Tuesday, November 18, 2014


உணர்ச்சிபூர்வ இரைச்சல்களுக்கிடையே

அறிவுபூர்வ ‘சிக்னல்’கள்


தமிழ்நாட்டில் புலமையாளர்களாக இருப்பவர்கள் கூட, விமர்சனங்களை வரவேற்று, தமது படைப்புகளில் உள்ள குறைகளைத் திருத்தி, தமது புலமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமிருப்பதாகத் தெரியவில்லை. மாறாக பெரும்பாலோர், தமது ஆற்றலையும் நேரத்தையும் தமது 'வளர்ச்சிக்கான சமூக வலைபின்னலை (social network)  உருவாக்கி, தமது படைப்புகளுக்கானப் பாராட்டுகளைப் பெற்று வலுப்படுத்துவதிலேயே குறியாக உள்ளார்கள். நிறைய அறிவு ஆற்றல் இருந்தும், அவ்வாறு தவறாக திசை திரும்பிப் பயணம் செய்தவர்,  அண்மையில் மறைந்த பேரா. M.S.S பாண்டியன், என்று நான் கருதுவது தொடர்பான, சிறு விளக்கம் வருமாறு.

சில வருடங்களுக்கு முன், M S S பாண்டியன் எழுதிய ஒரு புத்தகத்தில், இந்து ஆங்கில நாளிதழ் நிறுவனர் ஜி.சுப்பிரமணிய ஐயர், சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றிய தகவல்களைக் கேள்விக்குள்ளாக்கியதாக, இப்போது முற்போக்கு வட்டத்தில் பிரபலமாக உள்ள அ.மார்க்ஸ் என்னிடம் தெரிவித்தார். பின் அவரே அந்த புத்தகத்தை வாங்கி எனக்கு அனுப்பினார். M S S பாண்டியன் அந்த புத்தகத்தில் ஜி.சுப்பிரமணிய ஐயர் பற்றி, சத்தற்ற சான்றினை, வலுவான சான்று போல் எழுதியிருந்தார். அதை உரிய சான்றுகளின் அடிப்படையில் மறுக்க முடியும் என்று, பின்னர் அ. மார்க்சிடம் தெரிவித்தேன்.

அந்த காலக் கட்டத்தில் பெரியார் இயக்கத்தில்,  மார்க்சியம், லெனினியம் புரிதலுடன் பெரியாரியலில் நான் ஒரு புலமையாளனாக (Theoretician)  இருப்பது அறிந்தும், எனக்கு அறிமுகமாகி, என்னிடம் பழகுவதைத் தவிர்த்து, ஒதுங்கியவர் M.S.S பாண்டியன் என்பது பற்றி அடுத்து சுருக்கமாகப் பார்ப்போம். 

1994-இல் சென்னை மாநிலக்கல்லூரியில் பணியாற்றிய தொடக்க காலத்தில்.  திருவான்மியூரிலிருந்த 'விடுதலை' ராசேந்திரன் இல்லத்திற்கு அடிக்கடி செல்வேன். அப்போது ஒரு முறை அவர்   M.S.S  பாண்டியனை தமக்கு நெருக்கமான நண்பர் என்று சொல்லி அறிமுகப்படுத்தி, அவரின் '‘M.G.Ramachandran in film and politics- The Image Trap’ by M.S.S pandian (1992) என்ற புத்தகத்தைக் கொடுத்தார். பின் அதைப் படித்த போது, அதில் கீழ்வரும் தவறுகள் என் கண்களில் பட்டன.

1. எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் பற்றிய தவறான தகவல்கள் மற்றும் தவறான புரிதல்கள்

2. நீதிக்கட்சி, தி.க, தி.மு.கவில் அண்ணா காலம், கருணாநிதி காலம், எம்.ஜி.ஆரின் அ.இ அ.தி.மு.க ஆட்சிகள் மற்றும் வரலாற்றுப் பின்னணி பற்றிய தவறான புரிதல்.

