Wednesday, October 8, 2014


'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்



உலகிலும் சரி, இந்தியாவிலும் சரி, பொதுவாக ஒரே தாய்மொழி பேசும் இருவர் சந்தித்துக் கொண்டால், தங்கள் தாய்மொழியில் தான் உரையாடுகின்றனர்.அதில் தமிழர்கள் மட்டுமே, அதிலும் அதிகம் படித்தவர்கள், பெரும்பாலும் தமிழில் பேசுவதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் உரையாடுகின்றனர்.அவர்களை 'ஏக்கமுடன்' பார்த்து,  மற்ற தமிழர்களும், அது போல நாமும் பேச வேண்டும் என்ற 'இலட்சியத்துடன்'(?) வாழ்கின்றனர். அத்தகையோரில் குடிப் பழக்கம் உடையவர்கள்,  மது போதையில் தப்பும் தவறுமாக தங்களுக்குத் தெரிந்த ஆங்கில வார்த்தைகளில் பேசி, அந்த ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

ஒருவரைப் பற்றி மிகவும் இழிவாக நாம் கருதி, அந்த நபரின் இழிவான செயல்பாடுகள் பற்றி நமது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் 'விலாவாரியாக' விவாதித்து விட்டு, அவர் 'செல்வமும்,செல்வாக்கும் மிக்க நபர்' என்ற ஒரே காரணத்தால், அவரிடம் நாய் போல் குழைந்தும், காலில் விழுந்தும் 'காரியங்கள்' சாதித்து தமது செல்வத்தை, செல்வாக்கைப் பெருக்குவது சரியா? அப்படிப்பட்ட‌ நபர்கள் அதிகரித்து வரும் நாடாக தமிழ்நாடு உள்ளது. அப்படி வாழ்வதே 'வாழ்வியல் புத்திசாலித்தனம்' என்று அவர்கள் குடும்பம், நட்பு உள்ளிட்ட தமது சமூக வட்டத்தில் அந்த நோயைத் தீவிரமாக பரப்பியும் வருகிறார்கள். 

காலனி ஆட்சியில் அடிமைப்பட்டு, பின் 'விடுதலை'யான நாடுகளில் உள்ள மக்களின் சமூக மனவியலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டு,அவர்கள் வாழ்வைச் சீரழித்து வருகின்றன‌ என்பது பற்றி உலகில் பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அத்தகைய 'காலனிய ம‌னநோயாளிகள்' பற்றிய ஆய்வுகள் பற்றிய தகவல்களை முதலில் பார்ப்போம். அதன் அடிப்படையில் திராவிட இயக்க வரலாற்றின் 'பலனாக' மேலேக் குறிப்பிட்ட 'வித்தியாசமான மனநோயாளிகள்' தமிழ்நாட்டில் வளர்ந்து வருவதை விளங்கிக் கொள்வது எளிதாகும்.
கடுமையான தாழ்வு மனப்பான்மையில் ஒரு மனிதரைச் சிக்க வைத்து விட்டால், அவர் சமூக ஒப்பிடு நோயில் சிக்கி (https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html), அதை ஈடுகட்ட 'பல வழிகளில்' தன்னை ‘உயர்த்திக் காட்டும் நோயில்’ சிக்குவது பற்றி உலகில் பல ஆய்வுகள் நடந்துள்ளன. சமூக ஒப்பீடு நோயில் சிக்கி, மற்றவரை மட்டம் தட்டி, தம்மை 'அதி புத்திசாலியாக' உயர்த்திக் காண்பிப்பது,தமது தவறுகளுக்கும், குறைகளுக்கும் பொறுப்பேற்காமல் பிறர் மேல் பழி போடுவது,அதீத உணர்நுட்பத்துடன் (exhibit extreme sensitivity ) பிறர் பாராட்டினாலும், விமர்சித்தாலும் அதை நல்ல வகையில் எடுத்துக் கொள்ளாமல் குறை காண்பது உள்ளிட்டவையெல்லாம் தாழ்வு மனப்பான்மையில் உழல்பவரிடம் வெளிப்படும் நோய் அறிகுறிகளாகும்.( http://www.buzzle.com/articles/inferiority-complex-symptoms.html ) சாதாரணத் தமிழர்களை விட, 'தமிழ் உணர்வு, திராவிட, முற்போக்கு' அமைப்புகளில் உள்ளவர்களிடம் அந்த அறிகுறிகள் அதிகம் வெளிப்படுகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். கடுமையான தாழ்வு மனப்பான்மையில் உச்சக்கட்ட சமூக ஒப்பிடு நோயில் சிக்கியதன் காரணமாகவே, திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் தமிழ்நாட்டில் ஊழலில் 'சாதனைகள்' நிகழ்ந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட இடங்களில் வீடுகள் கட்டி, தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்கள் 'சூறையாடப்பட்டதும்' அந்த 'மனநோயாளித்தன' ஊழல் சாதனைகளா? என்பதும் ஆய்வுக்குறியதாகும்.அந்த 'சாதனைகளின்' ஊடே, வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் 'சர்வே' செய்து வெளியிடப்பட்ட, பல கல்வெட்டுகள் இருந்த மலைகளும் காணாமல் போனது கொடுமை இல்லையா? 
 
