Thursday, October 30, 2014



   இந்தியாவில் ‘வித்தியாசமான’ தமிழ்நாடு (1)




இந்திய விடுதலைக்கு முன் இந்திய துணைக் கண்டத்தில், அரசமைப்பு(kings) என்ற அரசியல் வடிவத்தில்  பல அரசர்களின் கீழ் தமிழ் நாட்டிலும், அது போலவே இந்தியாவின் பிற பகுதிகளிலும், இயங்கிய இந்திய சமூகம், கிழக்கிந்திய கம்பெனியில் சிக்குண்டு, காலனிய ஆட்சியில் தமது அரசியல் அடையாளத்தில் மாற்றம் பெற்றது. வெள்ளையர் வருகைக்கு முன் இந்திய சமூகம் மன்னராட்சியில்  ஒரு சீரற்ற(heterogeneous) ,மையமற்ற (decentralized) ,கிராம அளவிலான‌ கிடைத்தள சுய ஆட்சித் தன்மை (horizontal autonomous ) உள்ளவையாக இருந்தன. இந்திய ஆட்சியிலும் அரசியலிலும் கிறித்துவ பாணி மையப்படுத்தப்பட்ட‌(centralized), செங்குத்து (vertical),  தரஏணி( hierarchical)  பாணியைத் தமது சுயநல்ன்களுக்காக காலனி ஆட்சி அறிமுகப்படுத்தியது.

1857‍இல் இந்திய மன்னர்கள் ஒன்று சேர்ந்து முதல் இந்திய விடுதலைப் போரை நடத்திய வியப்பூட்டும் தகவல்கள் வீர சவர்க்காரின் 'எரிமலை' (தமிழில் ‘1857 War of Independence’) நூலில் உள்ளன. வீரத்துடனும், தியாகத்துடனும் போரிட்ட இந்துக்கள் முஸ்லீம்கள் பற்றியும், துரோகம் செய்த இந்துக்கள் முஸ்லீம்கள் பற்றியும் பாரபட்சமற்ற முறையில் தகவல்கள் அந்நூலில் வெளிவந்துள்ளன.

அதாவது இந்திய மக்களிடையே தத்தம் பகுதி அரசர் சார்பு அரசியல் அடையாளமானது, 'இந்தியர்' என்ற அடையாளத்தில்  மாற்றம் பெறத் தொடங்கியது. ஆனால் அந்த போக்கில் தென்னிந்தியா, குறிப்பாக தமிழ்நாடு இடம் பெறவில்லை. 1857‍க்கு முன்னேயே வெள்ளையரை எதிர்த்து தமிழ்நாட்டில் வீரமும் தியாகமும் மிக்க போராட்டங்கள் நடந்திருந்தாலும், மேற்குறிப்பிட்ட மாற்றம் நடந்த போக்கில் தமிழ்நாடு இடம் பெறவில்லை.

அதன்பின் இந்தியர் என்ற அடையாளத்தை வளர்த்த‌ காங்கிரசிலிருந்து விலகி, நீதிக்கட்சி ஆதரவாளராக செயல்பட்டு, பின் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் நீதிக்கட்சியின் தலைவரானார். காங்கிரசில் இருந்த 'சுய‌ராஜ்ய'  பிரிவினரைப் போன்றே, 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் காலனி ஆட்சியில் பங்கேற்றது நீதிக் கட்சியாகும். நீதிக்கட்சியில் செல்வத்திலும் புலமையிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்ட பிராமண‌ரல்லாதோருடன் பிராமணர்களும் இருந்தனர். அண்ணாதுரையின் செல்வாக்கில் பெரியார் நீதிக்கட்சியை 1944இல் 'திராவிடர் கழகம்' என்று மாற்றினார். பிராமணர்களுக்கு திராவிடர் கழகத்தில் இடமில்லை என்பதோடு,  செல்வத்திலும் புலமையிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்திருந்த நீதிக்கட்சியில் இருந்த‌ பிராமணரல்லோதோரும் இல்லாமல், 'திராவிடர் கழகம்' பயணித்தது.

இடையில் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 'தனி திராவிட நாடு' என்ற கோரிக்கையை முன்வைத்து, அதனுடன் தாழ்த்தப்பட்ட, பிறபடுத்தப்பட்ட மக்களின் வகுப்புரிமை கோரிக்கையுடன் செயல்பட்டு, அவரின் செல்வாக்கு வளர்ந்த வேகத்தில், ‘தமிழர்’, ‘திராவிடர்’ என்ற குழப்பங்கள் தமிழ்நாட்டில் வளர்ந்து வந்த சூழலில்,  'இந்தியர்' என்ற அடையாளம் இந்தியாவின் மற்ற பகுதிகளில் வளர்ந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வளரவில்லை.

