Monday, October 28, 2013



    தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்


   வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்


எப்பாடுபட்டாலும் சீக்கிரமாக பணம், செல்வாக்கு சம்பாதிப்பது எப்படி ? என்ற வெற்றியின் இரகசியத்தை அறிந்து செயல்படுத்துவதில் தமிழ்நாட்டில் ஒரு கணிசமான மக்கள்  'புத்திசாலிகள்(?) ஆக‌ முயற்சித்து வருகின்றனர்.

சுமார் 10,20,30 வருடங்களுக்கு முன் கள்ளச்சாராயம் காய்ச்சிப் பிழைத்தவர்களாக, அரசுப் பணியில் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டு பணி  நீக்கத்திற்குள்ளானவர்களாக, கூலி வேலை செய்தவர்களாக, அடியாளாக இருந்தவர்களெல்லாம் இன்று பலநூறு கோடிகளுக்கு அதிபதிகளாக வலம் வருவது அவர்களின் கண்களை உறுத்துகிறது. அந்த 'புதிய' பணக்காரர்களுக்கு திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளில் வி.ஐ.பி ஆக மதித்து கிடைக்கும் 'சமூக கெளரவம்' , அவர்கள் குடியிருக்கும் பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள வீடு, பயன்படுத்தும் அதிக விலையுள்ள கார் போன்றவை எல்லாம்  அவர்களின் கண்களை உறுத்துகிறது. 

அந்த வெற்றியின் இரகசியத்தை சுருக்கமாக கீழ்வரும் கதை தெளிவுபடுத்தும்.
கதையில் வரும் ஊர் தமிழ்நாடு என்பதைப் புரிந்து, நம்மைச் சுற்றி நடப்பவைகளை இந்த கதை மூலம் கிடைக்கும் பார்வையில் பார்த்தால் இன்று தமிழ்நாடு எப்படி இருக்கிறது என்பது புலனாகும்.  அந்த வெற்றியை நாமும் நம் வாழ்வில் பெறுவதா? வேண்டாமா? என்பதும் தெளிவாகும். 

மனிதர்கள் எல்லாம் நாய்களைப் போல 

ஒரு ஊரில் மனிதர்கள் எல்லாம் எலும்புத் துண்டுக்காகவே நாய்களைப்போல (நாய்கள் மன்னிக்கவும்) வாழத் தொடங்கினார்கள். அவ்வாறு வாழத் தொடங்கிய பின், தன்னலமற்ற தலைவர்கள் ஒவ்வொருவராக மறைந்தார்கள். அதிக செல்வாக்குள்ள ஒருசில நாய்களே தலைவர்களாக வலம் வந்தார்கள்.

எலும்புத் துண்டு என்பது பணம், செல்வாக்கு, புலனின்பம் போன்றவையே.

மற்ற நாய்களையெல்லாம் தமக்கு வாலாட்டுமாறு செய்து ஒரு சில நாய்கள் மட்டும் எவ்வாறு தலைவர்களாக வளர முடிந்தது என்பது முதலில் புரியாத இரகசியமாக இருந்தது. சில புத்திசாலியான இளம் நாய்கள் அதை அனுபவரீதியாக கற்று சமூக‌ ஏணியில் வேகமாக முன்னேறினார்கள்.  மற்ற சில நாய்கள் அந்த அளவுக்கு முன்னேற 'திறமையின்றி' கீழ்மட்ட‌ம், நடுமட்டம் என்ற அளவுக்கே உயர முடிந்தது. அந்த இரகசியம் வருமாறு. 

முதல் இரகசியம் 

முதலில் பணம், செல்வாக்கு சம்பாதிப்பதற்கான‌  ஏணியில் ஏறுவதற்கான தகுதிகளை அடையாளம் கண்டு, தத்தம் திறமைகளுக்கு ஏற்ற‌வாறு அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். அடிதடியில் பங்கேற்று அதிக பாதிப்பில்லாமல் தப்பிக்கும் அளவுக்கு சற்று உடல் வலிமையையும், மனவலிமையையும் பெற்று, மனசாட்சியில்லாமல் சகத் தொண்டர்களை அதிக பாதிப்பைச் சுமக்க வைத்து, ஆனால் வெற்றிக்கு தாமே காரணம் என்று,  மற்றவர்களை நம்ப வைக்க வேண்டும். அதற்கு தனக்கு சாதகமாக பேசும் தம்மை விட கீழான நாய்களை, அதற்கேற்ற எலும்புத் துண்டுகளைப் போட்டு தம்மிடம் வைத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் எல்லா வகையான (விலைமாதரை ஏற்பாடு செய்வது, அல்லது ஏற்பாடு செய்யப்பட்டதைக் கூட்டிப் போவது, காண்டிராக்ட், சொத்து விற்பனை போன்றவற்றில் லஞ்சம் வாங்கித் தருவது போன்ற பல) புரோக்கர் தொழில்நுட்பத்தையும் வளர்த்துக் கொள்வது போன்ற கூடுதல் 'தகுதிகளு'டன் ஏணிப்படியில் கால் வைப்பது; அப்பணிகளுக்கு சகதுணை நாய்களை வைத்துக் கொள்வது;  கவர்ச்சிகரமாக பேசுவது, கதை, கவிதை எழுதுவது போன்றவை ஏணியில் வேகமாக ஏற துணை புரியும் கூடுதல் தகுதிகளாகும்.

தமது கிராமத்தில், ஊரில், தெருவில் பொதுப் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் இளைஞர்களில் பலருக்கு அவரவர்களுக்கான எலும்புத்துண்டுகளை (குவார்ட்டர், பிரியாணி, செலவுக்கு பணம்) வினியோகித்து சிறிய நாய்களைப் பெறுவது எளிதே.

அதாவது  பெரிய எலும்புத் துண்டுக்கு அலையும் நாய், சில சிறிய எலும்புத் துண்டுகளைத் தம் வசம் வைத்துக்கோண்டு சிறிய நாய்களை தமக்கு சாதகமாக செயல்பட வைக்கவேண்டும்.

  இரண்டாவது இரகசியம் 

தமக்குக் கிடைத்த பெரிய எலும்புத்துண்டுடன் திருப்தி அடையாமல், அதில் சிலவற்றை தம் சக நாய்களுக்கு வினியோகித்து அவற்றில் சில சரியான நாய்களை தமது இடத்திற்கு தகுதியாக்கி, இன்னும் பெரிய எலும்புத் துண்டைப் பெற ஏணியில் அடுத்தடுத்தப் படிகளில் ஏற வேண்டும். அதற்கு அந்தந்தப் படிகளில் உள்ள தம்மை விட பெரிய நாய்களுக்கு சகதுணை நாயாக மேலேக் குறிப்பிட்ட தகுதிகளைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும். அதாவது அடிதடி புரோக்கர் வேலைகளிலும் சிறிய மட்டத்திலிருந்து பெரிய மட்டத்திற்கு உயர வேண்டும். 