உயர்வு மனப் பான்மையும், தாழ்வு மனப்பான்மையும் ஒரே நாணயத்தின் ‍ - நோயின் -  இரு பக்கங்களாகும்."We should not be astonished if in the cases where we see an inferiority [feeling] complex we find a superiority complex more or less hidden. On the other hand, if we inquire into a superiority complex and study its continuity, we can always find a more or less hidden inferiority [feeling] complex." (Ansbacher, Heinz L., and Ansbacher, Rowena R., ed. The Individual Psychology of Alfred Adler - A Systematic Presentation in Selections from his Writings. New York: Basic Books Inc., 1956 (page 260).) எனவே பேராசிரியர்கள் துணை வேந்தர்கள் முதல் அரைகுறையாகப் படித்த அடிமட்டத் தொண்டர் வரை, 'காரியம்' சாதிக்க, தலைவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதும், தலைவர்கள் அதை 'ரசிப்பதும்' ஒரே நோயின் இரு பக்கங்கள் என்பது தெளிவாகிறது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டு 'நோயாளிகளின்' ஆதரவைப் 'பலமாக' நம்பி, பயணித்த 'தமிழ் ஈழ முயற்சிகள்' சாண் ஏறி முழம் ச‌றுக்கினக் கதையானதில் வியப்புண்டோ? அந்த போக்கில், வறுமையில் வாடிய அகதிகளாக, தமிழ்நாட்டிற்கு வந்து, திராவிட அரசியல் கொள்ளையர்களுக்கு நேசமாகி, வசதியான ' ஈழ -திராவிட மனநோயாளிகள்' மற்றும் 'அதிவேக புதுப் பணக்காரர்கள்' மூலமாக, அந்த நோயானது, எந்த அளவுக்கு, இலங்கையில் வாழும் தமிழர்களையும் 'அந்த நோயில்' சிக்க வைத்துள்ளது? முள்ளி வாய்க்கால் அழிவிற்கு எந்த அளவு பங்களித்தது? தமிழ்நாட்டில் இந்த 'நோய்' திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் தான் அரங்கேறியது என்பதை எவராலும் மறுக்கமுடியுமா? 'திராவிட' போக்கிலிருந்து விலகி, 'தனித்தமிழ்' என பயணித்தவர்களில், பின் தடம் மாறி, 'திராவிட மனநோயாளிகளாக' யார், யார் பயணித்தார்கள்?  அவர்கள் மூலம் வெட்கமின்றி பலன்கள் பெற்று, 'தனித்தமிழ்' போக்கில் யார் யார் பயணித்தார்கள்? 'முற்போக்கு' வேடத்தில் கிடைக்கும் செல்வாக்கை, இழிவான சுயலாபங்களுக்கு பயன்படுத்தி, 'அம்பலமாகாமல்' வலம் வருபவர்கள் யார்? 1967க்கு முன் 'பலகீனமான' மனிதர்கள் எல்லாம், தமது வைப்பாட்டியை (அல்லது இரண்டாவது மனைவியை) தமது சமூக வட்டத்தில் (வெட்கப்பட்டு) 'இரகசியமாக' வைத்திருந்த போக்கானது, பின் மாறி, இன்று சமூகத்தில் 'செல்வாக்குடன்' வலம் வரும் போக்கானது, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளையே சுயலாபத்திற்கு காவு கொடுக்கும் சமூக நோயை வளர்த்து வருகிறதா?தமக்கான பாராட்டையும், புகழையும், தமது சமூக வட்டம் மூலம், தாமே ஏற்பாடு செய்து கொண்டு, 'மகிழும்' மனநோயாளித் தலைவர்களை குறை சொல்லியவர்களில், யார் யார் தமக்கு 'வசதி வாய்ப்புகள்' கிடைத்ததும், அது போன்ற 'மகிழ்ச்சிகளில்' திளைத்தவர்கள்? என்று ஆராய்ந்தால், நமக்கு தெரிந்தவர்களில், நாம் உள்ளிட்டு, எத்தனை பேர்?, அந்நோயில் சிக்காதவர்கள் என்பது மிகக் குறைவாக வெளிப்பட்டால், வியப்பில்லை.

