Friday, February 6, 2015


'காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (4 )             


'சமூக எபோலா'  நோய்க்கிருமிகளாக உள்ள மனிதர்கள்



தற்போது உலகை அச்சுறுத்திவரும் எபோலா(Ebola) எனும் வைரஸ் நோய்க்கிருமிகள் மூலம் பர‌வும் நோயினால், 2002 - 2003இல் பாதிப்புக்குள்ளானவர்களில் 90% பேரை மரணமடைய‌ச் செய்து வைரஸ் நோய்க்கிருமிகளில் முதல் இடத்தை அது பிடித்துள்ளது. (http://en.wikipedia.org/wiki/Ebola_virus)

ஒரு சமூகத்திலும் அது போலவே, சமூக 'வைரஸ்' நோய்க்கிருமிகள் பரவினால், அந்த சமூகத்தில் வெளிப்படும் அழிவுகளிலும், குற்றங்களிலும், பிற பாதிப்புகளிலும் அக்கிருமிகளால் ஏற்படும் சமூக நோய்களின் 'வலிமை' வெளிப்படும்.

1967-இல் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியைப் பிடித்த போது, அது போன்ற நோய் விஷக்கிருமிகளிடம் தமிழ்நாடு சிக்கிவிட்டதாக, அன்று பதவி இழந்த முதல்வர் பக்தவச்சலம் தெரிவித்தபோது, அவர் மீது கோபப்பட்டவர்களில் நானும் ஒருவன்,1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து, அந்த ஆட்சி மாற்றத்தை வரவேற்ற மாணவர்களில் நானும் ஒருவனாக இருந்ததால். இன்று காங்கிரஸில் இருந்த‌, பக்தவச்சலத்தின் பேத்தியும் , அந்த நோய்க்கிருமிகளில் இடம் பெற்றுள்ளாரா? இல்லையா? என்பது அவர் மீது நடக்கும் சி.பி.ஐ விசாரணை முடிவில் தெளிவாகும்.

இன்று தமிழ்நாட்டில் சமூக அளவில் வெளிப்படுபவையெல்லாம், ஒரு வகை 'சமூக எபோலா' வைரஸ் கிருமி நோயின் உச்சக்கட்டத்தில் தமிழ்நாடு இருக்கிறதா? உச்சக்கட்டம் என்றால், 'நோய் முறிவு' நடவடிக்கைகள் பலன் தரும் காலம் தொடங்கிவிட்டதா? என்ற கேள்விகளை, கீழ்வரும் தகவல்கள் எழுப்புகின்றன.

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியின் மரணப்பயணமும், நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள்,கிரனைட், தாது மணல், ஆற்று மணல் உள்ளிட்ட கனிவளங்கள் சூறையாடப்படுவதும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே,  தற்கொலை,கொலை, கொள்ளை,வன்முறை, குடும்பங்களில் கொலை, தற்கொலை உள்ளிட்ட சமூகக் குற்றங்கள், திருமணமான சில வருடங்களுக்குளேயே விவாகரத்து அதிகரிப்பு உள்ளிட்ட குடும்ப சீர்க்குலைவுகள் அதிகரிப்பு ஆகிய அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சமூக நோய்கள் ஆகும். இவை தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றைப் பாதித்துள்ள கடுமையான நோயின் வெளிப்பாடுகள் ஆகும். இந்த நோயின் மூலம் (source) தொடர்பான, எனது ஆய்வினை ஏற்கனவே பார்த்தோம்.

"1944இல் திராவிடர் கழகம் தோன்றியபின், பொது அரங்கில் அறிவுபூர்வமான விவாதங்கள் உணர்வுபூர்வமாக தடம் புரண்டதால்,சமூக ரத்த ஓட்டத்தில் 'லாப,நட்டம்' பார்க்கும் கள்வர் நஞ்சு’ கலந்தது.( ‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்   (Social Fibers & Social Bonds)’; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html   )  அதனால்,  'திராவிட மன நோயாளித்தனம்' உருவாகி, 'காலனிய மனநோயாளித்தனத்தின்' பின்பலத்தில் 'வளர்ந்து', தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றை எவ்வாறு பாதித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.('காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (2) தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருகிறதா?; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html ’)

சமூக ரத்த ஓட்டத்தில் நஞ்சைப் போன்று கலந்த‌ , நோய்க்கிருமிகள், கால ஓட்டத்தில் நோயை முற்றச் செய்ததன் விளைவுகளே மேற்சொன்னவையாகும். அறிவுப்புலத்தில் அதன் பாதிப்பே, கீழ் வருவதாகும்.

தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களின் மூலத்தைப் (Text) படிக்காமல், உரையாசிரியர்கள், மற்றும் பிற நூல்களை மட்டுமே படித்து விட்டு, அம்மூலங்களைப் படித்தது போல எழுதுபவர்களும், பேசுபவர்களும், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் உள்ள நூல்களைப் படித்து விளங்கிக்கொள்ளும் அறிவின்றி, புலமையாளர்களுடன் பழகி, அவர்கள் பேச்சில் வெளிப்படும் தகவல்களில் சிலவற்றை 'இறுக'ப் பிடித்துக் கொண்டு, புலமையாளர் போல, சுயநல நோக்கில் எழுதுபவர்களும், பேசுபவர்களும், ஆபத்தான அறிவு ஒட்டுண்ணி சமூக நோய்க்கிருமிகள் ஆவர்.

பொது அரங்கில் அறிவுபூர்வமான விவாதங்கள் உணர்வுபூர்வமாக தடம் புரளும் சூழல் ஆனது,  ஆபத்தான அறிவு ஒட்டுண்ணி சமூக நோய்க்கிருமிகளின் 'அதிவேக' வளர்ச்சிக்கு எவ்வாறு வழி வகுக்கும்? என்பதற்கும், சமூகத்தில் என்னென்ன பாதிப்புகளை அவை ஏற்படுத்தும்? என்பதற்கும், உலக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக்கான புலமாக தமிழ்நாடு உள்ளது.

தமிழ்/திராவிட/தேசிய கட்சிகளின் சம்பந்தமில்லாமல் வாழும் ஒருவர் அண்மையில் என்னிடம் தெரிவித்த தகவல் - மதிப்பு மிக்க 'சிக்னல்'(signal)- வருமாறு:

“தமிழ்நாட்டின் முக்கிய தேசிய, மாநிலக் கட்சிகள் எல்லாம் சகாயத்திற்கு வரும் அச்சுறுத்தல்களை கண்டு கொள்ளாமல் 'மவுனமாக' இருக்கிறர்களா? 'கிரானைட்' கொள்ளையர்கள் அரசியல் கட்சிகளுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் வழங்கிய நன்கொடை தொடர்பான விவரங்கள், சகாயம் அறிக்கையில் இடம் பெறுமானால், கட்சிகளின் துணையுடன், சட்டத்தை ஏமாற்றி, கனிமக் கொள்ளையில் ஈடுபடுவது முடிவுக்கு வருமா?”

பொதுமக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் இது போன்ற பிரச்சினைகளில், கட்சிகளும் அமைப்புகளும் 'மர்மமான மெளனம்' கடைபிடிக்கும் போக்கு 1944க்கு முன் கிடையாது. அந்த போக்கு 1970களில் முளைவிட்டு, அரசியலை 'பொதுவாழ்வு வியாபாரமாக்கிய' போக்கில் உரம் பெற்று, இன்று உச்சத்தில் இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

'பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு, முஸ்லீம் எதிர்ப்பு,வடவர் எதிர்ப்பு, சிங்களர் எதிர்ப்பு' போன்ற பலவித, எதிர் (Negative) உணர்வுபூர்வ(emotions) போக்குகளுக்கு அடிமைப்பட்ட மனிதர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் பலவித உடல்/மன நோய்களுக்கு உட்பட்டு வாழ்ந்து, சமூக உறவுகளையும் கெடுத்து, தமிழர்களின் உயிரணுக்களிலும் (genes) அதைப் பதிவு செய்து, இனிவரும் பரம்பரையையும் கெடுப்பவர்கள் என்பதையும், திறந்த மனதுடன், அறிவுபூர்வமாக நேர் (Positive) உணர்வுகளுடன் வாழ்பவர்கள் அதற்கு எதிரான ஆக்கபூர்வமீட்பு உணர்வுகளை தமிழர்களின் உயிரணுக்களில் பதிவு செயவதையும், உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. (உதாரணமாக; “scientists are discovering that positive emotions don’t just make you feel good — they have an impact on our social interactions and health outcomes that may become written in our genes.”; http://www.psychologicalscience.org/index.php/publications/observer/2013/july-august-13/new-research-on-positive-emotions.html )