அதாவது தமக்கு கிடைத்த எலும்புத்துண்டு, தகுதிகளுடன் திருப்தி அடையாமல், பெரிய எலும்புத் துண்டு, உயர்நிலைத் தகுதி நோக்கி தொடர்ந்து முன்னேற வேண்டும்.

மூன்றவது இரகசியம்

ஒரு குறிப்பிட்ட மேல் நிலையை அடைந்த பின், மேலும் முன்னேற,  நன்றி மறக்கும் பண்பையும், திரித்த உண்மைகளையும் பொய்களையும் கலந்து தம்மை பெரிய தியாகியாக, போராளியாக, தமிழ் அறிஞராக, ராஜதந்திர நிபுணராக தொடர்ந்து விளம்பரப் படுத்திக் கொள்ள வேண்டும். தம்மை விட மேல் நிலையில் உள்ள நாயின் இடத்தைப் பிடிக்கும் வரையில், அந்த நாயின் வெறுப்புக்கோ கோபத்துக்கோ உள்ளாகாத வகையில் அந்த நாயை துதிபாடிக்கொண்டே மேலே சொன்னவற்றைச் செய்ய வேண்டும்.

அதாவது தமக்கு மேலுள்ள தலைவர் நாயைத் துதிபாடிக்கொண்டே நன்றி மறப்பது, கூசாமல் துரோகம் செய்வது, சுய விளம்பரம் செய்வது ஆகிய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

நான்காவது இரகசியம் 

 புதிதாக ஒரு நாயைச் சந்தித்தவுடன் சமூக ரீதியில் அந்த‌ நாய் தமக்கு சமமா?, கீழா? மேலா? என்று சில நொடிகளில் எடை போடும் திறமை வேண்டும். மேலான நாய் எனில், அதற்கு உடனே வாலாட்டி, தம்மிடம் அந்நாய்க்குப் பயன்படும் திறமைகள் இருப்பதை உணர்த்தி நெருக்கமாக வேண்டும். கீழான நாய்களை தமக்குப் பயன்படும் என்றால், தம்மிடம் அந்நாய்களுக்கான எலும்புத் துண்டுகள் இருப்பதை உணர்த்தி வாலாட்ட வைக்க வேண்டும். பயன்படாத நாய்களை உடனே தள்ளி வைக்க வேண்டும்.சமமான நாய் எனில் அதை முடிந்த அளவுக்கு நம்மை விட கீழ் என்று மட்டம் தட்டுவதில் நிபுணராக இருக்க வேண்டும். 

அதாவது புதிதாக சந்திக்கும் நாயை எடை போட்டு தமது நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

ஐந்தாவது இரகசியம் 

தாம் சந்திக்கும் எந்த தவறுக்கும், பிழைக்கும் தாம் பொறுப்பல்ல என்ற 'தன்னம்பிக்கை'யும், மனசாட்சியின்றி கூசாமல் தமது கஷ்டங்களுக்கும், தோல்விகளுக்கும் மற்றவர்களே காரணம் என்று அடித்து பேசும் 'மன உறுதியும்' வேண்டும். தமது எஜமான நாய்கள் நம்பும் அளவுக்கு இவற்றில் திறமைசாலிகளாக இருக்க வேண்டும். 

இரண்டும் ஒன்றாக –two in one 

இப்படிப்பட்ட நாய்கள் நம்மிடம் இல்லாத எலும்புத் துண்டு வேறு நாய்களிடம் இருக்கிறதா என்பதிலேயே தமது வாழ்வின் கவனத்தை செலுத்தி, அதைப் பெறுவதற்காக வாழ்வதே 'வாழ்வின் இலட்சியம்' என்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் எந்த பிரச்சினை வெளிப்பட்டாலும், அதை தமது எலும்புத் துண்டு வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு விழிப்புடன் இருப்பதும் அவசியமே. தமது ஊழல் குறுக்குவழி பணத்தின் ஒரு பகுதியை, 'முதலீடாக' 'நன்கொடை' வழங்கி, 'சாதி ஒழிப்பு, தமிழ் உணர்வு, ஆன்மீகம்' போன்ற, அமைப்புகளின் புரவலராக வலம் வருவதும் அந்த செயல்நுட்பத்தில் அடங்கும்.

தமக்குப் பயன்படாதவர்கள் எவ்வளவு பெரிய அறிஞராகவோ, பொதுத்தொண்டராகவோ, தியாகியாகவோ,நேர்மையானவராகவோ இருந்தாலும் அவர்களை 'முட்டாளாகவும், கோமாளியாகவும், ஏமாளியாகவும்' கருதி தமக்குள் எள்ளி நகையாடுவது இந்நாய்களின் விசேடப் பண்பாகும்.

இந்த வெற்றி தொழில்நுட்பத்தில் ஒரே நேரத்தில் எலும்புத் துண்டு தேடும் நாயாகவும், தம்மை விட கீழான நாய்களுக்கு பொருத்தமான எலும்புத் துண்டுகள் விநியோகிக்கும் எஜமானனாகவும் இரண்டும் ஒன்றாக –two in one - ஒரே நேரத்தில் (simultaneous) இருக்கும் திறமை வேண்டும். 

அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம் 

நாம் மேலேக் குறிப்பிட்ட நாய்களாக வாழ்கிறோமா? அல்லது உண்மை, நேர்மை, அன்பு, தொண்டு ஆகிய‌ பண்புகள் கொண்ட மனிதர்களாக வாழ்கிறோமா? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம். 