வேரற்ற மனிதர்களை உருவாக்கும் மேற்குறிப்பிட்ட தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட சீர்கேடுகள்,  'காலனிய' ஆட்சியில் அடிமைப்பட்டு, விடுதலையான நாட்டில் உள்ள மக்களிடம் வெளிப்பட வாய்ப்புள்ளது என்பதை அடுத்து பார்ப்போம்.

காலனி ஆட்சிக்கு அடிமைப்பட்டு, 'அரசியல் விடுதலை' பெற்ற நாடுகளில் உள்ள மக்களில் பெரும்பாலோர், அதிலும் குறிப்பாக படித்தவர்கள், தமது பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் கேவலமாகக் கருதி, தம்மை அடிமைப்படுத்திய மேற்கத்திய நாகரிகத்தை உயர்வாகக் கருதும் தாழ்வு மனப்பான்மையிலான‌ 'மன நோய்க்கு' ஆளாக அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த வகை மன நோய் ‘cultural cringe’- பண்பாட்டு அடிமைச் சேவக மனப் பாங்கு - என்று அழைக்கப் படுகிறது. அது ‘பண்பாட்டு அந்நியமாதல்’ -  "cultural alienation" - என்பதுடன் நெருக்கமாகத் தொடர்புடையதாகும்.

அத்தகைய மன நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சமூக வரலாறு பற்றி அறிவதில் ஆர்வமின்றி, அவை பற்றிய குறைவான அறிவுடன் நடை, உடை, பாவனை, இசை, தொலைக்காட்சி உள்ளிட்டு அனைத்திலும் அமெரிக்காவில் உள்ளதைப் போன்றவைக்காகப் 'பசியுடன்' (an appetite for all things American) வாழ்வார்கள். http://en.wikipedia.org/wiki/Cultural_cringe

காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற ஆப்பிரிக்க நாடுகளில், மேற்குறிப்பிட்ட சமூக மன நோயிலிருந்து தமது மக்களை மீட்க, அந்தந்த நாட்டு பேராசிரியர்கள் முயன்று வருகிறார்கள்.