உதாரணமாக , எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஆசிரியர்கள் உள்ளிட்டு பல தரப்பினரும் நடத்திய போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டதாக M.S.S பாண்டியன் அந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். (“Snuffed out even the mildest form of dissent from the working people, whether they were workers, poor peasants,or professionals, such as school teachers, and government employees”(page 12, The Image Trap)

எம்.ஜி.ஆர் ஆட்சியில் கல்லூரி ஆசிரியர் போராட்டங்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர் போராட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்று 3 முறைகளுக்கு மேல் நான் சிறை சென்றுள்ளேன். எம்.ஜி.ஆருக்கு முன் கலைஞர் ஆட்சியில் பள்ளி ஆசிரியர்கள் மிகப்பெரிய அளவில் போராடி, சிறை சென்றனர். M.S.S பாண்டியன் தெரிவித்துள்ள கருத்தானது, அந்த கலைஞர் ஆட்சியில் நடந்த‌  பள்ளி ஆசிரியர்கள்  போராட்டத்திற்கே பொருந்தும், என்பதும், எம்.ஜி.ஆர் ஆட்சியில் போராட்டங்கள் அந்த கலைஞர் பாணியில் ஒடுக்கப்படவில்லை என்பதோடு, நாங்கள் பங்கேற்ற போராட்டங்களும், இட ஒதுக்கீட்டில் 9000 வருமான வரம்பு ஆணையை எதிர்த்து, தி.க உள்ளிட்ட கட்சிகள் நடத்திய போராட்டங்களும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் பெற்ற வெற்றிகளை , கலைஞர் ஆட்சியில் பெற்றிருக்க முடியாது. எளிதில் அப்போராட்டங்கள் கலைஞர் ஆட்சியில்  ஒடுக்கப்பட்டிருக்கும்.

மேலேக் குறிப்பிட்டுள்ளது போல், பல தவறுகள் அப்புத்தகத்தில் நான் கண்டுள்ளதாக‌, விடுதலை ராசேந்திரனிடமும்,  M S S பாண்டியனிடமும் தெரிவித்து, அவை பற்றி நான் அவர்களிடம் விவாதிக்க விரும்புவதாகவும் தெரிவித்தேன்.  M S S பாண்டியன் அதில் ஆர்வம் காட்டாததோடு, அதன்பின் என்னுடன் பேசுவதையும் தவிர்த்தது , அப்போது ( அவருக்கு வயது என்னை விட குறைவு) அதை ஒரு  immature act ஆகக் கருதி விட்டு விட்டேன். ஆனால் அவரின் மறைவிற்குப்பின், அவரைப் பற்றி இதழ்களில் வெளிவந்துள்ள புகழுரைகளில், அந்த ‘The Image Trap’ ' என்ற புத்தகமே, அவரின் புலமைக்கு பெரும் சான்றாக போற்றப்பட்டுள்ளது. 

ஆக கடந்த 20 வருடங்களாக அந்தப் புத்தகத்தில் உள்ள அபத்தமான தவறுகளை, என்னைத் தவிர, வேறு யாரும் சுட்டிக் காட்டவில்லை. அப்படி நான் சுட்டிக் காட்டினாலும் தமிழ்நாட்டில் அதை யாரும் கண்டு கொள்ள வாய்ப்பில்லை, என்பதற்கான எனது அனுபவத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

மேற்கத்திய ஆய்வு பாணியில் 'மிரட்டும்'   Reference-களுடன், தமிழில் புத்தகங்கள் எழுதி, முற்போக்கு வட்டாரங்களில் செல்வாக்கு பெற்றவர் மறைந்த அரசு கல்லூரி பேரா. கோ. கேசவன் ஆவார். சுயமரியாதை இயக்கம் பற்றி அவர் எழுதி 'புகழ்' பெற்ற புத்தகத்தினை, நான் ஆர்வமுடன் படித்து, அதில் சுமார் 25 பிழைகள் கண்டுபிடித்து, விடுதலை ராசேந்திரனிடம் கொடுத்தேன். அது பற்றி அவர் 'விடுதலையில்' எழுதாத‌தோடு, நான் கொடுத்த (என்னிடம் வேறு நகலில்லாத) பேப்பரையும் தொலைத்து விட்டார்.

அதே போல ஸ்வீடன் நாட்டு பெண் (பெயர் மறந்து விட்டது) பெரியாரைப் பற்றி ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி, தி.கவால் பாராட்டப்பெற்றார். அந்தப் புத்தகத்தில் உள்ள நிறைய பிழைகளையும் கண்டு, வீரமணியிடமும், விடுதலை ராசேந்திரனிடமும் ( எனது பெரியார் இயக்க தொடக்க காலத்தில் ) தெரிவித்தேன். அதுவும் வெளிவரவில்லை. பின் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்      Irshik, HardGrave Jr போன்றோர் ( தி.க) பாராட்டிய நூல்களையும் படித்து, அவற்றிலுள்ள குறைகளைத் தெரிவித்தேன். வெளிவரவில்லை.