எதிர் (Negative) உணர்வுபூர்வ போக்குகளுக்கு, 'அறிவுபூர்வ நியாயம்' கற்பிக்கும் அறிவு ஜீவிகளும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அறிவுஜீவிகள், உண்மையில், தமிழ்வழிக்கல்விக்கு நேரும் ஆபத்துகள் பற்றி கவலைப்பட்டதுண்டா? அல்லது தமிழ் என்ற கப்பல் மூழ்கும்போது, தப்பிக்கும் 'எலிகள்' போல, 'தமிழ் வாழ்க; இனமானம் காப்போம்' என்று தப்பிக்கும் 'எலிகளின்' குரலில் 'ஊளை'யிடுகிறார்களா? என்ற ஆய்வுக்கும் தேவை எழுந்துள்ளது. உலக அளவில் தமிழைச் சிறுமைப்படுத்தும் கீழ்வரும் ஆபத்து பற்றி அந்த 'அறிவுஜீவிகள்' கவலைப்பட்டதுண்டா?

“'மணிப்பிரவாள காலத்திற்குப் பின்னர் தான்,சமஸ்கிருதத்தின் துணையுடன் தமிழில் இலக்கியங்களே வெளிவந்தன' என்பது உள்ளிட்ட தமிழைப் பற்றிய மிகவும் தவறான, உரிய சான்றுகளின் அடிப்படைகளில் எளிதில் மறுக்கக் கூடிய 'ஆய்வுத் தகவல்கள்', உலக அர‌ங்கில் செல்வாக்குள்ள எழுத்தாளரான‌ ஷெல்டன் பொல்லாக் எழுதியுள்ள  நூலில் ‘The Language of the Gods in the World of Men – Sanskrit, Culture and Power in Premodern India ’ by Sheldoon Pollock  (2007)  வெளிவந்துள்ளன. (‘The Pitfalls in the Study & Translation of the Ancient Tamil Texts (1),(2),(3); http://tamilsdirection.blogspot.in/2013/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html )

தமிழ்நாட்டில் அப்புத்தகம் வெளிவந்த பின்,  கடந்த 7 வருடங்களில், செல்வாக்குடன் பொது அரங்குகளிலும், மீடியாக்களிலும் வலம் வந்து கொண்டிருக்கும் எந்த தமிழ் அறிஞராவது,   அந்த அபத்தமான, தமிழைப் பற்றி இழிவுபடுத்தும்,  'ஆய்வுகள்' என்ற பெயரில் வெளிவந்துள்ள,  கருத்துகள் பற்றி கவலைப் பட்டிருக்கிறர்களா? கவலைப்பட்டு அதை மறுத்திருக்கிறார்களா?  இல்லையென்றால், அதற்கு என்ன காரணம்? அந்தப் புத்தகத்தைப் படித்து, அதில் தமிழைப் பற்றி வெளிப்பட்டுள்ள தவறானக் கருத்துக்களைப் புரிந்து கொள்ளும் ஆங்கில அறிவு அவர்களுக்கு இல்லையா? இல்லையென்பதை அகந்தையின்றி ஒப்புக் கொண்டு, அத்தகைய ஆங்கில அறிவுடையவர்கள் துணையுடன் அது போன்ற நூல்களைப் படித்து, அதில் தமிழைப் பற்றி உலக அரங்கில் இழிவுபடுத்தும் தவறானக் கருத்துக்களை, மறுக்கும் சமூகப் பொறுப்பு அவர்களுக்கு இல்லையா? இல்லையென்றால், அது தமிழை வைத்து, அரசியல் செல்வாக்குடையவர்களிடம் 'நாய்கள்' போல் குழைந்து காரியம் சாதிப்பதில் மட்டும் அவர்கள் குறியாக உள்ளார்கள் என்ற ஐயம் எழுவது சரியா?” என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.(’இரண்டு புத்தகங்கள் வெளிப்படுத்திய 'சிக்னல்'கள்’; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