உதாரணமாக, நைஜீரியா நாட்டு பேரா.முனைவர்.உமெச், தமது நாட்டு கல்வியில் தமது மக்கள் 'கறுப்பு' என்பதைப் பற்றி இழிவாகவும், வெள்ளைக்காரர்களைப் பற்றி உயர்வாகவும், தம்மைப் பற்றி தாமே தாழ்வாகவும் நினைக்கும் வண்ணம் உருவாக்கப்படுவதைப் பல ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். ‘மூளை அடிமைத் தனம்’ என்று அழைக்கப்படும் தாழ்வு மனப்பான்மை எவ்வளவு ஆற்றல் மிக்க அழிவு விசை என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.(That powerful force is inferiority complex (also called "mental slavery"). http://academic.udayton.edu/race/06hrights/georegions/africa/Afri )(Dr. Umez is a Professor of American Government, Lee College, Baytown, Texas. His latest book, "Nigeria: Real Problems, Real Solutions," is now in use in several Nigerian universities. For more details about the book, kindly visit http://nigeria.liberateafrica.com )

அதே போல் இந்தியாவிலும் வெள்ளையர் ஆட்சிக்கு முன் கல்வியிலும், தொழில்நுட்பத்திலும்,நாகரிகத்திலும் பின்தங்கியிருந்ததாக படித்த இந்தியரில் பெரும்பாலோர் நம்பும் அளவுக்கு அவர்கள் மனதிலேயே வெற்றிகரமாக விதைத்த சூழ்ச்சி பற்றி ஆய்வு செய்து, தரம்பால் என்ற அறிஞர் ஆய்வு நூல்கள் வெளியிட்டுள்ளார்.
(DHARAMPAL • COLLECTED WRITINGS  - Distributed by Other India Bookstore, Above Mapusa Clinic, Mapusa 403 507 Goa, India.) அப்புத்தகத்திற்கு  ‘Making History.  என்ற தலைப்பில், புகழ்பெற்ற மனித உரிமையாளர் கிளாடிஸ் ஆல்வாரிஸ் - Claude Alvares - எழுதியுள்ள முன்னுரையானது, இந்நூலில் உள்ள ஆதாரங்கள் பற்றியும், ஆய்வின் முக்கியத்துவம் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளது.

வெள்ளைக்காரர் வருகைக்கு முன் இந்தியா கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், உலக வர்த்தகத்திலும் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தது என்பது பற்றி, உலகில் நடந்துள்ள ஆய்வுகளின் அடிப்படையில், திரு.குருமூர்த்தி உள்ளிட்ட அறிஞர்கள் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சுமார் 20 வருடங்களாக பழந்தமிழ் இலக்கியங்களில் புதைந்துள்ள இசை அறிவியல் நுட்பங்களை, எனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்து, சந்தைப்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களை நான் வெளிப்படுத்தி வந்துள்ளேன்; (https://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html) தமிழை 'காட்டுமிராண்டி மொழி' என அறிவித்து, பழந்தமிழ் இலக்கியங்களை தமிழர்களுக்கு கேடானவையாக பிரச்சாரம் செய்து வரும், 'திராவிட மன நோயாளிகள்' செல்வாக்கானது, எனது ஆய்வின் பலன்களால் தமிழும், தமிழ்நாடும் வளர தடைகளாக உள்ளார்கள், என்பதையும், அதன் மூலம் கண்டுபிடித்துள்ளேன்.

இந்தியாவில்  இந்தியர்கள் தமது பாரம்பரியம், பண்பாடு, கல்விமுறை, தொழில்நுட்பம், ஆகியவற்றைக் கீழாகவும், வெள்ளைக்காரர்களைப் பற்றி உயர்வாகவும் எண்ணுவது தவறு என்று விளக்கும் அறிவுபூர்வமான ஆய்வுகளையெல்லாம், 'இந்துத்வா' என்று அச்சுறுத்தி, இருட்டில் தள்ளும் வேலையை, 'முற்போக்கு', மதச் சார்பின்மை' என்ற போர்வைகளில் செய்கிறார்களா? அல்லது அவற்றை அறிவுபூர்வமாக விமர்சித்துள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
 
'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.’ (திருக்குறள் 423)

என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லையென்றால், இழப்பு யாருக்கு?