இந்திய விடுதலைக்குப் பின் 1952இல் நடந்த முதல்  பொதுத் தேர்தலில், தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் மட்டுமே வித்தியாசமாக இருந்தன. இந்திய விடுதலையைத் ‘துக்க நாளாக’ அறிவித்து, ராஜாஜியும் ஆதரித்த 'தனி திராவிட நாடு' கோரிக்கையை முன்வைத்த பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் ஆதரித்த கூட்டணிக் கட்சிகள் பெற்ற பெரும் வெற்றியில், காங்கிரசுக்கு 'மெஜாரிட்டி' கிடைக்கவில்லை. பின் காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்ற கட்சிகளில் சிலவற்றை தமது பக்கம் இழுத்து, ராஜாஜி முதல்வராக, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அதன்பின் 'குலக் கல்வி' பிரச்சினையில் ராஜாஜி பதவி விலக, காமாராஜர் முதல்வரானார். அதன்பின் 1967‍ வரை பெரியார் ஆதரவுடன் காங்கிரஸ் ஆண்டது. ராஜாஜி துணையுடன் 1967‍‍இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்த பின், பெரியாருடன் நேசமாக, பெரியார் ஆதரவுடன் தி.மு.க ஆண்டது.பெரியார் மறைவிற்குப் பின்,  1977இல் எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. 

1989‍இல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், அ.இ.அ.தி.மு.க பிளவின் காரணமாக தி.மு.க ஆட்சிக்கு வந்தது. ஒன்றுபட்ட அ.இ.அ.தி.மு.க, ஜெயலலிதா தலைமையில் மீண்டும் 1991 இல் ஆட்சியைப் பிடித்தது. அதன்பின் தி.மு.க தலைவர் குடும்ப செல்வாக்கு மேல் மக்கள் கொண்ட அதிருப்திக்கும், அ.இ.அ.தி.மு.கவில் சசிகலா குடும்ப செல்வாக்கு மேல் மக்கள் கொண்ட அதிருப்திக்கும், ஏற்றவாறு இரண்டு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தன. தற்போது எந்த குடும்ப செல்வாக்கிலும் இல்லாதவராக தன்னை வெளிப்படுத்தியுள்ள ஜெயலலிதா அளவுக்கு தமிழ்நாட்டில் வேறு எந்த தலைவருக்கும் செல்வாக்கில்லை என்பதும் உண்மையே.ஒப்பீட்டளவில் தி.மு.க தலைவர்களை விட, ஜெயலலிதா தமிழர் என்ற அடையாளத்துக்கு இணக்கமாக ‘இந்தியர்’ என்ற அடையாளத்தின் மீது பற்றுள்ளவர் என்பதும் உண்மையே.ஆட்சிக் கலைப்புக்குள்ளான சமயங்களில் பல தி.மு.க தலைவர்கள் மத்திய அரசை அச்சுறுத்தும் வகையில் 'தனித் தமிழ்நாடு' கோரிக்கைகளை எழுப்பி, அக்கோரிக்கையை கேலிக்குள்ளாக்கினார்கள் என்பதையும் மறுக்க முடியாது.ஆங்கில வழியில் படித்து கல்லூரி மாணவர்களாயிருப்பவர்களிடையே, இத்தகையப் போக்குகள் 'தமிழ், தமிழுணர்வு' போன்ற‌வற்றையும் கேலிக்குள்ளாகியதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.


 அவர் தமது வழக்குகளிருந்து மீண்டு, மீண்டும் தமிழ்நாட்டின் முதல்வராகவில்லையென்றால், தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் வேகமாக வலிமையாகும். குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டிலம் போன்று, அரசியலில் பெரும் குழப்பங்கள் ஏற்படும் அபாயமும் அதனால் ஏற்பட வாய்ப்புள்ளது. முள்ளி வாய்க்கால் போரின் போதும், அதற்குப் பின்னும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்களிடையே, அவை அவர்களின் உரையாடலில் கூட இடம் பெறவில்லை. அதே போல்,  ஜெயலலிதா சிறைக்கு சென்ற பின்னும், தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் நடந்த ஊடகச் செய்திகள் அவர்களின் உரையாடலில் கூட இடம் பெறவில்லை.அந்த அளவுக்கு தமது கல்வி, வேலைவாய்ப்பு, சினிமா. கிரிக்கெட், காதல், பலவகையான பொழுது போக்குகள் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி, 'அந்நியமாக' வாழ்வதும், குறைந்த அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டிலத்தின் அறிகுறிகளா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.


