முதல் பொது தேர்தலில், தனி திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து, பெரியார் ஈ.வெ.ரா ஆதரித்த கட்சிகள் பெருவாரியாக வெற்றி பெற, காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெறவில்லை என்பது, எச்.ராஜாவுக்கு தெரியாது போலும். தெரிந்திருந்தால் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மக்களை அடித்து துரத்தியிருக்க வேண்டும் என்று பேசியிருப்பார்.அப்படி இருந்த தமிழ்நாடு, இன்று இப்படி எச்.ராஜா பேசும் அளவுக்கு சீரழிந்ததற்கு, திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளின் சாதனையா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

வெள்ளைக்காரர் ஆட்சிக்கு முன் தமிழ்நாடே பல மன்னர்கள் ஆட்சியில் இருந்தது எச்.ராஜாவுக்கு தெரியாதா? வீரசவர்க்கார் எழுதிய 'எரிமலை' -'The Indian War of Independence' - நூலில் 1857 இல் வடநாட்டில் இருந்த முஸ்லீம் அரசர்களும் இந்து அரசர்களும் சேர்ந்து, வெள்ளையரை எதிர்த்ததை, ‘முதலாம் விடுதலைப் போர்’ என்று குறிப்பிடுவது எச்.ராஜாவுக்கு தெரியாதா? அந்த போர் வெற்றி பெற்றிருந்தால், வெள்ளைக்காரர் இந்தியாவை விட்டு வெளியேறியிருப்பார்கள். ஆனால் இந்தியா பல மன்னர்களின் ஆட்சிகளில் இருந்திருக்கும் என்பது எச்.ராஜாவுக்கு தெரியாதா? 

'இந்தியர்' என்ற அடையாளம் இந்தியாவில் உரிய அளவுக்கு வலுப்பெறாததன் காரணமாகவே, இந்தியாவில் பிரிவினை முயற்சிகள் மக்கள் ஆதரவுடன் நடைபெற்று வருவதும், அதைப் பலகீனப்படுத்தி, இந்தியர் என்ற அடையாளத்தை வலிமையாக்க, மத்திய அரசு எவ்வளவு கடுமையாக முயற்சிக்கிறது என்பது எச்.ராஜாவுக்கு தெரியாதா? 

இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுக்கு தேவைப்படும் 'பெரும் விரிவுரை - கிராண்ட் நேரேட்டிவ் (Grand Narrative)  ஆனது, மேற்கத்திய சூழ்ச்சியில் சிக்கி இருப்பதும், அந்த சூழ்ச்சியிலிருந்து அந்த 'கிராண்ட் நேரேட்டிவை' மீட்டு, இந்தியர் என்ற உணர்வை வலிமைப்படுத்த ராஜிவ் மல்கோத்ரா போன்ற அறிஞர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் பற்றி எச்.ராஜாவுக்கு தெரியுமா?

every country needs its own narrative, a narrative rooted in its tradition and story; without this narrative, its agenda could be appropriated by more powerful countries, and the country is more likely to fail. India needs such a narrative. The problem, he argued, is that currently the Indian narrative belongs to the West – it is where the best quality education is for South Asian Studies, where an intellectual has to publish papers and attend conferences to be someone in their field. It is with an identity created for it by the West that India presents itself to the world.”

ராஜிவ் மல்கோத்ராவின் ‘Breaking India’  (http://www.breakingindia.com/)  என்ற புத்தகமானது, தமிழ்நாட்டின் மீது அக்கறையுள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். அந்த புத்தகத்திலும் தமிழ்நாட்டில் 'தமிழர்', 'திராவிடர்' என்ற அடையாளங்களின் தோற்றம், வளர்ச்சி, மற்றும் 'இந்தியர்' என்ற அடையாளத்தை தமிழ்நாட்டில் பலகீனமாக்கி, விடுதலைக்குப் பின் நடந்த முதல் 1952 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெற முடியாத விளைவை ஏற்படுத்திய சமூக செயல்நுட்பம்(Social Mechanism)  போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கருதுகிறேன். அதை உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் அப்புத்தகத்தைப் படிக்க எண்ணியுள்ளேன்.அந்த சமூக செயல்நுட்பத்தில் சிக்கி, தமிழ்நாட்டை தேசிய நீரோட்டத்தில் சேரவிடாமல் தடுத்துவரும், தமிழ்நாட்டு இந்துத்வா கட்சிகளில் எச்.ராஜா போன்றவர்கள் ஆற்றி வரும் 'இந்தியா உடைக்கும்- ' Breaking India’- 'சேவை பற்றி விளங்கிக் கொள்ள, அந்த நூல் துணை புரியுமா? என்ற ஆய்விற்காகவும் மீண்டும் அப்புத்தகத்தைப் படிக்க எண்ணியுள்ளேன்.