தப்பித் தவறியும் தமிழர்கள் மேற்குறிப்பிட்ட தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட‌ சமூக நோய்களிலிருந்து மீண்டு, தமது தாய்மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை மதித்து, இயல்போடு உள்ளர்ந்த ஈடுபாடுகளுடன்(Passions)  வாழ வாய்ப்புள்ளதை அது தடுப்பது ஆகாதா?

தமிழ்நாட்டில், குறிப்பாக கிராமங்களில், ஆங்கிலத்தில் பேசுபவன் எல்லாம் 'அறிவாளி' என்ற கருத்து ஆழமாக வேர் பிடித்துள்ளது.'முட்டாள்த்தனமாக ஆங்கிலத்தில் உளற முடியும்’ என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில், பல சொற்பொழிவாளர்கள், குறிப்பாக திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்,கிராமங்களில் பேசும்போது கூட,தமிழ்ப் பேச்சின் நடுவே அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசி,தம்மை 'அதி புத்திசாலி'யெனக் காண்பித்துக் கொள்வார்கள். உலக அளவில் பாராட்டப்படும் இந்திய எழுத்தாளர்களில் ஒருவரைக் கூட 'திராவிட இயக்கம்' ஏன் உருவாக்க இயலவில்லை என்பது ஆய்விற்குரியதாகும். தாய்மொழிப் பற்றை 'தாய்ப்பால் பைத்தியம்' என்று கேலி செய்து, தமிழைத் தமிழர்கள் விட்டு விட்டு, ஆங்கிலத்தைத் தமது வீட்டு மொழியாக்கினால் உருப்படலாம் என்ற கருத்தை வளர்த்த இயக்கம் அது என்பதும் அந்த ஆய்வில் இடம் பெற வேண்டும். அந்த வழியில் தான் தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளார்கள் என்பது தான் இன்றைய நிலையாகும்.

ஒரு சமூகத்தில் சாதனையாளர்கள் எப்படி உருவாகிறார்கள்?

தாய்மொழியும்,பாரம்பரியமும், பண்பாடும் ஒரு மனிதரின் அடையாளத்தோடு தொடர்புடைய ஆணிவேர்களாகும்.தமது பாரம்பரியப் பண்பாட்டு சூழலில் தாய்மொழி வழியில் அடிப்படைக்கல்வி கற்பதே, குழந்தைகளின் புலன் உணர்வுகள் தொடர்பான மூளை வளர்ச்சிக்கு நல்லது என்பதை உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. (https://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html)


அத்தகைய மூளை வளர்ச்சி பெற்றவர்கள் தான் வாழும் சமூகத்தோடும், இயற்கையோடும் ஒட்டிய வாழ்வும், அதன் மூலம் தனது இயல்போடு இசைந்த உள்ளார்ந்த ஈடுபாடுகளை(Passions)  அடையாளம் கண்டு, பேணி வளர்த்து, இயல்பான இன்பங்களை அனுபவித்தும், துன்பங்களை அதற்கான 'விலையாக' ‘அனுபவித்தும்’ வாழ இயலும்.(https://tamilsdirection.blogspot.com/2016/02/style-definitions-table.html) 

எனவே அந்த ஆணிவேர்களைப் பேணிப் பாதுகாப்பதும் அவசியமாகும். உலக அளவில் சாதனை புரிந்த விஞ்ஞானிகளும்,தொழில்நுட்ப வல்லுநர்களும், படைப்பாளர்களும் உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு அவ்வாறு வாழ்ந்தவர்களே என்பதைக் கவனத்தில் கொண்டு, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காப்பாற்றியாக வேண்டும்.

No comments:

Post a Comment