இத்தகைய சூழலில் வியப்பூட்டும் தகவல் என்னவென்றால், கடந்த பாராளுமன்ற தேர்தலில் தொகுதியில் நல்ல பெயரற்ற ஆளுங்கட்சி பிரதிநிதிகளை தங்கள் பகுதிக்கு வரக்கூடாது என்று பொதுமக்கள் தடுத்ததும், தங்கள் பகுதி நீண்டகால குறைகள் தீர்க்கப்படாததால், தேர்தலைப் புறக்கணிப்பதாக மக்கள் அறிவித்ததும் நடந்தன. அவர்கள் மற்ற கட்சிகளையும் நம்பவில்லை. இன்றும் தினமும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே தமது பிரச்சினைகளுக்கு பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் வீதியில் இறங்கி, கட்சிகள் சம்பந்தமில்லாமல் போராடி வருகிறார்கள். ஆங்காங்கே திருடர்களைப் பொதுமக்களே பிடித்து, உதைத்து, காவல்துறையிடம் ஒப்படைத்தும் வருகிறார்கள்.பொது வாழ்வில் 'குறுக்கு வழி'களில் வளர்ந்த‌ 'அதிவேக பணக்கார' திருடர்களை நோக்கி பொது மக்களின் கோபம் வருங்காலத்தில் செயல்பட்டு, அவர்களின் சொத்துக்கள் பறிமுதலுக்குள்ளாகி பொது காரியங்களுக்கு பயன்படும் விளைவுகள் ஏற்பட்டாலும் வியப்பில்லை.


இத்தகைய சூழலில், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும், இளைஞர்களும் எந்தவித அரசியல் பற்றுமின்றி, தமது கல்வி, வேலைவாய்ப்பு, புலனின்பங்கள் போன்றவற்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வாழ்கிறர்கள். அவர்கள் மத்தியில் 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை அதிவேகமாக வலுவிழந்து வருகிறதா? அவர்கள் மத்தியில் படித்த மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலோரிடம் ''இந்தியர்' என்ற அடையாளம் அதிசயிக்கும் அளவுக்கு செல்வாக்குடன் வளர்ந்து வருகிறதா?

கிராமங்கள் உள்ளிட்டு வெளிநாடுகளில் வேலை பார்ப்போர் தமது சொந்த ஊருக்கு வந்து ஏற்படுத்தும் பாதிப்புகளும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும், கிரிக்கெட் உள்ளிட்ட பொழுது போக்குகளும், இதற்குக் காரணமா? பொறியியல் உள்ளிட்ட உயர்க்கல்வி படிக்கும் மாணவர்கள் மத்தியில் 'இந்தியர்' என்ற அடையாளம் அதற்கான சமூகத் தேவைகளை உணர்ந்து வளர்ந்து வருகிறதா?அவர்களில் பெரும்பாலோர் பாரம்பரியப் பண்பாடுகளை மதித்து வாழும் படித்த பெற்றோர்களின் பிள்ளைகளாகவும், அல்லது கல்வியில் நன்கு படிக்கும் பிள்ளைகளாகவும் இருக்கிறார்கள் என்பது எனது அனுபவமாகும்.சென்னை 'சர்ச்பார்க் கான்வெண்டில்' படித்த ஜெயலலிதா கல்வியில் சிறந்து விளங்கினார் என்பதும், 'இந்தியர்' என்ற அடையாளத்தில் அவருக்குள்ள பற்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருந்தால், வியப்பில்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க உள்ளிட்டு அனைத்து கட்சிகளும் நடத்திய பொதுக் கூட்டங்களில் அதிக அளவில் பங்கேற்காத படித்த இளைஞர்கள்,  திருச்சியில் நடந்த மோடி பேசிய கூட்டத்தில் பங்கேற்றது ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய ஒன்றாகும்.

இந்தியாவில் 'இந்தியர்' என்ற அடையாள வளர்ச்சியில் வித்தியாசமானப் போக்கில் இருந்த தமிழ்நாடு, அந்த வித்தியாசத்தை இழந்து, இந்தியாவில் உள்ள மற்ற பகுதிகளைப் போல 'இந்தியர்'ஆக மாறி வருகிறதா? அந்த போக்கிற்கு 'மோடி அலை' அதிவேக வலுவூட்டி வருகிறதா? என்பது போன்ற கேள்விகளை விட, அடுத்து வரும் கேள்வியே அதிர்ச்சியும் கவலையும் தரும் கேள்வியாகும்.

தமிழ்நாட்டில் 'இந்தியர்' என்ற அடையாளம் வலுப்பெற்று வந்தாலும், 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை படித்த இளைஞர்களிடமும், சாதாரணத் தமிழர்களிடமும் வலுவிழந்து வருகிறதா? ஆதாயத் தொண்டர்கள் மற்றும் முதல் தலைமுறையாகப் படித்த, எண்ணிக்கையில் 'வேகமாக'குறைந்து வரும் ‍- தீக்குளித்தும் போராடியும் தமது வாழ்வைத் தொலைக்கும் திறமையுள்ள‌-  குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகள் பலத்தில் மட்டுமே ,'தமிழ், தமிழுணர்வு' அமைப்புகள் பயணிக்கின்றனவா?

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் இணக்கமாக தமது மொழி, மொழியினர் என்ற அடையாளங்களும் வலுவாக இருக்கின்றன.குஜராத் மாநிலம் இதற்கு சிறந்த முன்னுதாரணமாகும்.அங்கு குஜராத்தி மொழியும், குஜராத்தியர் என்ற அடையாளமும் தமிழ்நாட்டில் தற்போதுள்ள தமிழ், தமிழர் என்ற அடையாளங்களை விட வலுவாக இருப்பதுடன், 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் இணக்கமாக இருப்பதும் கவனிக்கத் தக்கதாகும்.