அண்மையில் மறைந்த பேரா. M.S.S பாண்டியன் பற்றிய புகழுரைகளில் அவர் சுமார் 20 வருடங்களுக்கு முன் எழுதி வெளிவந்த ‘M.G.Ramachandran in film and politics- The Image Trap’ by M.S.S pandian (1992)’ என்ற நூலை தமிழ்நாட்டு 'முற்போக்கு அறிவுஜீவிகள்' பாராட்டியது பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது. அந்த புத்தகத்தில், "எம்.ஜி.ஆரைப் பற்றிய மிகவும் தவறான, உரிய சான்றுகளின் அடிப்படைகளில் எளிதில் மறுக்கக் கூடிய 'ஆய்வுத் தகவல்கள்' வெளிவந்துள்ளன. இரண்டுப் புத்தகங்களுமே உலகத்தரம் வாய்ந்த ஆங்கில நடையில் இருப்பதும் இரண்டு புத்தகங்களுக்கிடையிலுள்ள‌ பொது அம்சமாகும். அந்த ஆங்கில நடையில் தமிழைப் பற்றியும், எம்.ஜி.ஆரைப் பற்றியும் மிகவும் தவறான, உரிய சான்றுகளின் அடிப்படைகளில் எளிதில் மறுக்கக் கூடிய 'ஆய்வுத் தகவல்கள்' வெளிவந்துள்ளதைப் படித்து புரிந்து கொள்ளும் ஆங்கில அறிவு இரண்டு திராவிடக் கட்சிகளின் 'அறிவு ஜீவிகளிடம்' இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விகள் எழுவது தவறா?" என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.” (’ இரண்டு புத்தகங்கள் வெளிப்படுத்திய 'சிக்னல்'கள்’;http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_20.html)

தமது அளவில் 'அறிவு உழைப்பு'க்கு முயற்சியின்றி, தமது தகுதி,திறமைப் பற்றிய புரிதலின்றி,புரிதலுக்கான தகுதி இல்லையென்றால், அதை அறிவு நாணயத்துடன் ஒத்துக் கொண்டு, தமது புரிதல் அதிகரிப்பிற்கான 'தகுதி, திறமை'யை வளர்த்துக் கொள்ளாமல்,'தகுதி, திறமை மோசடி' என்ற போர்வையில் அதை மறைத்து, சராசரி பொது அறிவின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பும் 'வியாதியும்',அப்படி கேள்விகள் எழுப்பி தமது 'புலமைக் குறைவு' வெளிப்படுமானால், அதைத் ('பார்ப்பன எதிர்ப்பு,இனமானம்' போன்ற முகமூடிகள் மூலம் மறைத்துத் தப்பிக்கும் ) தவிர்க்கும் 'வியாதியும்', மேலேக்குறிப்பிட்ட அறிவு ஒட்டுண்ணி சமூக நோய்க்கிருமிகளை, அடையாளம் காண உதவும் அறிகுறிகளாகும்.

உலக அரங்கில் தமிழ் எக்கேடு கெட்டால் என்ன? தமிழ்நாட்டில் தமிழ்வழி மரணமடைந்தால் என்ன? ஏரிகளும், குளங்களும்,கிரனைட், தாது மணல், ஆற்று மணல் உள்ளிட்ட கனிவளங்களும் சூறையாடப்பட்டால் என்ன? தமிழ்நாட்டில் சமூக ரத்த ஓட்டத்தில் 'கள்வர்' நோய் நுழைந்து, சமூக இழைகளையும், பிணைப்புகளையும் சேதப்படுத்தி, பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை, கொலை, கொள்ளை போன்றவற்றில் அதிகரித்தால் என்ன? என்ற கேள்விகளைப் பற்றிய கவலையின்றி,,ஏமாந்த முதல் தலைமுறையாகப் படித்த, குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளின் படிப்பைக் கெடுத்து, அவர்களில் அதிக ஏமாளிகளை தீக்குளிக்க வைத்து, 'பொதுநல வியாபாரம்' மூலம், தம்மையும் தமது குடும்பத்தையும் 'செட்டில்' செய்து வாழும் அறிவுஜீவிகள் ஆதிக்கத்தில் தமிழ்நாடு சிக்கியிருப்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.( தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், சமூக நோய்கள் வளர்ச்சியும்’; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html ) அந்த பதிவில் உள்ள கீழ்வரும் பகுதி இங்கு கவனிக்கத்தக்கது.