எச்.ராஜா பா.ஜ.கவில் அகில இந்திய அளவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். மேலேக்குறிப்பிட்டவையெல்லாம் தெரியாமல், அந்த பொறுப்பில் அவர் நிச்சயம் இருக்க முடியாது.

அவருடைய பேச்சின் அடிப்படையில் 'இந்தியர்' என்ற அடையாளம் வரையறுக்கப்பட்டு, பெரியார் ஈ.வெ.ரா, அண்ணாதுரை, ராஜாஜி போன்றவர்களை "அடித்து துரத்தியிருக்க வேண்டும்." என்ற கருத்தை, மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.கவும் , பிரதமர் மோடி தலைமையிலான அரசும் ஏற்றுக் கொள்கிறர்களா? 

பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் தனது வரை எல்லைகள்(limitations)  பற்றிய புரிதலின்றி, தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை தமிழர்க்கு கேடாக கருதி, மேற்கொண்ட முயற்சிகள்,  தமிழர்களை ஆங்கிலவழிக் கல்வி மூலம் வேரற்றவர்களாக ஆக்கி வரும் அபாயம் பற்றி எச்சரித்திருக்கிறேன். ராஜிவ் மல்கோத்ரா, குருமூர்த்தி போன்ற அறிஞர்களின் கட்டுரைகள் மற்றும் மோடி பற்றிய எனது ஆய்வின் அடிப்படையிலான கருத்துக்கள் மூலம், தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாட்டின் நலன்களைப் பாதுகாத்து, தமிழர் என்ற அடையாளத்துடன் இணக்கமாக‌, இந்தியர் என்ற அடையாளம் தமிழ்நாட்டில் வலிமை பெற்று,(தமிழ்வழிக் கல்வியைச் சீரழித்து, தமிழ்நாட்டின் கனிவளங்களை சூறையாடிய,) திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் பிடியிலிருந்து தமிழ்நாடு மீளும் என்று நம்பியிருந்தேன். ஆனால் எச்.ராஜாவின் பேச்சு அந்த நம்பிக்கையை தகர்க்கும் வகையில் உள்ளது. 

அவர் குறிப்பிடும் அளவுகோலின் படி, பெரியார் ஈ.வெ.ரா, அண்ணாதுரை ஆகியோரை மதிப்பவர்களை இந்தியாவிலிருந்து 'அடித்து துரத்த' வேண்டும். அப்படியென்றால் என்னை இந்தியாவிலிருந்து துரத்துவது தான் சரி. என்னை போன்றவர்கள் தமிழ்நாட்டில் இருக்க அருகதையில்லையென்றால், இந்தியாவை விட்டு வெளியேறி, என்னை மதித்து நடத்தும் நாட்டில் குடியேறுவது தான் வழி. அல்லது எச்.ராஜாவும் அவரின் ஆதரவாளர்களும் என் மீது 'தேச துரோகம்' குற்றம் சுமத்தி, சிறையில் அடைத்தாலும் சரி. பெரியார் ஈ.வெ.ரா வழியில் அந்த வழக்கில், எதிர் வழக்காடாமல், 'அதிகபட்சம் தண்டனை' வழங்குமாறு நீதிபதியிடம் நான் கேட்பேன் என்பதையும் எச்.ராஜாவுக்கும், அவர் பேச்சை பாராட்டும் அவரின் ஆதரவாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.


குறிப்பு: திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்களுடன் கடந்த/நிகழ் கால தொடர்பின்றி, உணர்ச்சி போதையின்றி, அறிவுபூர்வமாக செயல்படும் கட்சிகளோ, குழுக்களோ இன்றி, தமிழ்நாட்டில்  எனக்கான சமூகவெளி(social space)  மூச்சுத் திணறலுக்கு(social suffocation)  உள்ளாகும்போது, குறைந்த பட்சம் எனது ஆய்வுகளை-http://musictholkappiam.blogspot.in/; http://musicdrvee.blogspot.in/; - distractions இன்றி மேற்கொள்ள, வாய்ப்புள்ள இடம் நோக்கி வெளியேறுவது பற்றி பரிசீலிப்பது சரி என்று கருதுகிறேன். 

No comments:

Post a Comment