எனவே தமிழ்நாட்டில் 'இந்தியர்' என்ற அடையாளம் வலுப்பெற்றாலும், 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை பலகீனமாவதன் மூலம், மீண்டும் இந்தியாவில் தமிழ்நாடு வித்தியாசமாகப் பயணிக்கிறதா?

இக்கேள்விகளுக்கான விடைகளைப் பெற, 1944வரை, 1944 முதல் 1949 வரை, 1949 முதல் 1967 வரை, 1967 முதல் 1977 வரை, 1977 முதல் 1989 வரை,  1989 முதல் 1991 வரை, 1991 முதல் இன்று வரை, என்ற காலக் கட்டங்களில் தமிழ்நாட்டில் இருந்த போக்குகளை ஆராய்வது பலனளிக்கும்.

'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை பலகீனமாகி, ஆங்கில வழி மோகத்துடன்,  திரிந்த மேற்கத்தியப் பண்பாட்டு அடிமைகளாக தமிழ்நாட்டில் தமிழர்கள் இருக்கும் சூழலில், 'இந்தியர்' என்ற அடையாளத்திலும் தமிழ்நாடு வித்தியாசமான போக்கில் வளர்வதும் ஆபத்தாகும். எனவே மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகளே அந்த ஆபத்திலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றும்.அனைத்து கட்சிகளிலும் 'சுயலாப' நோக்குள்ளவர்கள் அதிகரித்துவரும் சூழலில், சுயலாப நோக்கமின்றி, தமிழின் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுள்ளவர்கள், தத்தம் கொள்கை வேறுபாடுகளுக்கப்பால், வாய்ப்புள்ள வழிகளில் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் தான் , அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும்.

Monday, October 27, 2014


சமூக ஆற்றல்களும், போராட்டங்களும், வன்முறைகளும் (2)


'கத்தி' திரைப்படம் தொடர்பாக வெளிவந்துள்ள மூன்று செய்திகளை, முந்தையப் பதிவில் பார்த்தோம். சத்யம் தியேட்டரில் தாக்குதல் நடத்தியவர்கள் (தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவின் படி)பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் என்ற செய்தியும் அதில் அடக்கம். 

’ ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனம் லைக்கா என்பதற்காக, அந்நிறுவனம் தயாரித்த திரைப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்படுவதை எதிர்ப்பவர்கள், ஐ.நா உள்ளிட்டு உலக அமைப்புகளில் ராஜபட்சேயின் 'பாதுகாவலராக' செயல்படும் சீனாவை இது வரை கண்டித்ததுண்டா? சீனப் பிரதமர் அண்மையில் இந்தியா வந்தபோது, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நின்றாவது அந்த வருகையை எதிர்த்து கறுப்புக் கொடி காட்டினார்களா? ராஜபட்சேக்கு சீனாவை விட வலிமையான ஆதரவை வழங்கும் நிறுவனமா லைக்கா?’ என்பது பற்றியும், கடந்த 10 வருடங்களில் வரைமுறையில்லாமல் சீனாவில் தயாரான பொருட்கள் தமிழ்நாட்டுச் சந்தையில் நுழைந்து, தமிழ்நாட்டின் சிறுதொழில் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்துள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றியும், ‘தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (6)   ‘தமிழ்க் கூட்ட அழிவு நோய்’ - (TCCD)'  ‘நோயாளிகள்’ மருத்துவரான விந்தை’ என்ற பதிவில் 
( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_14.html ) பார்த்தோம். எனவே 'கத்தி' படத்தை எதிர்த்த பெரியார் பெயரில் உள்ள இயக்கங்களில், அறிவுபூர்வமாக சுயவிமர்சனம் செய்து தம்மை வளர்த்துக் கொள்ளும் பண்புள்ளவர்களின் பார்வைக்கு மேற்குறிப்பிட்டப் பதிவு முக்கியமானதாகும்.

அதே போல், மேற்குறிப்பிட்ட சத்யம் தியேட்டரில் நடந்த போராட்டமானது பெரியார் பெயரில் உள்ள எந்த இயக்கமும் மேற்கொண்டிருந்தாலும், அது போன்ற போராட்டங்களை எந்தப் பிரச்சினையிலும் அவர்கள் மேற்கொண்டிருந்தாலும், அத்தகைய போராட்ட முறைகள் பெரியாரால் கண்டிக்கப்பட்டவையா? இல்லையா? என்ற கேள்விகளையும் அவர்கள் ஆராய வேண்டும். கால மாற்றத்தில் போராட்ட முறைகள் பற்றிய பெரியாரின் நிலைப்பாடுகள் இந்த காலத்திற்குப் பொருந்தாது, என்று அந்த இயக்கங்கள் தமக்குள் விவாதித்து, இத்தகைய போராட்ட முறைகளே சரியென்று ஏற்று நடைமுறைப்படுத்தி வருகிறார்களா? என்ற கேள்வியையும் அவர்கள் ஆராய வேண்டும்.