தமிழ்நாட்டில் கிராமம், நகரம் அனைத்திலும் நாய்க் குடும்பங்கள் போல் வாழும் குடும்பங்களில் உள்ள முதியவர்களின் நிலை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மோசமாகி வருகிறது. நாயாக உள்ள பிள்ளைகள் மதிக்கும் அளவுக்கு, புத்திசாலித்தனமாக 'செல்வம்' வைத்துள்ள முதியவர்களைப் அப்பிள்ளைகள் மிகவும் மதித்து தாங்குகிறார்கள். தமது 'லஷ்மண் கோடு' எல்லை தெரியாமல், பிள்ளைகள் விஷயத்தில் மூக்கை நுழைத்து அவமானப்பட்டும், 'நாய்கள்' அவர்கள் என்று 'தெளிவடையாமல்' 'பிரச்சினையாக' வாழும் முதியவர்களும் இருக்கிறார்கள். நகரத்தில் உள்ள இட நெருக்கடியையும், தமது பிள்ளைகளின் 'நுகர்வு கலாச்சாரத்தையும்'(?) புரிந்து கொண்டு, சகல வசதிகளுடைய முதியோர் விடுதியை தேர்ந்தெடுத்து, பணம் கட்டி, அங்கு வாழ்ந்து கொண்டு, தமது பிள்ளைகளுடன் நல்லுறவில் உள்ள முதியவர்களும் இருக்கிறார்கள். திருக்குறள் 813 படி, நட்பு, குடும்பம் உள்ளிட்ட எல்லா உறவுகளுமே 'லாப நட்டம்' பார்த்துப் பழகும் 'கள்வர்களாக' மாறி வரும் காலக்கட்டம் இது. இச்சூழலில் நமது நல்ல பண்புகளை இழக்காமல், சுயமரியாதையோடு வாழ்வது ஒரு சவால் தான். முடியாதவர்கள் தற்கொலையை நாடும் போக்கும் தமிழ்நாட்டில் துவங்கியுள்ளது. நாய்க்குடும்பங்கள் போல் இல்லாமல்,  நல்ல பாரம்பரியத்துடன் அன்பின் அடிப்படையில் இந்த சூழலிலும் வாழும்  குடும்பங்கள் தெய்வக் குடும்பங்கள் ஆகும். 

அன்பின் அடிப்படையில் இருக்க வேண்டிய குடும்ப உறவுகள், மனித உறவுகள் எல்லாம் எலும்புத் துண்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாய்க் குடும்பங்கள் போல் வாழும் நாடாக தமிழ்நாடு வளரலாமா? அதற்கு 'பெரியார் தந்த புத்தி' பங்களிப்பு வழங்கலாமா?

எப்போது துவங்கி எப்படி வள்ர்ந்தது? 

இந்த போக்கு தமிழ்நாட்டில் எப்போது துவங்கி எப்படி வளர்ந்தது?

இந்த போக்கை வெளிப்படுத்தும் வெற்றிகரமான திரைப்படமாக 'சூது கவ்வும்' வெளிவந்தது. அதைத் தொடர்ந்து " குற்றங்களே குணங்களாகிவிட்டன!" ( தினமணி கட்டுரை) என்ற தலைப்பில் தமிழ் எழுத்தாளர்  திரு. பழ. கருப்பையா மேலேக் குறிப்பிட்ட கேள்விக்கான விடையை எழுதியுள்ளார்.

1967‍இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டில் ஒரு சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழ் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தார்கள். முதல்வர் பொறுப்பை ஏற்றது முதல் இறக்கும் வரை தனது கட்சியினரின் சுயநலப் போக்கினால் முதல்வர் அண்ணா எவ்வளவு மன உளைச்சலுகுள்ளானார் என்பது ஆட்சிமாற்றத்தின் தன்மையைக் கேள்விக்குறியாக்கியது.  அதன்பின் மேலேக் குறிப்பிட்ட வெற்றிக்கான தொழில்நுட்பம் விதை கொண்டு வேகமாக வளர்ந்தது. அந்த மாற்றங்கள் திரைப்படம் வழியே எவ்வாறு பிரதிபலித்து என்பதையும், இன்று தமிழ்நாட்டில் வெற்றிப்படமாக வெளிவந்த 'சூது கவ்வும்'படம் இன்றைய நிலையைப் பிரதிபலித்துள்ளது பற்றியும் தமது கட்டுரையில் பழ.கருப்பையா விளக்கியுள்ளார். தனிப்பட்ட முறையில் தனிமனித ஒழுக்கத்தில் குறை சொல்ல முடியாத திராவிட இயக்க தலைவர் பெரியாரில் துவங்கிய திராவிட இயக்கத்தின் திரைப் படங்கள் பற்றி விவாதித்து , "சூது கவ்வும்' படத்திற்கான கதைக்களம் கருணாநிதி உருவாக்கிய தமிழ்நாடு" என்று பழ.கருப்பையா அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 

நோய் பிடித்த தாவரத்தின் நோயாக, அதன் ஆணி வேரையே கருதிய வைத்தியம் 

தனிமனித அளவில் பாராட்டுக்குரியவர்களும் எதையும் தவறாகத் தொடங்கினால், அதன் பயணத்தில் தவறான மனிதர்கள் தலையெடுத்து மிகவும் பாதகமாகவே முடியும். தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழியாகவும்,  தமிழ் பாரம்பரியத்தை  தமிழரின் கேடாகவும் கருதிய பெரியாரின் முயற்சியானது, நோய் பிடித்த தாவரத்தின் நோயாக அதன் ஆணி வேரையே கருதி, அகற்றிய‌ வைத்தியமாகிவிட்டது . தாய்மொழி வழிக் கல்வி பற்றிய உலக ஆய்வுகளை, ஓரங்கட்டி, பண்பாட்டு ஒழுக்கம்/ படைப்பாற்றல்/சுய உருவாக்கம் ஆகியவற்றை இழந்து, ஆங்கில் வழிக் கல்வி என்ற சூது, தமிழ்நாட்டைக் கவ்விய விளைவில் அது முடிந்தது.
மேலே சொன்னபடி, தனிமனித ஓழுக்கத்தில் பெரியவர்களான பெரியார், ராஜாஜி (தி.மு.கஆட்சியைப் பிடிப்பதற்கும், கருணாநிதி முதல்வராவதற்கும் துணையானவர்) தொண்டுகளின் விளைவாக, இந்தியாவிலேயே , ஆதிக்க அளவில், பாரம்பரிய பண்பாட்டு ஓழுக்கத்தை அகற்றி, திரிந்த மேற்கத்திய ஒழுக்கத்துடன் அடிப்படைக் கல்வியில் 'ஆங்கில வழி' சூதுக்கு இரையாகி, பிற மாநிலங்களுக்கு 'தவறான முன்னுதாரணமாக' விளங்கி வருவது, தமிழ்நாடு மட்டுமே. உலகிலேயே தாய்மொழிவழிக் கல்வியின் பலன்களை 'அதிவேகமாக‌'  இழக்கத் தொடங்கியிருப்பதும் தமிழ்நாடு மட்டுமே.