மேலேக் குறிப்பிட்ட (கேசவன் தவிர்த்த) எல்லா நூல்களிலும், நீதிக் கட்சியை இழிவுபடுத்தி, அதைவிட தி.க சற்று மேல் எனக் காட்டி, தி.கவை விட தி.மு.க மேல் என்று நிறுவியது பொது சாராம்சமாகும். அதாவது தமிழ்நாட்டில் உணர்ச்சிபூர்வ போதையில் சிக்கி,  அறிவுபூர்வமாக வீழ்ச்சிப்போக்கில் இருந்ததை, வளர்ச்சிப் போக்காக, அந்நூல்கள் வெளிப்படுத்தியுள்ளன. உணர்ச்சிபூர்வ போதையில்,  இன்று தமிழ்நாடு எவ்வளவு மோசமான புலமை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது, என்பது பற்றி அடுத்து பார்ப்போம்.

'மணிப்பிரவாள காலத்திற்குப் பின்னர் தான், சமஸ்கிருதத்தின் துணையுடன் தமிழில் இலக்கியங்களே வெளிவந்தன', என்று  தமிழ்நாட்டில் புகழ்பெற்ற துக்ளக் 'சோ' எழுதியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? உடனே யார் யார் கொதித்தெழுந்து துக்ளக் சோவைக் கண்டித்து போராட்டங்களும், கண்டன அறிக்கைகளும் வெளியிட்டிருப்பார்கள்.(குறிப்பு கீழே) என்பதைப் பட்டியலிட வேண்டியதில்லை. ஆனால் அதே கருத்தையும், அதை விட இன்னும் அபத்தமான தமிழைப் பற்றிய கருத்துக்களையும், உலக அளவில் மிகவும் மதித்துப் போற்றப்படுகின்ற அமெரிக்க எழுத்தாளர் Sheldoon Pollock - ஷெல்டான் போல்லாக் – ‘The Language of the Gods in the World of Men – Sanskrit, Culture and Power in Premodern India ’ by Sheldoon Pollock  (permanent black - Delhi  2007) என்ற புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அப்புத்தகம் வெளிவந்து கடந்த 7 வருடங்களில், எவராவது அந்த அபத்தமான, தமிழைப் பற்றி இழிவுபடுத்தும்,  'ஆய்வுகள்' என்ற பெயரில் வெளிவந்துள்ள,  கருத்துகள் பற்றி கவலைப் பட்டிருக்கிறர்களா?

அந்தப் புத்தகமும் (புதிதாக வெளிவரும் புத்தகங்களை வாங்கும் பழக்கமுள்ள‌) அ.மார்க்ஸ் என்னிடம் பல வருடங்களுக்கு முன் படிக்கக் கொடுத்த புத்தகமாகும். அப்புத்தகத்திலிருந்த 'அபத்தமான' தவறுகளை உரிய சான்றுகளின் அடிப்படையில் மறுத்து  ஷெல்டன் பொல்லாக்கிற்கு மின் அஞ்சல் மூலம் 2007-இல் அனுப்பினேன். அவரிடமிருந்து எந்த மறுப்பும் இன்று வரை வரவில்லை. அதைத் தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்த பலருக்கும் அனுப்பினேன்.  உலக அரங்கில் புகழ் பெற்ற செல்வாக்குள்ள ஒரு அமெரிக்க அறிஞரின் தமிழைப் பற்றிய அபத்தமான கருத்துக்களை,  தமிழ்நாட்டில் 'செல்வாக்குள்ள''புகழ் பெற்ற' எந்த தமிழ் அறிஞராவது- மறைந்த கணபதி ஸ்தபதியின் முயற்சியால் எம்.ஜி.ஆர் வெளியிட்ட ஐந்திறம் பற்றி மிகப் பெரிய விவாதப் புய‌லைக் கிளப்பியவர்கள் உட்பட-   மறுத்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். (http://tamilsdirection.blogspot.com/2014_10_01_archive.html). அப்படி எவரும் மறுத்திருக்கவில்லையென்றால்,  அது தமிழுக்கே ஆபத்தான அறிகுறியில்லையா? எனது மறுப்புகளை ஆர்வமுள்ளவர்கள் பார்வைக்காகப் பதிவு செய்துள்ளேன். (https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264)