'மனித செயல்பாடுகளின் தூண்டுகோலாக மனிதர்களின் மனங்களில் உள்ள ஈடுபாடுகள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட மனிதர்களின் ஈடுபாடுகளில் உள்ள அறிவுபூர்வமான கூறுகளும், உணர்வுபூர்வமான கூறுகளும் அவர்கள் பங்கேற்கும் போராட்டங்களிலும், வன்முறைகளிலும் வெளிப்படும். உணர்வுபூர்வ கூறுகள் போராட்டங்களில் பங்கேற்பதற்கான சமூக ஆற்றலின் வலிமையையும்,அறிவுபூர்வகூறுகள் போராட்டங்களின் வழிமுறைகளையும்  பண்புகளையும் தீர்மானிக்கின்றன.' என்பதை முந்தையப் பதிவில் பார்த்தோம். அதன்படி மேலேக் குறிப்பிட்ட கேள்விகள் பற்றிய ஆய்வுகள், பெரியாருக்கு இந்த சமூகத்தைப் பற்றி இருந்த ஈடுபாடுகளுக்கும், இன்று பெரியார் பெயரில் உள்ள இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்களின் ஈடுபாடுகளுக்கும் இருக்கும் ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் வெளிப்படுத்தும்.

ஒரு சமூகத்தின் கடந்த கால வளர்ச்சிப் போக்குகளில ஒரு இயக்கம் மக்களிடம் நெருக்கமாகி, மக்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள், அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கும், அதன்மூலம் அந்த மக்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். அதற்கு மாறாக, மக்களுக்குச் சம்பந்தமில்லாமல், அவர்களுக்கு தொந்திரவாக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் அந்த இயக்கத்தின் விழ்ச்சிக்கும் வழி வகுக்கும். 

சமூகத்திலுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளுடனும், அவர்களின் தாய்மொழி மற்றும் பாரம்பரியம், பண்பாடுகளுடனும் தொடர்பு கொண்டு, உருவான கொள்கையின் அடிப்படையில் செயல்படும் இயக்கங்கள் வளரும். 

பொது மக்களுக்கு தொந்திரவின்றி, பொதுச் சொத்துக்களுக்குச் சேதமின்றி பெரியார் மேற்கொண்ட போராட்டங்கள் சமூகத்திலுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குப் பாதிப்பின்றி அமைந்திருந்தன. ஆனால் தமிழ், பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றில் இருந்ததை 'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' (அரங்கேற்றுக் காதை 65) ( முந்தையப் பதிவில் விளக்கியுள்ளவாறு) என்ற செயல்நுட்பத்திற்கு உட்படுத்தாமல், அவற்றைத் தமிழர்க்குக் கேடானவையாகக் கருதி, உருவாக்கிய கொள்கைகள் வழியில் பெரியார் பயணித்தார். அதாவது ஒரு சமூகத்தின் ஆணி வேரையே நோயாகக் கருதி அவர் பயணித்ததால், அவரது இயக்கத்திற்கான சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களிலிருந்து அவர் அந்நியமானார். எனவே ஏற்கனவே கையிருப்பில் இருந்த சமூக ஆற்றலில் இயக்கம் பயணித்து , வலுவிழக்க நேரிட்டது. மிகுந்த தியாகங்களுடன் தோன்றி வளர்ந்த அவரது இயக்கம் சந்தித்த இந்த முரண்பாடுகள் காரணமாகவே, 'குறுக்கு வழி செல்வம் சேர்க்கும்' நோயாளிகள் பொது வாழ்வில் 'அதி வேகமாக' வளர்ந்து, விமர்சனப் பார்வையற்ற உணர்வுபூர்வ 'தமிழுணர்வாளர்கள்' அவர்களிடம் சிக்கியதால்,  பெரியாரையும் மீறி தமிழையும், தமிழர்களிடம் இருந்த பண்பாடுகளையும் சீரழித்து, தமிழ்நாட்டை வீழ்ச்சிப் பாதையில் பயணிக்க அம்முரண்பாடுகள் வழி வகுத்ததா? அந்த நோயில் தமிழ்நாட்டில் கணிசமானோர் சிக்கியதால், அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும் பிற மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் தமிழ்நாட்டில் வளர வழி வகுத்ததா? என்பது போன்ற கேள்விகளை ஆராயாமல், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் தப்பித்து மீள முடியுமா? 

தமிழ்நாட்டில் உள்ள சாதாரணத் தமிழர்கள் தத்தம் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தாமே போராடி வருவது என்பதானது, தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் மற்றும் இயக்கங்கள் ஆனவை, சமூக ஆற்றலுக்கான ஊற்றுக் கண்களில் இருந்து தொடர்பற்று பயணிப்பதை உணர்த்தாதா? அதிலும் பொதுமக்களுக்கு தொந்திரவாகவும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியும் மேற்கொள்ளப்படும் போராட்டங்களானது, சம்பந்தப்பட்ட இயக்கங்களை பொதுமக்களின் வெறுப்புக்குள்ளாக்காதா? 