அதன் விளைவாக, அறிவு நேர்மை, சமூகப் பொறுப்பு ஆகியவற்றை ஓரங்கட்டி, யாரை ஏணியாகப் பயன்படுத்தி அதிக செல்வம், செல்வாக்கு பெறுவது என்ற ‘வெற்றிக்கான எலும்புத் துண்டு செயல்நுட்ப’ ஆதிக்கத்தில் தமிழ்நாடு சிக்கியுள்ளது. ஆக உடலுழைப்பு, அறிவு உழைப்பு போன்றவற்றில் தமிழரல்லாதாரை நம்பி இயங்க வேண்டிய நிலைக்கு தமிழ்நாடு வந்து விட்டது. திருக்குறளில் ( பொருட்பாலில், காமத்துப் பாலில் அல்ல)  'வரைவில் மகளிர்' ( விலை மாதர்)அதிகாரம் விளக்கும் செயல் நுடபமே இது. 

'இருட்டறையில் பிணம்'(திருக்குறள் 913) தழுவியவர்கள் பெரும்பான்மையார்களாக வாழ்வதை 'சூது கவ்வும்' திரைப் படமாக வெளிப்படுத்திய இளைஞர்களும், அதை " குற்றங்களே குணங்களாகிவிட்டன!" என்று அடையாளம் காட்டிய பழ.கருப்பையா அவர்களும் பாராட்டுக்குரியவர்களே. 

அதாவது மேலேக் குறிப்பிட்ட வெற்றி தொழில்நுட்பத்தில் ஒரே நேரத்தில் எலும்புத் துண்டு தேடும் நாயாகவும்,எலும்புத் துண்டுகள் விநியோகிக்கும் எஜமானனாகவும் இரண்டும் ஒன்றாக –two in one - இருக்கும் திறமை வேண்டும் என்பதைப் பார்த்தோம். கூடுதலாக அவர்கள் ஒரே நேரத்தில் 'வரைவில் மகளிராகவும்'(எலும்புத் துண்டு தேடும் நாயாகவும்,),  'இருட்டறையில் பிணம் தழுவியவர்’களாகவும்(எஜமானனாகவும் )  இரண்டும் ஒன்றாக –two in one - தமிழ்நாட்டில் 'வி.ஐ.பி' க்களாக வாழ்வதும் இதனால் தெளிவாகிறது. 

தமிழ்நாட்டின் நிலைமை 

இத்தகையோர் செல்வாக்கில் உள்ள தமிழ்நாட்டின் நிலைமை கீழ்வருமாறு இருப்பதில் வியப்புண்டோ?

படிக்க மாண‌வரின்றி ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. தமிழ் பயிற்று மொழியாக நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழரின் வரலாற்று சான்றுகளான பல கல்வெட்டுகள் குவாரிகளில் அழிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் பேச்சு வழக்கிழந்து, ஆங்கிலமும் தமிழும் கலந்த தமிங்கிலீஸ் செல்வாக்குடன் வளர்ந்து வருகிறது.

மேலே குறிப்பிட்டவற்றுடன் கூடுதலாக தமிழ் சம்பந்தப்பட்ட குழப்பங்கள் ( பல கருத்து வேறுபடுகளுடன் தனித் தமிழ், திராவிட இயக்கத் தமிழ், பொதுவுடமையாளர் தமிழ், இவை சாராத எழுத்தாளர் தமிழ், பொது மக்கள் தமிழ்) காரணமாக , தமிழ் தனது தகவல் பரிமாற்ற வலிமையை தமிங்கிலீஸிடம் இழந்து வருவதும் ஒரு கொடுமையாகும்.

கணையாழி போன்ற இலக்கிய இதழ்களிலும், சுஜாதா உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளிலும் இலக்கணத்தின் செல்வாக்கும் மிகவும் பலகீனமாக இருப்பதை மறைந்த தமிழ் அறிஞர் திரு.முருகன் வெளிப்படுத்தியுள்ளார். (மொழிப் பார்வைகள் பக்கம் 56-57)

'தற்காலத் தமிழ்' புலமையாளர்களே பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் தமிழ்த் துறையை நிரப்பி வருகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்கள் 'லத்தீன்' வழியில் நூலகக் காட்சிப்பொருட்களாக மாறும் வாய்ப்பும் உள்ளது.

தமக்கு கிடைக்கும் சான்றுகளின் வரைநிலைகள் பற்றி கவலைப் படாமல் உணர்வு பூர்வமாக தமிழ் அராய்ச்சிகள் பெரும்பாலும் நடைபெற்று அபத்தமான முடிவுகள் வெளிவரும் போக்கும் உள்ளது.(‘தமிழாராய்ச்சியில் நடைபெறும் தவறுகளும், தமிழுக்கான விடுதலையும்’- http://tamilsdirection.blogspot.in/2013/06/normal-0-false-false-false-en-us-x-none_3429.html  font in TM TTVALLUVAR) 

 
'ராஜா அம்மணமாக இருக்கிறார்' என்று சின்னப் பிள்ளை கூட சொல்ல பயப்படும் அளவுக்கு, செல்வம் மற்றும் செல்வாக்கின் துணையோடு தமிழ்நாட்டில் தமிழ் உள்ளிட்ட எந்த துறையிலும் யார் வேண்டுமானாலும் என்ன  'சாதனை'யும் புரியலாம், அதற்கு போட்டி போட்டுக் கொண்டு பாராட்டுதல்களும் குவியும் என்பது தான் இன்றைய நிலை. 'திராவிட ஆட்சிகளின்' விளைவாக உருவான புதுப்பணக்காரர்களில், 'நக்சலைட், தனி தமிழ்நாடு, தனி ஈழம், தமிழ் மானம், தலித், பெரியாரியல், இந்துத்வா, முஸ்லீம், ஆன்மீகம்' என்று பல முகமூடிகளுடன் 'வலம்' வரும் பொதுவாழ்வு வியாபாரிகளுக்கு, அவரவர் 'தகுதி, திறமைகளுக்கு' ஏற்ப, 'நன்கொடை' வழங்கி, தமது 'சமூக பாதுகாப்பு கவசத்தை' உருவாக்கி, 'செல்வாக்குடன்' 'வாழ்வியல் புத்திசாலிகளாக' வளர்ந்து வருபவர்கள் யார்? யார்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இந்த நிலை மாறுமா? மாற வாய்ப்புண்டா? 

பத்திரிக்கைகளிலும் தொலைக் காட்சிகளிலும் படிக்க பண உதவி கேட்கும் ஏழை மாணவர்களுக்கு விளம்பரமின்றி உத்விகள் கிடைத்து வருவது தமிழ்நாட்டில் ஒரு புதிய போக்காகும்.