அதே போல்,பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக  உரைகள், லெக்சிகன், அகராதி போன்றவைகளை மட்டுமே நம்பி, மேற்கொள்ளப்படும் மொழி பெயர்ப்புகளில் உள்ள குறைபாடுகள் பற்றி, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன். தொகுத்து மேலேக் குறிப்பிட்ட பதிவுகளிலும் விளக்கியுள்ளேன். அது சரியென்றால், தாமதமின்றி உலகில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் மொழிபெயர்ப்புகளுக்கு ஒரு திருத்த இணைப்பு வழங்கினால் தான், ஷெல்டன் பொல்லாக் போன்ற உலக அறிஞர்கள் தமிழைப் பற்றி தவறான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது தடுக்கப்படும். அது பற்றிய கவலை தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. (குறிப்பு கீழே)

தமிழ்நாட்டில் நல்ல முறையில் வளர்ந்து வந்த அறிவுபூர்வ போக்குகள் 1944க்குப் பின் தடம் புரண்டு,  உணர்ச்சிபூர்வ திசையில் பயணம் செய்ததால், ஏற்பட்ட பலன்களே, மேற்குறிப்பிட்ட விளைவுகளுக்குக் காரணம், என்பது என் கருத்தாகும். தமிழ் மட்டுமின்றி, பொதுவுடமை இயக்கங்களும், திராவிட இயக்கங்களும்,  அதில் பலியாகிக் கொண்டிருப்பதாகவும் நான் கருதுகிறேன்.

தமிழ்நாட்டில் ஜீவானந்தம் தொடங்கி, தமிழ்நாட்டில் பொதுவுடமை இயக்கத்தை வளர்த்தவர்களில்,  எவராவது மார்க்சியம் தொடர்பான 'அறிஞர்களாக', தம்மை அடையாளம் காண உதவும் புத்தகங்களையோ, ஒலிப்பதிவுகளையோ வெளிப்படுத்தி இருந்தால், அதைத் தெரிவிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவற்றை எனது ஆய்வுக்கு உட்படுத்த இயலும். மார்க்சியம் தொடர்பான புலமையையும்,  ( வேதங்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இருந்த) சமஸ்கிருத  நூல்களை, மார்க்சிய பார்வையில் ஆராய்ந்தது தொடர்பான புலமையையும்,  வடநாட்டு மார்க்சிய அறிஞர்கள் போன்று, தமிழ்நாட்டில் எவரேனும் புத்தகங்கள் வெளியிட்டிருந்தால், அவற்றையும் எனது ஆய்வுக்கு உட்படுத்த விழைகிறேன்.

மார்க்சியம் தொடர்பான புலமை என்பது, சமூகத்தின் பொருள் உற்பத்தி முறை (mode of Production), உற்பத்தி விசைகள் (productive Forces), உற்பத்தி உறவுகள் (Production Relations) , இரண்டிற்கும் இடையிலான உறவுகள், உபரி உற்பத்தி (Surplus Product), உபரி மதிப்பு (Surplus Value), உபரி உற்பத்தி அபகரிப்பு (Appropriation of the Surplus Product), முரண்பாடுகள் (contradictions), அடித்தளம்(base), மேற்கட்டுமானம் (Super structure) , அவற்றிற்கு இடையிலான முரண்பாடுகள், போன்றவை பற்றியதாகும்.