மக்களின் வெறுப்புக்குள்ளான கட்சிகளை, மத்திய அரசு நினைத்தால் என்ன பாடு படுத்தலாம் என்பதற்கு நெருக்கடி காலத்தில் ஆட்சியை இழந்து, மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல் தவித்த தி.மு.க சாட்சியாக இருக்கிறது. தமிழின் மரணப் பயணத்தைப் பற்றி கவலைப் படாமல்,  'தமிழ் உணர்வு,தமிழ் ஈழம், இந்தி எதிர்ப்பு' போன்றவையோடு அடையாளப்படுத்திக் கொண்டு, மக்களிடமிருந்து விலகி, மக்களுக்குத் தொந்திரவான போராட்டங்களுடன் பயணிக்கும் இயக்கங்கள் மக்களின் வெறுப்புக்குள்ளாவது ஒரு பாதிப்பு.அதைவிட மோசமாக, அவர்கள் 'உயர்த்தி'ப் பிடித்த 'தமிழ் உணர்வு,தமிழ் ஈழம், இந்தி எதிர்ப்பு' போன்றவையும், ஆங்கில வழிக் கல்வி போதையில் சிக்கிய‌ தமிழர்களின் வெறுப்புக்குள்ளாகும் ஆபத்தும் உண்டு. ஏற்கனவே தமிழின் மரணப்பயணம் தொடங்கியுள்ள சூழலில், தமிழர்களை 'தமிழ், பாரம்பரியம், பண்பாடு' போன்ற வேர்களற்ற மனிதர்களாக, தமிழ்நாட்டில் வாழும் ஆங்கிலோ இந்தியரைப் போன்று வாழ வைப்பதில் தான் அது முடியும். 
  
தமிழ், தமிழ் உணர்வு' கட்சிகளுக்கும், சாதாரணத் தமிழர்களுக்கும் இடையே உள்ள சமுகப் பிளவானது(Social Disjoint) , தமிழ்நாட்டில் ஒரு திருப்பு முனைப் போக்கு தொடங்கியிருப்பதன் அறிகுறியா? சுயலாப நோக்கின்றி, தமிழ், தமிழ்ப் பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றின் வளர்ச்சிக்கும் ஆங்காங்கே சில தமிழர்கள் தாமாகவே பங்களிப்பு வழங்கி, செயல்பட்டு வருவது உண்மையா? இது போன்ற கேள்விகளுக்கான விடைகள் தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தி, தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காப்பாற்றுமா? என்பதே இன்றைய தமிழ்நாட்டின் நிலைமையாக இருக்கிறதா?  இத்தகைய ஆய்வுகளுக்கு 'தமிழ், தமிழுணர்வு' கட்சிகள் தயாரா? 

குறிப்பு: 'சமூக ஆற்றல்களும், போராட்டங்களும், வன்முறைகளும் (1)' ; https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_23.html

Thursday, October 23, 2014


சமூக ஆற்றல்களும், போராட்டங்களும், வன்முறைகளும் (1)


நான் ‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி’ ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற புத்தகத்தைப் படித்து, சமூகவியல் நோக்கில் குறிப்புகள் எடுத்து, ஏற்கனவே தமிழ், தமிழர்கள்,தமிழ்நாடு தொடர்பாக பதிவுகள் செய்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டை உதாரணமாகக் கொண்டு சமூக ஆற்றல்களுக்கும், போராட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வினை இங்கு பார்ப்போம்.

‘மனிதர்களின் மனங்களில் உள்ள 'தேவைகள்' (needs), அத்தேவைகளின் அடிப்படைகளில் மனங்களில் தோன்றும் ‘ஈடுபாடுகள்'(interests) ஆகியவை, அம்மனிதர்களின் ( மூளை உழைப்பு + உடலுழைப்பு + அவர் வசம் உள்ள பொருள் மூலம்) செயல்பாடுகளுக்கான  ஆற்றலை (Energy)  உருவாக்குகின்றன,’ என்பதையும்,

‘தனி மனிதர்களின் ஆற்றல்களே அவர்கள் சம்பந்தப்பட்ட சமூக அமைப்புகளின் (குடும்பம், இயக்கம், etc ) சம்ப‌ந்தப்பட்ட சமூக அமைப்பாற்றல் ஆகும். அவையே சமூக அமைப்பின் அமைப்பாற்றலின் (socio-structural energy) மூலங்களாகும் (sources).’ ’ என்பதையும், மேற்குறிப்பிட்டப் பதிவுகளில் பார்த்தோம்.