படிக்க மாணவரின்றி பல அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வரும் சூழலில், மனித தெய்வங்கள் போன்ற சில அசிரியர்களின் விளம்பரமற்ற உழைப்பால், தனியார்ப் பள்ளிகளையும் விஞ்சி, மாணவர்கள் போட்டி போட்டு சேரும் அரசுப் பள்ளிகளும் தமிழ்நாட்டில் இருப்பதும் ஒரு புதிய போக்காகும்.

உலக அளவில் பல ஆய்வுகள் வெளிப்படுத்தியபடி, விளையாட்டுப் பள்ளி முதல் 5ஆம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருந்தால் தான் குழந்தைகளின் புலன் உணர்வு அறிவு வளர்ச்சி நன்றாக இருக்கும் என்ற தெளிவுள்ள புத்திசாலிப் பெற்றோர்கள்,  தாமதமின்றி அவ்வழியில் தமது குடும்பப் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்பது தொடர்பான கட்டுரைக்கு சமூகத்தில் படித்த மேல்தட்டினர் காட்டிவரும் ஆர்வம் நல்ல மாற்றத்திற்கான அறிகுறியாகும். 

ஆட்சி மாற்றம் ‍ - நாய்களுக்கு திண்டாட்டம் 

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் , கடந்த ஆட்சியில் வரைமுறையில்லாமல் ஆட்டம் போட்ட நாய்கள் வாலை சுருட்டிக்கொண்டு வாழ்வது, பொதுமக்களுக்கு நாய்கள் பற்றிய பயத்தை பெருமளவு குறைத்துள்ளது.

குவார்ட்டர், பிரியாணி, செலவுக்குப் பணம் என்ற முறையில் பெருங்கூட்டம் கூட்டப்பட்டு வந்த தமிழ்நாட்டில், அவையெல்லாம் இல்லாமல், நுழைவுச் சீட்டு பண‌ம் கொடுத்து வாங்கி, அவற்றை விட பெரிய கூட்டம் திருச்சியில் மோடிக்கு கூடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அக்கூட்டத்தில் பெருமளவு படித்த இளைஞர்களும், பெண்களும், குடும்பங்களும் இருந்ததும் கவனிக்கத் தக்கது. மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு பா.ஜ.கவிலேயே கணிசமான எதிர்ப்பு வெளிப்பட்ட சூழலில், தமிழ்நாட்டில் வெளிப்பட்ட  இந்த புதிய போக்கு இந்தியாவின் கவனத்தையே ஈர்த்தது. ஆனால் தமிழக பா.ஜ.கவானது, மோடி அலையின் தமிழக வீச்சு பற்றிய புரிதலின்றி, 'திராவிட' பாணி 'உணர்ச்சிபூர்வ' நோயில் சிக்கி, பயணிக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 
(http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html) தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமுமே (depoliticizing) ,கட்சி, கொள்கை தொடர்பின்றி, நடுத்தர, ஏழை மக்களிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்குள்ள செல்வாக்கிற்கும், மாணவர்களிடையே பிரதமர் மோடிக்குள்ள செல்வாக்கிற்கும், காரணங்களாகும். ('மோடி ஒருவராக நாட்டின் போக்கை மாற்ற முடியுமா?';
http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_16.html)



இயற்கையில் எல்லாமே சுழற்சி அடிப்படை 

இயற்கையில் எல்லாமே சுழற்சி அடிப்படையில் இயங்குபவையே. உச்சத்திற்கு சென்ற பின் கீழிறங்குவதும், கீழ்மட்டத்திற்கு சென்ற பின் மேலெழுவதும் இயற்கையே. தமிழ்நாட்டில் மனித 'நாய்கள்'உச்ச நிலையை அடைந்து விட்டன. கட்சிகளுக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லாமல், தத்தம் பிரச்சினைகளுக்கு மக்களே துணிச்சலுடன் போராடத் தொடங்கி விட்டனர். மேலேக் குறிப்பிட்ட புதிய போக்குகள் தமிழ்நாட்டை அவமானகரமான வீழ்ச்சியிலிருந்து மீட்கும் காலம் அதிக தொலைவில் இல்லை என்பதை உணர்த்துகின்றன. 'நாய்களாக' பெருமிதத்துடன் வாழ்ந்து வருபவர்கள் எல்லாம், மனிதர்களாக வாழ்பவர்களைக் கண்டு வெட்கப்பட்டு ஒதுங்கும் காலமும் அதிக தொலைவில் இல்லை. இன்று 'வெற்றியின் இரகசியமாக' இருப்பதானது, விரைவில் 'இழிவின் இலக்கணமாக', மக்களால் கருதப்படும் காலமும், அதிக தொலைவில் இல்லை.

குறிப்பு:
மாட்டிக் கொள்ளாமல் ஆட்கடத்தல்(kidnapping) மூலம் பணம் சம்பாதிக்கும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்திய திரைப்படம் 'சூது கவ்வும்'. அதே போல் ‘வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசிய’த்தை வெளிப்படுத்த, அத்திரைப்பட இளைஞர்கள் போன்று யாரும் முயன்றால்,அதன் திரைக்கதை உருவாக்கத்திற்கு ஆலோசகராக (Resource Person) நான் செயல்பட முடியும்.

Friday, October 25, 2013


 தமிழ்வழி வீழ்ச்சியும் மீட்சியும்


அடிப்படைக் கல்வி என்பது மூளையின் புலன் உணர்வு வளர்ச்சியுடன் தொடர்புடையது என்பதும், தாய்மொழிக் கல்வியில் தான் மூளை வளர்ச்சி பெறும் என்பதும், தாய்மொழிப் பண்பாட்டுடன் அவ்வளர்ச்சி தொடர்புடையது என்பதும்,  அடிப்படைக் கல்வி தொடர்பான‌  ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளன. பின்னர் பிறமொழிவழியில் கல்வியைத் தொடர்வது எளிதாகி, அதிக பலன் தரும்.உலகிலேயே இந்த பலனை தமிழ்நாடு மட்டுமே இழந்து வருகிறது.