பெரியார் 1925இல் காங்கிரசிலிருந்து வெளியேறி, சுயமரியாதை இயக்கம் தொடங்கி, தமிழில் முதல் முதலாக புகழ் பெற்ற மார்க்ஸ் ஏங்கல்ஸ் அறிக்கை, மற்றும் அவர்களின் கட்டுரைகள் ஆகியவற்றை, தமது 'குடி அரசு' இதழில் வெளியிட்டார்.  1944 வரை அவருடன் இணைந்து ஜீவானந்தம், முத்துசாமி வல்லத்தரசு போன்ற படித்தவர்கள் சமுகப் பணி ஆற்றிய காலத்தில், பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதம் 1944இல் திராவிடர் கழகம் உருவான காலம் வரை, அறிவுபூர்வ தளத்தில் நடைபெற்றதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். அந்த அறிவுபூர்வ விவாதப் போக்குகள் 1944க்குப் பின், திராவிட இயக்கத்தில் உணர்ச்சி பூர்வ தளத்திற்கு மாற்றம் பெற்றதையும், பதிவு செய்துள்ளேன். அந்த உணர்ச்சிபூர்வ போக்குகள்,  திராவிட இயக்கத்தில் வளர்ந்த வேகத்தில், தமிழ்நாட்டில் முளை விட்டு வளர்ந்த பொதுவுடமை இயக்கத்திலும், காங்கிரஸ் முன்னேடுத்த தேசிய இயக்கத்திலும் பரவியதோ? என்ற ஆராய்ச்சியும் அவசியமாகும்.

இசை ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன், மேலேக் குறிப்பிட்ட புலமையுடன் தமிழ்நாட்டைப் பற்றிய எனது அறிவு அனுபவ அடிப்படையில், மார்க்சிய பார்வையில் இருந்த ஒரு சீரான பொருள் உற்பத்தி முறைக்கு (homogeneous mode of production) மாறாக, ஒரு சீரற்ற பொருள் உற்பத்தி முறையில் (heterogeneous mode of production ) இந்திய சமூகம், குறிப்பாக தமிழ்நாடு, இருந்தது எனது ஆய்வில் வெளிப்பட்டது. இதனை அந்த காலக் கட்டத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த மார்க்சிய, மார்க்சிய‍ லெனினிய அமைப்புகளில் இருந்தவர்களுக்கு தெரிவித்த போது, எவரும் ஆர்வம் காட்டவில்லை. எனவே அத்தகைய விவாதத்திற்கு தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை, என்ற புரிதலுடன் நான் இசை ஆராய்ச்சியில் ஈடுபட‌த் தொடங்கினேன்.

பெரியார் இயக்கத்திலும், பொதுவுடமை இயக்கத்திலும், தமக்குள்ள அறிவு வரை எல்லைகள் (limitations)  பற்றிய புரிதலும், தாம் ஏற்றுக் கொண்ட கொள்கை தொடர்பான புலமையை அதிகரிக்க விரும்பும் ஆர்வமும், அதற்கான உழைப்பும் இருந்ததில்லை என்பது எனது களப் பார்வை(Observation) ஆகும். இது தொடர்பாக 'உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்’ சிக்கிய தமிழ்நாடு' என்று பதிவு செய்துள்ளேன்.(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_12.html )

உண்மையில் மார்க்சியம் லெனினியம் தொடர்பாக‌,  முனைவர் பட்டம் உள்ளிட்டு, ஆழ்ந்த ஆராய்ச்சியில் எவரேனும் ஈடுபடுபவர்கள் இருந்தால், அவர்கள் பார்வையில் படட்டுமே என்று, அது தொடர்பானப் பதிவையும் வெளியிட்டுள்ளேன்.
[http://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none.html]

நிகழ்காலத் தமிழ்நாட்டில், சமூகப் பிளவுடன் (Social Disjoint) , குறைந்த அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி, திருப்புமுனைக்கான போக்குகள் முளைவிட்டிருப்பதை முந்தையப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். அத்துடன் தொடர்புள்ள வகையில், இணையத்தில் உணர்ச்சிபூர்வ இரைச்சல்களுக்கிடையே அறிவுபூர்வ ‘சிக்னல்’கள் வலிமையாக முளைவிட்டு வளர்வதையும் காண்கிறேன். அதற்கு துணை புரியும் வகையில், அறிவுபூர்வ விவாதங்களை வரவேற்று இது போன்ற பதிவுகளை இணையத்தில் வெளியிடுகிறேன்.

குறிப்பு : ஷெல்டன் பொல்லாக் வெள்ளையராக இல்லாமல், அமெரிக்காவில் குடியேறிய பிராமண‌ராக இருந்திருந்தால், தமிழ்நாட்டு தமிழ் அறிஞர்களும், கட்சிகளும்,  'பார்ப்பன சூழ்ச்சி' என்று, அந்த புத்தகத்தை எதிர்த்துப் போராட்டங்கள் போட்டி போட்டு நடத்தியிருக்க மாட்டார்களா?  (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'; 
https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264

'

No comments:

Post a Comment