ஒரு சமுகத்தின் சமூக ஆற்றல்களில் ஒரு பகுதியே போராட்டங்களாகவும், 'வன்முறைகளாகவும்' வெளிப்படுகின்றன.   தனி மனிதர்கள் மூலமாகவும் , குடும்பம் போன்ற ரத்த உறவுகள் (Blood relations)   அடிப்படைகளிலான அமைப்புகள் மூலமாகவும் , அரசு போன்ற சட்டபூர்வ அமைப்புகள் மூலமாகவும் , அரசியல் கட்சிகள், மதம், சாதி, மொழி,'ஆன்மீகம், பகுத்தறிவு' போன்ற பலவகைப்பட்ட கொள்கைகள் சார்ந்த அமைப்புகள் மூலமாகவும், தமிழ்நாட்டில் வெளிப்படுகின்ற போராட்டங்கள் மற்றும்  வன்முறைகள் பற்றிய ஆய்வுகள், தமிழ்நாட்டின் சமூக ஆற்றல்கள் தமிழ்நாட்டை ஆக்கபூர்வமாக வளர்க்கும் திசையில், அல்லது அழிவுபூர்வ திசையில் பயணிக்கச் செய்கின்றனவா என்பதைத் தெளிவுபடுத்தும்.

ஒரு சமூகத்தில் உள்ள மனிதர்களின் மன‌ங்களில் உள்ள தேவைகளும், அத்தேவைகளின் அடிப்படையில் எழும் ஈடுபாடுகளும், அவற்றின் அடிப்படையில் வெளிப்படும் செயல்பாடுகளும்  சமூக செயல்நுட்பத்தில் அமைதியான சமநிலையில் (peaceful equilibrium)  இருந்தால், அந்த சமூகத்தில் போராட்டங்களுக்கும், வன்முறைகளுக்கும் இடம் இருக்காது. அதற்கு மாறாக, போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்தால்,  அந்த சமூக செயல்நுட்பத்தில் அமைதியற்ற சமநிலை (turbulent equilibrium)  இருப்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். அந்த போராட்டங்களின், வன்முறைகளின் பண்புகளை ஆராய்வதன் மூலம், அந்த சமூக செயல்நுட்பத்தில் உள்ள அமைதியற்ற சமநிலையின் பண்புகளை ஆராய முடியும். அதிலிருந்து அந்த சமூகத்தின் தேவைகள், ஈடுபாடுகள் போன்றவற்றிற்கும், சமூக செயல்நுட்பத்திற்கும் இடையிலான‌ முரண்பாடுகள் பற்றி ஆராய இயலும்.

மனித செயல்பாடுகளின் தூண்டுகோலாக மனிதர்களின் மனங்களில் உள்ள ஈடுபாடுகள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட மனிதர்களின் ஈடுபாடுகளில் உள்ள அறிவுபூர்வமான கூறுகளும், உணர்வுபூர்வமா கூறுகளும் அவர்கள் பங்கேற்கும் போராட்டங்களிலும், வன்முறைகளிலும் வெளிப்படும். உணர்வுபூர்வ கூறுகள் போராட்டங்களில் பங்கேற்பதற்கான சமூக ஆற்றலின் வலிமையையும்,அறிவுபூர்வ கூறுகள் போராட்டங்களின் வழிமுறைகளையும்  பண்புகளையும் தீர்மானிக்கின்றன.

எனவே போராட்டங்களிள் ஈடுபட்டுள்ளோரின் பங்கேற்பு வலிமையும், வன்முறைகள் உள்ளிட்ட போராட்ட வழிமுறைகளும், அவற்றின் பண்புகளும், அவர்களின் அறிவுபூர்வ கூறுகளையும், உணர்வுபூர்வ கூறுகளையும் கண்டுபிடிக்கத் துணை செய்பவையாகும். இத்தகைய ஆய்விற்கு சம்பந்தப்பட்ட சமூகத்தின் கடந்த காலமும் முக்கியமாகும். அவ்வாறு கடந்து காலத்திற்கும் நிகழ்கால போராட்டங்களுக்கும் இடையிலான தொடர்பு விளங்கினால் தான், அடுத்து நடக்க இருப்பவைகளைச் சரியாகக் கணிக்க இயலும். அதற்கு இசை தொடர்பாக சிலப்பதிகாரம் வெளிப்படுத்தியுள்ள கீழ்வரும் இசைத் தொழில் நுட்பம் வழி காட்டும்.

'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' (அரங்கேற்றுக் காதை 65) என்பதே அந்த தொழில்நுட்பமாகும்.