விளையாட்டுப் பள்ளி முதல் 5ஆம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருந்தால் தான் குழந்தைகளின் புலன் உணர்வு அறிவு வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று உலக ஆய்வுகள் எல்லாம் உணர்த்துகின்றன.
சான்றுகளாக;

1. www.ccsenet.org/ass - Asian Social Science Vol. 7, No. 12; December 2011- Primary School Pupils’ Perception of the Efficacy of Mother Tongue Education in Ibadan Metropolis by Dr. David O. Fakeye;
2. The findings of a comprehensive research review carried out for the World Bank: Dutcher, N. in collaboration with Tucker, G.R. (1997):
The Use of First and Second Languages in Education: A Review of Educational Experience , Washington D.C., World Bank; 
3. Education for All: Policy Lessons From High-Achieving Countries:
UNICEF Staff Working Papers , Mehrotra, S. (1998), New York, Unicef;
4. Expanding Educational Opportunity in Linguistically Diverse Societies- Dutcher, N:
, Center for Applied Linguistics, Washington DC.(2001);
5.  Education in a multilingual world  - Published in 2003 by UNESCO

இது போல் எண்ணற்ற உலக ஆய்வுகள் அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
(தாய்மொழிவழிக்கல்வி  குறித்த உலகளாவிய ஆய்வுத்தகவல்கள் கொண்ட அரிய நூல்: 'மொழிச்சிக்கல்கள் குறித்த சர்வதேசக் கருத்துக்கள்: கல்வி, அறிவு, அறிவியல் மற்றும் ஆங்கிலம் பயிவதற்குத் தாய்மொழியே திறவுகோல்' ஆங்கிலத்தில் ஜோகாசிங்; தமிழில் கண.குறிஞ்சி (94433 07681) புதுமலர் பதிப்பகம், ஈரோடு:  

திருப்பூர் அருகே சிங்கனூர் தாய்த்தமிழ் உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நேற்று நடந்தது. அதில் சிறப்பு விருந்தின ராக பங்கேற்ற மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: "நான் முதல் வகுப்பு படிக்கும் போது, மாட்டுக்கொட்டகையில் தான் படித்தேன். என்னை முழுக்க முழுக்க என் பெற்றோர் 11 ஆண்டுகளாக, தமிழில்தான் படிக்க வைத்தார்கள். அதனால் தான், இன்றைக்கு விஞ்ஞானியாக வளர்ந்துள்ளேன். என்னுடைய பலம் தாய் மொழியில் படித்தது தான்.

குழந்தைகள் தாய் மொழியில் படித்தால் முன்னேறாமல் இருப்பார்கள் என்கிற பெற்றோர் களின் எண்ணம் தவறானது. தமிழில் படிப்பதால், யாரும் சோடை போகப்போவதில்லை. முதல் 15 ஆண்டுகள் இயல்பான வர்களாக குழந்தைகள் இருக்க வேண்டும். அவர்களை இறுக்க மானவர்களாக மாற்றக்கூடாது. இஸ்ரோவில் பணிபுரியும் 90 சத வீதம் பேர் அவரவர் தாய் மொழியில் படித்தவர்கள்தான்" என்றார். http://tamil.thehindu.com/tamilnadu/ ;“நமது சிந்தனை தாய்மொழியில் தான் இருக்கும். எனவே, தமிழ்வழியில் தேர்வெழுத முடிவெடுத்தேன்.” அகில இந்திய அளவில் 117-வது ரேங்க்; சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழில் வெற்றிபெற்றிருக்கிறார்; சோழகன் குடிகாடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்ற பின், பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தமிழ்வழியில் படித்த இளம்பகவத் என்ற 34 வயது இளைஞர். http://tamil.thehindu.com/tamilnadu/


1970-களின் தொடக்கம் வரை, தமிழ்நாட்டில் மேலே சொன்ன ஆய்வுகளுக்கு ஏற்ப, உயர்நிலைப் பள்ளி வரை ஏறத்தாழ அனைத்து மாணவர்களும் ( விதி விலக்காக ஒரு சில ஆங்கில வழிப் பள்ளிகள் -   ஆங்கிலோ இந்திய மற்றும் வட மாநிலக் குழந்தைகளுக்கான) தமிழ்வழியில் படித்து, பின் கல்லூரிகளில் ஆங்கில வழியில் படித்து, உலக அளவில் சாதனையாளர்கள் உருவானார்கள்.

தமிழ்நாட்டில் ஆங்கிலவழிப் பள்ளிகள் 1970களில் புற்றீசல் போல் தொடங்கப்பட்ட காலத்தில் ஆட்டு மந்தைகள் போல் ஏதோ நல்லவழி என்று நினைத்து அப்பள்ளிகளில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சேர்த்தார்கள். உலக ஆய்வுகள் பற்றி தெரிந்து தாய்மொழி வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய படித்தவர்கள் மட்டுமின்றி, தமிழ்/திராவிட  அறிஞர்களும் தலைவர்களும் பற்றாளர்களும் , அந்த ஆட்டு மந்தை போக்கிலேயே தமது பிள்ளைகளையும் ஆங்கில வழியில் படிக்க வைத்தது பெரும் கொடுமையாகும்.
 


புற்றீசல் போல் ஆங்கிலவழிப் பள்ளிகள் தொடங்கப் பட்ட காலத்தில், பெரும்பாலான தமிழ்/திராவிட இயக்க அறிஞர்கள்,பேராசிரியர்கள் எல்லாம் எதிர் நீச்சல் போடுவதற்குப் பதிலாக ,அந்த தமிழ்வழி வீழ்ச்சி ஓட்டத்திலேயே தங்கள் குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்ததும், குற்ற உணர்வின்றி அவர்களுக்கு 'தமிழறிஞர் கோட்டா'வில் எம்.பி.பி.எஸ்,பி.ஈ படிக்க வைத்ததும் சீரணிக்க முடியாத தவறுகள் ஆகும். அந்த காலக் கட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைத்து, 9000 வருமான வரம்பு ஆணையை எதிர்த்து போராடியது போல, தொடர் போராட்டங்கள் நடத்தியிருந்தால், அந்த ஆணையை நீக்கி இட ஒதுக்கீட்டை உயர்த்தியது போல, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் 'ஆங்கில வழி புற்றீசலை' ஒழித்திருப்பார். அந்த சமயத்தில் மொத்த மாணவர்களில் +2 தமிழ் வழியில் எத்தனை சதவீதமோ, அத்தனை சதவீதம் எம்.பி.பி.எஸ்,பி.ஈ படிப்புகளில் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறைகளில் உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் அமைப்புகள் வலியுறுத்தவில்லை,- அவர்கள் பிள்ளைகள் ஆங்கில வழியில்.