“‘The History of the Decline and Fall of the Roman Empire’ (http://en.wikipedia.org/wiki/The_History_of_the_Decline_and_Fall_of_the_Roman_Empire )  என்ற ஆறு தொகுப்புகள் கொண்ட புத்தகத்தில் 'சில' பக்கங்களில் இருந்தவற்றை மட்டும்,  'ரோமாபுரி ராணிகள்' என்ற தலைப்பில் அண்ணாதுரை  இளைஞர்களின் பாலுணர்வு கவர்ச்சி தொடர்பான உண‌ர்ச்சியைத் தூண்டும் வகையில் புத்தகம் எழுதியது சரியா? அந்த ஆறு தொகுப்புகள் கொண்ட புத்தகத்தின் சாராம்சத்தை - பண்பாட்டு வீழ்ச்சி சமூக வீழ்ச்சிக்கு அடிகோலும் - என்ற கருத்தை அவர் ஏன் நூலாக வெளியிடவில்லை? 1967இல் முதல்வரான பின் அவர் எழுதிய 'கம்பரசம்' என்ற அதே போன்ற இன்னொரு நூலை ஒருவர் நினவூட்டியபோது, 'நான் மறக்க விரும்புவதை நினைவூட்ட வேண்டாம். ' என்று அவர் சொன்னது ஏன்? அதன் மூலம் 'குதிரைத் தப்பி ஓடிய பின் லாயத்தைப் பூட்டிய கதை' நினைவுக்கு வருவது தவறா?”

நம்மைச் சுற்றி நடக்கும் நல்லவைகளிலும், தீயவைகளிலும் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. தீமைகள் புரிந்த குற்றவாளிகளுக்கும் நமக்கும் அளவில் மட்டுமே வேறுபாடு என்பதையும் நாம் மறக்கக் கூடாது.

நிகழ்கால வரலாற்றில் என்னைக் காயப்படுத்திய சம்பவங்களில் ஆப்கானிஸ்தானில் 2001 மார்ச்சில் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டதும் ஒன்றாகும். மீடியாக்களில் அதை செய்தவர்கள் தாலிபான் தீவிரவாதிகள் என்று வெளியானது. ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்கா தாலிபன் இயக்கத்தை வளர்த்தது எனக்கு நினைவுக்கு வந்தது. தனது பொருளாதார நலன்களுக்காகவே அது போன்று அமெரிக்க செயல்பட்டதும், அமெரிக்காவை சொர்க்கபூமியாகக் கருதி அங்கு குடியேறியுள்ள நமது உறவினர்களும், நண்பர்களும் எனது நினைவுக்கு வந்தார்கள். 'உலகம் எக்கெடு கெட்டால் என்ன? நாமும் நமது குடும்பமும் புத்திசாலிகளாகப் பிழைப்போம்' என்று வாழும் நாமும், நமது குடும்பமும், நண்பர்களும் அந்த பாமியான் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டதற்கு மறைமுக குற்றவாளிகள் இல்லையா? என்பது பற்றி நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

எபோலா வைரஸ் நோயாளிகளை குணமாக்க முயலும் மருத்துவர்களே மிகுந்த 'தற்காப்பு' எச்சரிக்கையுடன் செயல்பட்டால் தான், அந்த நோய் அவர்களுக்கும் தொற்றும் அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும். அது போல, 'சமூக எபோலா' அறிவு ஒட்டுண்ணி சமூக நோய்க்கிருமிகளாக உள்ள மனிதர்கள் நமக்குப் பிடித்த 'ஆன்மீகம், பகுத்தறிவு,இந்துத்வா, முஸ்லீம், தலித்' உள்ளிட்டு இன்னும் பல முகமூடிகளுடன் நம்முடன் உறவு கொண்டாலும்,   நாம் அவர்களிடம் மிகுந்த 'தற்காப்பு' எச்சரிக்கையுடன் செயல்பட்டால் தான், அந்த நோய் நமக்கும் தொற்றும் அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும். தமிழ்நாட்டை அந்நோயிலிருந்து மீட்பதற்கும் பங்காற்ற முடியும்.

No comments:

Post a Comment