ஒரு சமூகத்தின் கடந்த கால வளர்ச்சிப் போக்குகளில ஆக்கபூர்வமான கூறுகளும் அழிவுபூர்வமான கூறுகளும் கலந்திருக்கும். சமூக ஆற்றல் செயல்பாட்டில் இரண்டு வகைக் கூறுகளில் ஒன்றிற்கு ஆற்றல் பங்களிப்பு அதிகரிப்பினால், அவை வளர்ச்சிப் போக்குகளில் இருக்கும். சமூக ஆற்றல் செயல்பாட்டில் இரண்டு வகைக் கூறுகளில் ஒன்றிற்கு ஆற்றல் பங்களிப்பு அதிகரித்து வருமானால், பிறிதொன்றுக்கு  ஆற்றல் பங்களிப்பு வறண்டு வரும். அதனால் பிறிதொன்று கூறுகள்  பலகீனமாகி மடியும் போக்குகளில் இருக்கும். அந்த பலகீனமாகி மடியும் போக்குகளில் பிணைத்துக் கொண்டு 'உற்சாகமாக' ஈடுபடும் மனிதர்களின் போராட்டங்களும் வன்முறைகளும் விட்டில்பூச்சிகளாகவே அமையும். அவ்வாறு அழிவுபூர்வ கூறுகள் மடிந்த பின்பு தான், ஆக்கபூர்வமான கூறுகளின் வளர்ச்சியானது வெளிப்படையாகும்.  இந்த செயல்நுட்ப அடிப்படையிலேயே, தனிமனிதரும்,அமைப்புகளும், சமூகமும் பயணிக்கின்றன.  

ஒரு தனி மனிதரும் சரி, சமூகத்தை வழி நடத்தும் வலிமையுள்ளவர்களும் சரி, அவர்கள் வாழ்வின் பயணத்தில், மேலேக் குறிப்பிட்ட செயல்நுட்ப அடிப்படையில்,  ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட திசைகளில் வழிகளானது, அவரவரின் அறிவு அனுபவத்தைப் பொறுத்து, அவர்களின் பார்வைகளில் படும். அவர் எந்த திசையில் உள்ள வழியைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கிறார்களோ அந்த பயணத்தின் முடிவில் அதற்கான நன்மை, தீமைகளை அனுபவிப்பதிலிருந்து தப்ப முடியாது. ஒரு சமூகம் நன்மைகளை அனுபவிக்கும் போது, சமூகத்தை வழி நடத்திய தலைவர்கள் பாராட்டு பெறுகிறார்கள். அந்த சமூகம் மிக மோசமான விளைவுகளை அனுபவிக்கும்போது,அந்த தலைவர்களை உணர்வுபூர்வமானவர்கள் கண்டிப்பார்கள்.அந்த தலைவர்களின் பெயரில் பிழைப்பு நடத்துபவர்களும், அவர்களின் உணர்வு போதைத் தொண்டர்களும் அதை 'துரோகம்' என்று கூக்குரல் எழுப்புவதும் உண்டு.அந்த மோசமான விளைவுகளிலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள், அந்த தலைவர்கள் எந்தெந்த கட்டத்தில் என்னென்ன தவறுகள், தமது பயணத்தில், புரிந்தார்கள் என்பதை திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் ஆராய்வார்கள். 

விருப்பு வெறுப்பற்று ஆய்வது என்பது 'திறந்த மனது'என்றும், தனக்கு தவறு என்றும், பொய்யானது என்றும் தெரிந்தும் அதை வாதத்தில் பயன்படுத்துவது 'அறிவு நேர்மையற்றது' என்றும் நான் விளங்கியுள்ளேன்.

மேலேக் குறிப்பிட்ட பின்னணியில் தமிழ்நாட்டில் நிகழ்காலத்தில் நடந்து வரும் போராட்டங்ளை இத்தகைய ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம்  தமிழ்நாடு ஆக்கபூர்வமான திசையில் பயணிக்கிறதா? அழிவு பூர்வ திசையில் பயணிக்கிறதா? அழிவுபூர்வ திசையில் பயணித்தால், அதை எவ்வாறு ஆக்கபூர்வமாகப் பயணிக்க வைக்கலாம்? போன்ற கேள்விகளுக்கான விடைகளைப் பெறலாம். முதலில் தீபாவளிக்கு வெளிவந்துள்ள 'கத்தி' திரைப்படம் தொடர்பாக வெளிப்பட்ட போராட்டம், வன்முறைகள் தொடர்பாக வெளிவந்துள்ள கீழ்வரும் செய்திகள் அடிப்படையில் இந்த ஆய்வைத் தொடங்கலாம்.

செய்தி 1:

"கத்தி' படத்தைத் தயாரித்துள்ள லைகா நிறுவனத்துக்கும், இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அந்தப் படத்துக்கும் லைகா நிறுவனத்துக்கும் தமிழ் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. சில நாள்களாக தமிழ் அமைப்புகள் "கத்தி' திரைப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தன. அவற்றின் வேண்டுகோளை ஏற்று படத்தின் விளம்பரங்களில் லைகா பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். எனவே, இந்தப் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது. http://www.dinamani.com/cinema/2014/10/21

செய்தி 2:

சத்யம் திரையரங்கில் திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் அங்கு வந்த 30-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், திரையரங்க வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்தெறிந்து, திரைப்படத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் திரையரங்கின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஓடினர். http://www.dinamani.com/tamilnadu/2014/10/21

செய்தி 3:

சத்யம் தியேட்டரில் தாக்குதல் நடத்திய கும்பல் யார் என்று அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்தது. அவர்களது உருவம் கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.



மேலேக் குறிப்பிட்ட செய்திகள் அடிப்படையிலான ஆய்வு பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.