இன்று ஏழைகளும் அவ்வழியில் செல்ல , ஆயிரக்கணக்கான தமிழ்வழி அரசுப் பள்ளிகள் படிக்க ஆளின்றி மூடப்பட்டு வரும் சவாலை தமிழ்நாடு சந்திக்க நேர்ந்தது. ('ஒரு பள்ளி, ஒரு மாணவன், இரு ஆசிரியர்கள் சேர்க்கைக்கு பெற்றோர்களிடம் கெஞ்சும் அவலம்'; http://www.dinamalar.com/news_detail.asp?id=1533588 ) அச்சவாலைச் சந்திக்க, அரசுப் பள்ளிகள் மூடப்படுவதைத் தவிர்க்க, அங்கு கூடுதலாக ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு செய்துள்ள முடிவினாலும், அரசுப்பள்ளிகள் மூடப்படுவது குறையவில்லை. அதைவிட தமது பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் 'தமிழ் வழி ஆதரவாளர்களின்' இரட்டை வேடமானது, அம்முடிவினால் அம்பலம் ஆனது, மிகப் பெரிய பலனாகும். இனி தமிழ் வழியின் நேர்மையான ஆதரவாளர்களின் குரலுக்கு பெற்றோர்கள் செவி மடுக்க வாய்ப்பு வந்துள்ளது.

ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் இயல்புக்கேற்ற வகையில் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்தெடுக்கவும் அடிப்படைக் கல்வி தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என்பதும் ஆய்வுகளின் அறிவுரையாகும்.


மாறாக கர்ப்பமாக இருக்கும் போதே, எம்.பி.பி.எஸ், பி.ஈ போன்ற படிப்புகளைக் கனவு காணும் தாய், குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் முடியும் போதே விளையாட்டுப் பள்ளியில் சேர்த்து, தமது பிள்ளைகள் 'அப்பா, அம்மா' வைத் தெரிந்து கொள்ளாமல் 'டாடி, மம்மி' என்று அழைப்பதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். பின் ஆங்கில நர்சரி பாடல்களை ( அதன் பொருள், பண்பாட்டுப் பின்னணி தெளிவின்றி) பாடுவதைக் கேட்டு மக்ழ்கிறார்கள். தாய்மொழி,நமது பண்பாடு உள்ளிட்ட ஆணிவேர்களின் தொடர்பற்று, தமது இயல்புக்கும், வாழும் மண்ணிற்கும், சம்பந்தமற்ற திரிந்த மேற்கத்திய பண்பாடு ஒழுக்க வாழ்வியல் திணிக்கப் பட்டு , அக்குழந்தைகள் குரங்காட்டியிடம் அகப்பட்டுக் கொண்ட குரங்கைப் போல வளர்கிறார்கள். தமது கனவுகளைக் குழந்தைகள் மீது திணித்து தாய்மார்கள் தம்மையுமறியாமல் குரங்காட்டிகளாக மாறும் போக்கும் கூடவே வளர்கிறது.

விடியற்காலை 5 மணிக்கே தூக்கக் கலக்கம் கூட கலையாத குழந்தைகளை எழுப்பி, குளிக்க வைத்து, சீருடை அணிவித்து வேனில் ஏற்றும் வரை அவர்கள் கடைபிடிக்கும் கட்டாயப்படுத்தல் போக்கும் சரி, பள்ளி திரும்பிய குழந்தைகளைப் பின் படிக்க வைக்கும் போக்கும் சரி, மதிப் பெண்கள் குறைந்தால் பெறும் கோபமும், பிள்ளைகளை அடிப்பதும் சரி, குரங்காட்டியையும் பெரும்பாலான தாய்மார்கள் விஞ்சி விடுவார்கள்.

அந்த காலத்தில் கல்லூரி மாணவர்கள் அனுபவித்திராத வசவுகளையும், தண்டனைகளையும், முதலாம் வகுப்பு சேரும் முன்னரே, இக்குழந்தைகள் அனுபவித்து விடுகின்றனர். அந்தக் கால கல்லூரி மாணவர்களை விட, தப்பிப்பதற்காக பொய் சொல்லுதல், புறங்கூறுதல், ஏமாற்றுதல் உள்ளிட்ட 'கலைகளில்', முதலாம் வகுப்பிலேயே அக்குழந்தைகள் நிபுணராகி விடுகிறார்கள்.


உடல் ரீதியாகவும்,உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்களை நாம் அறிவோம். ஆனால் தாய்மொழி கல்வியற்ற ஆங்கில வழிக் கல்வி மூலம் படைப்பாற்றல்/சுய உருவாக்கல் (originality) /நல்லொழுக்க மதிப்பீடுகள் (values) ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 1970‍களிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு செயற்கையான கல்வி பயிலும் குழந்தைகள் மேல்நிலைக் கல்வியைத் தாண்டும்போது, வீட்டுக்குப் பழக்கப்பட்ட செல்லப் பிராணிகளாகவோ (domesticated animals ) அல்லது யாருக்கும் அடங்காத முரடர்களாகவோ (unruly disobedient thugs ) வெளிப்படுகிறார்கள். இரண்டு வகையினருமே படைப்பாற்றல்/சுய உருவாக்கல்/நல்லொழுக்க மதிப்பீடுகள் ரீதியில் பாதிக்கப்பட்ட  மாணவர்களாகவே சமூகத்தில் வாலிபர்களாக வளர்கிறார்கள்.

விளையாட்டுப் பள்ளி (play school) முதல் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை 'மதிப்பெண் ரோபோக்களாக' கட்டாயப்படுத்தி, அதன் விளைவாக அதிக அழுத்தமும், எரிச்சலும் அகவயப் பட்ட பெண்களாக மாறி , தங்கள் சொந்த மகிழ்ச்சியையும் இழந்து 'கனவுக்காக'வாழ்கிறார்கள். மிக ஆசையுடன் 'செல்லப் பிராணி' போல் வளர்த்த குழந்தைகள் வாலிப வயதில் தாய்மார்களின் கனவுகள் சிதையும் அளவுக்கு, பாரம்பரிய ஒழுக்கமின்றி திரிந்த மேற்கத்திய ஒழுக்கத்தில் வாழவது  அவர்களுக்கு அதிர்ச்சியாகிறது. அதனால் மனநோய் மருத்துவரின் ஆலோசனை தேவைப்படும் அளவுக்கு பல தாய்மார்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆங்கில வழிக் கல்வியின் காரணமாக குழந்தைகள் 10வயது வரை இயல்பாக தமது பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்கத்துடன் பெற வேண்டிய மூளை வளர்ச்சியைப் பெறுவது சிதைக்கப்பட்டது. அதனால் வாழ்க்கையில் அவர்கள் சாதிக்கக் கூடியவற்றை விட குறைவாகவே சாதிக்க நேரிடுகிறது. அதிலும் அவர்களின் இயல்புக்கேற்ற துறையை அடையாளம் கண்டு, அதற்கான திறமைகளை வளர்த்து சாதிப்பதும் தடை படுகிறது. பெற்றோர்களின் கனவுகளுக்காக அவர்களின் வாழ்வு ஒரு வகையிலான மனித ரோபோக்களாக அமைந்து விடுகிறது. இந்த போராட்டத்தில் 'தோல்வி'யானவர்கள் தற்கொலை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பயங்கரவாதம் போன்றவற்றில்  ஈடுபடுகிறார்கள்.

1970 -களுக்கு முன் தமிழ்நாடு முழுவதுமே பெரும்பாலான மாணவர்கள் உயர்நிலைக் கல்வி வரை தமிழ்வழியிலேயே படித்தார்கள். ஆங்கிலத்தில் வலுவான இலக்கணத்துடன் மொழி அறிவும் பெற்றார்கள். கலை, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து கல்லூரி படிப்புகள் முழுவதும் ஆங்கில வழியில் இருந்தும் , அவர்கள் அதிலும் நன்கு படித்தார்கள். வெகுசில ஆங்கில வழிப் பள்ளிகளே இருந்தன. அதில் படித்த ஆங்கில வழி மாணவர்களை விட பெரும்பாலும் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் ஆங்கில வழியில் கல்லூரியில் அதிக மதிப்பெண்கள் எடுத்து நல்ல வேலைகளில் அமர்ந்தார்கள். 1970களில் தான் இது மாறத் தொடங்கி இப்போது ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு கூட அன்று தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கிருந்த‌ ஆங்கில அறிவு இல்லாமல் உள்ளது. 

இன்று ஆங்கிலத்தில் சரளமாக பேசி, எழுதி, பேராசிரியர்களாக, விஞ்ஞானிகளாக, ம‌ருத்துவர்களாக, பொறியாளர்களாக பணிபுரியும்/பணி ஓய்வு பெற்ற சுமார் 50 வயதுக்கும் மேலான அனைவருமே  11ஆவது வரை தமிழ்வழியில் படித்து,  அதன்பின் பி.யு.சி முதல் ஆங்கிலவழியில் படித்தவர்கள் தான்.

தமிழ் மட்டும் கற்றுக்கொண்டு கிணற்றுத் தவளையாக   இருப்பதும் தவறு தான். இன்று டெல்லியிலும்,வடநாட்டிலும், சிறப்பாக பணியாற்றும் மூத்த விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் உயர்நிலைக் கல்வி வரை தாய்மொழியில் படித்து , தமது படைப்பாற்றலையும்(creativity),சுய உருவாக்கலையும் (originality) வளர்த்து, பின் ஆங்கில வழியில் கல்லூரியில் படித்து, கூடுதலாக இந்தியும் படித்து வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.அதுவே புத்திசாலித்தனமான வழிமுறை இன்றைக்கும் கூட.

தமது பிள்ளைகள் சரியான புலன் உணர்வுகளுடன் கூடிய மூளை வளர்ச்சி பெற்று, அவர்களின் இயல்புகளுக்கேற்ற திறமைகளை வளர்த்து அவர்கள் நல்ல வாழ்வு வாழ வேண்டும் என்ற அக்கறையுள்ள பெற்றோர்கள் அடிப்படைக் கல்வியை தமிழ் வழியில் கொடுத்தால், அதன்பின் அவர்கள் எளிதில் ஆங்கில வழியில் உயர்நிலைக் கல்வியும், கல்லூரிக் கல்வியில் நன்கு படித்து வாழ்வில் வெற்றி பெறுவார்கள்.

கல்லூரிகளில் தமிழ் வழியில் இயற்பியல்(Physics)  30 வருடங்கள் பாடம் நடத்திய அனுபவம் எனக்கு உண்டு. எனக்கு தெரிந்த வரையில், தமிழ்/திராவிட இயக்கத் தலைவர்கள்,வசதியான தமிழர்கள் வீட்டுப் பிள்ளைகள் யாரும் தமிழ்வழியில் படித்தது கிடையாது. ஆங்கில வழியில் இடம் கிடைக்காதவர்கள் மட்டுமே தமிழ்வழியில் படித்தார்கள். குறிப்பிட்ட இடைவெளியில் மாறிவரும் பாடத்திட்டங்களுக்கு ஏற்ற வகையில் தமிழ்வழி பாடப் புத்தகங்கள் வெளிவருவது இல்லை, அறிவியல் சொற்கள் அகராதி அவ்வப்போது வெளிவராதது, மேலும் ஆழமாகப் படிக்க ஆங்கில் நூல்களே தேவை, பட்டமேற்படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் ஆங்கில வழியே சாத்தியமானது.  கல்லூரிகளில் தமிழ் வழி என்பது இந்த நிலையில் சரியல்ல.

தமிழ்ப் பற்றாளர்களும், தமிழ்/திராவிட கட்சிகளின் தலைவர்களும் தமது குடும்பப் பிள்ளைகளை விரும்பி சேர்க்கும் அளவுக்கு கல்லூரியில் தமிழ்வழி சிறப்புடன் அமையும் போது, மற்றவர்களும் அதனால் கிடைக்கும் பலன்களை அறிந்து அவர்கள் வழியில் பயணிப்பார்கள்.


விளையாட்டுப் பள்ளி முதல் 5ஆம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருந்தால் தான் குழந்தைகளின் புலன் உணர்வு அறிவு வளர்ச்சி நன்றாக இருக்கும் என்ற தெளிவுள்ள புத்திசாலிப் பெற்றோர்கள்,  தாமதமின்றி அவ்வழியில் தமது குடும்பப் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும்.


குறிப்பு: முதல்வர் எம்.ஜி.ஆரின் ரூ9000 வருமான வரம்பு ஆணை செயல்பட்ட காலத்தில்,  முன்பிருந்ததை விட அதிகமாக கிராமப்புற, ஏழை, முதல் தலை முறையாகத் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் பலன் பெற்றதை , அண்ணா பல்கலைக்கழக பி.ஈ மாணவர் சேர்க்கைப் புள்ளி விபரங்கள் தெரிவித்தன. அந்த ஆணையில் குறைகள் இருந்திருப்பின், அவற்றைக் களைவதற்குப் பதிலாக, அதை ரத்து செய்தது சமூக நீதியா? என்று மனசாட்சியுள்ள சமூகநீதிப் பற்றாளர்கள் சிந்திக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------